Skip to main content

‘முதலில் திருமணத்திற்கு சம்மதம்... பின்னர் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்’-தாயின் செயலால் ஸ்தம்பித்த மகன்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

son stunned by mother’s action

 

இந்திய திருமணம் சட்டத்தின் படி ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் பூா்த்தியடைந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இதை மீறி தற்போது சிறு வயதில் திருமணங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. அதனை தகவல்களின் அடிப்படையில் தடுக்கும் விதமாக சமூக நலத்துறையும், காவல் துறையும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 22 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் மங்கலகுன்று பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய மணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மரையின் படித்துள்ளார். இவருக்கும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய நித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் தொடர்ந்து காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இந்த விசயம் இருவருடைய வீட்டிற்கு தெரிய வரவே இருவரையும் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஓடிப் போய் திருமணம் செய்வதில் முடிவாக இருந்துள்ளனர். 

 

இதற்கிடையில் நித்யாவின் பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததோடு மணியின் பெற்றோரிடமும் பேசியுள்ளனர். இதற்கு மணியின் தாயார் முழுமையாக விருப்பம் தெரிவிக்காமல் அரை குறை மனதுடன் சம்மதித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. குளச்சல் போலீஸ் நிலையம் அருகில் திருமணம் மண்டபமும் புக் செய்து நேற்று (29-ம்தேதி) திருமணம் நடக்க இருந்ததையொட்டி திருமண மண்டபமும் குலை வாழை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் காலையில் திருமண மண்டபத்துக்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தனர் மணி மற்றும் அவரது உறவினா்களும். அந்த நேரத்தில் சட்டென்று சமூக நலத்துறை அதிகாரிகளும் போலீசாரும் மணியின் வீட்டுக்குள் நுழைந்தனர். மணிக்கு இன்னும் 21 வயது நிரம்பாததால் அவருக்கு திருமணம் செய்ய முடியாது என்றும் இது சம்பந்தமாக மணியின் தாயார் புகார் கொடுத்துள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பின்னர் மணமக்களாக இருந்த இருவர் மற்றும் இருவரது பெற்றோர்களையும் நாகர்கோவிலில் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் மணிக்கு 21 வயது நிரம்பும் வரை திருமணம் செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினார்கள். அதே போல் திருமண வயது நிரம்பாத ஒருவருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வந்த பெண்ணின் பெற்றோர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனா். மகனின் காதல் திருமணத்தை சம்மதம் தெரிவிப்பது போல் சம்மதித்து கடைசியில் திட்டமிட்டே தாயார் நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 


 

சார்ந்த செய்திகள்