Skip to main content

நூறுநாள் வேலையில் மூதாட்டி உயிரிழப்பு... நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் செரியலூர் இனாம் ஊராட்சியில் உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவரது மனைவி சிவயோகம் (வயது 65). இன்று நூறு நாள் வேலை திட்டத்தில் கரம்பக்காடு இனாம் கிராமத்தில் உள்ள ஆலாயக்குளம் சீரமைப்புப் பணிக்கு வந்து, தனது பதிவு அட்டையை தளமேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு பணி செய்துகொண்டிருந்த போதே மயங்கிவிழுந்துள்ளார். 

 

அங்கு நின்ற பெண்கள் சத்தம் போட்டு சிவயோகம் மகனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மகன் வந்து மயங்கிக் கிடந்த தாயாரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று பரிசோதித்த போது, சிவயோகம் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சடலத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்துவிட்டனர். 

 

இந்த நிலையில், நூறு நாள் பணியின் போது மரணமடைந்த சிவயோகம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சாலை மறியலுக்கு அவரது உறவினர்களும் பொது மக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன், கீரமங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் வந்து பொதுமக்களின் கோரிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் பேசினார். "பணியின் போது இறந்த மூதாட்டிக்கு உடனடியாக ஒன்றிய அலுவலகம் மூலம் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், முதலமைச்சர் நிவாரணம் கிடைக்க வருவாய்த்துறை மூலம் கோப்புகள் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தார்.
 

cnc

 

மேலும் சிவயோகத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை என்பதால் முதல்வர் பொது நிவாரணத்தைத் தடை செய்யாமல் வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு திரண்டிருந்த பொதுமக்கள் களைந்துசென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்