Skip to main content

'விபத்து, ஆயுள்காப்பீடு திட்டம்' - இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interim budget deputy cm opaneerselvam announced peoples

 

2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், "2021 ஜனவரி வரை மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு ரூபாய் 3,717.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 229.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூபாய் 13,967.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூபாய் 2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 1,953.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூபாய் 3,140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக கைத்தறித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 1,224.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக ரூபாய் 1,932.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

எதிர்பார்க்கப்பட்டதை விட 17.64% வரி வருவாய் குறைந்துள்ளது. ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் அரசு ஊழியரின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். ஒட்டுமொத்த காப்பீடு ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைக்களுக்கான காப்பீடு ரூபாய் 7.5 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாக உயர்த்தப்படும். ஜெயலலிதா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி. - யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது அரசு. புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.

 

குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூபாய் 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூபாய் 4 லட்சம், நிரந்தர இயலாமைக்கு ரூபாய் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். புதிய திட்டத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். படிப்படியாக அமைய உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்கிற்காக ரூபாய் 144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் சலுகைகளுடன் நீட்டிக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் தேயிலை தொழில் குழுமம், விருதுநகரில் ஜவுளித்தொழில் குழுமம் உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் நிதிப் பற்றாக்குறைக்கு நிதி வழங்கும் வகையில் ரூபாய் 84,686.75 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கடன் அளவான ரூபாய் 85,454 கோடியில், நிகர கடனான ரூபாய் 84,686.75 கோடி திரட்டப்படும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்