Skip to main content

கிரேன் சரிந்து விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Crane collapse incident Chief Minister Relief Notice

 

மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நேற்று கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வி.எஸ்.எஸ். என்ற கட்டுமான நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர் உயிரிழந்த சந்தோஷ் என்பவருக்கு ரூபி என்ற மனைவியும், ஆத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச் சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

 

Crane collapse incident Chief Minister Relief Notice

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லத் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ். மஸ்தான் மேற்கொண்டார்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்