Skip to main content

தூக்க மாத்திரை எடுப்பது மனதை பாதிக்குமா? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
DrRadhika Murugesan  - Sleeping Tablet 

எந்த பிரச்சனையுமே இல்லாமல் தூக்கம் வராமல் இருப்பது பிரைமரி இன்சோம்னியா என்கிறோம். சிலருக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டே இருந்து அதற்கு பழகி தூங்க வேண்டுமானால் தூக்க மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்ற நிலை உருவாவதும், அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும், அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும் தூக்கம் வராமல் இருக்கும். 

சில மனநோய்கள் உருவாவதற்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக இருக்கும். மனச்சோர்வு, மனப்பதட்டம், உளவியல் சார்ந்த நோய்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதன் ஆரம்பத்தில் தூக்கமின்மை சிக்கலில் இருந்து தான் உருவாகும். தூக்கமில்லாமல் இருந்தாலும் மன நோய் உருவாகும், தீவிரமான மன நோய் உருவாகப் போகிறதென்றாலும் தூக்கம் வராமலும் இருக்கும். 

தூங்கி எழுந்ததுமே புத்துணர்ச்சியான மனநிலை இல்லை என்றால் நீங்கள் ஒழுங்காக தூங்கவில்லை என்று அர்த்தமாகும். அப்படியெனில் நீங்கள் சில வாழ்வியல் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியினை மாலை நேரங்களில் செய்யக்கூடாது, இரவு நேரங்களில் காபி குடிக்க கூடாது, ஆல்கஹால் சுத்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வன்முறைக் காட்சிகள் நிறைந்த சினிமா பார்ப்பதை தவிர்ப்பது, பேய் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தால் அது போன்ற படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது

மாலையில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, படுக்கை அறையினை, படுக்கையை தூங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், பெட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது, புத்தகங்கள் படிக்க கூடாது, பெட்டிற்கு அருகே சென்றாலே தூங்க வேண்டும் என்கிற அளவிற்கு மனதிற்கு பயிற்சி அளிக்க வேண்டும்

தூக்கமாத்திரையை போட்டுத்தான் தூங்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துவர்கள் பரிந்துரையின் பேரில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்ளுதல் வேறு, நீங்களாகவே மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்கமாத்திரை எடுத்துக்கொள்ளுதல் மிக மிக தவறாகும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மெடிக்கலும் தூக்க மாத்திரை கொடுக்க கூடாது என்பது ரூல்ஸ், ஆனால் சிலர் பணம் வாங்கி கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.

ஓரிரு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருப்பது என்பது சாதாரண நிலைதான். பத்து நாட்களுக்கு மேல் இந்த பிரச்சனை தொடர்ந்தால் மனநல மருத்துவரை கண்டிப்பாக அணுகுங்கள், அவர்கள் உங்களின் பிரச்சனையை கண்டறிந்து உங்களுக்கு மருந்துகளும், சில பயிற்சிகளும் பரிந்துரைப்பார்கள். நீங்களாகவே தூக்கமாத்திரை எடுத்துக் கொள்வதால் அதற்கு உங்கள் மனமும், உடலும் கண்டிப்பாக பாதிப்படையும்.