Skip to main content

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அதிரடி திருப்பம்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

covai car issue nia

 

என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில்  இருந்து வரும் கோவை கார்  வெடிப்பு சம்பவத்தில், நாளுக்கு நாள் ஏற்படும் அதிரடி திருப்பங்களால்  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி  அதிகாலை கோவை மாவட்டம் உக்கடம் அருகே சென்று கொண்டிருந்த கார் வெடித்த  விவகாரம்  நாடு  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில் 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

 

இதையடுத்து கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் சோதனைகளை  நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள்  கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமின்றி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என ஒரு பட்டியலே வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த உமர் பாரூக் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். அவரை நோட்டமிட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கடந்த மாதம் உமர் பாரூக்கிடம் விசாரணை செய்தனர். வீட்டிலிருந்து சில குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 7 ஆம் தேதியன்று உமர் பாரூக், தௌபிக், பெரோஸ்கான் ஆகிய 3 பேரை அவர்களது வீட்டில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

இவர்கள் மூவரும் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முபினுக்கு உதவியதாக என்.ஐ.ஏ வட்டாரத்திலிருந்து  தகவல் கசிந்துள்ளது. இச்செய்தி தற்போது கோவை மாநகரில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்