Skip to main content

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இளம் பிஞ்சுகள் உயிரிழப்பு! சோகத்தில் குடும்பத்தினர்கள் மற்றும் ஊர்மக்கள்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

4 young child passed in a row in one day! Family members and mourners in grief!

 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அருகே அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறு குழந்தைகள் ஊரணியில் மூழ்கி பலியானது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் பக்கமுள்ள சண்முகாபுரத்தைச் சேர்ந்தக் கூலித் தொழிலாளியான தர்மராஜின் இரண்டாவது மகன் புவன் (5), இவரது தம்பி கண்ணனின் மகன் இஷாந்த் (5), அதே தெருவைச் சேர்ந்த பக்கத்து வீட்டிலிருக்கும் இவரது உறவினரான பூபாலனின் மகள் சண்முகப் பிரியா (5) இவர்கள் மூவரும் உறவினர்கள் என்பதால் ஒன்றாக எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

 

நேற்று (02.07.2021) மதியம் அவர்களது வீட்டினருகேயுள்ள பட்டர்குளத்தில் விளையாடச் சென்றனர். அந்தக் குளத்தில் தற்போது நீர் நிறைந்திருந்தது. அவர்கள் மூவரும் அந்தக் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்ததை மற்றவர்கள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்தப் பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மதியம் சாப்பிடுவதற்காக அந்தக் குளத்தில் கை கால் கழுவுவதற்கு வந்திருக்கிறார். அந்த சமயம் சிறுவன் புவன் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு கூச்சலிட்டவாரு அவனை மீட்டார். இதையறிந்த உறவினர்கள் உடனே வந்து இஷாந்த், சண்முக பிரியாவைத் தேடியபோது அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் சற்றுத் தொலைவில் மிதந்த அவர்கள் இருவரையும் மீட்டனர். தொடர்ந்து மூன்று பேரையும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

 

அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர் மூன்று பேரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதையறிந்த உறவினார்கள் கதறி அழுதனர். இவர்களில் இஷாந்த், அவரது பெற்றோருக்குத் திருமணமாகி 6 வருடம் கழித்துப் பிறந்தவன் என்பதால் அவன்மீது பாசத்தைக் கொட்டி வளர்த்திருக்கிறார்கள். அதே சமயம் ஆலங்குளம் அருகேயுள்ள மாறந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு மதன் (7), ராகுல் (5) என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டில் மாடு வளர்த்துவருகின்றனர். சிறுவர்கள் இருவரும் தாத்தா ராமையா, பாட்டி கணபதியம்மாளுடன் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு மாடு மேய்க்கச் செல்வது அன்றாட வழக்கம். நேற்றைய தினம் ராமையா தென்காசி சென்றுவிட்டதால் பாட்டியுடன் சிறுவர்கள் மாடு மேய்க்கச் சென்றுள்ளனர்.

 

அந்த சமயம் ஊருக்கு வெளியே கோவில் பக்கமுள்ள ஊரணியில் அவர்களின் மாடு ஒன்று தண்ணீர் குடிக்கச் சென்றிருக்கிறது. அதைக் கண்ட சிறுவன் மதன், மாட்டைப்பிடிக்க முயன்றிருக்கிறான். அதுசமயம் எப்படியோ தவறி ஊரணியில் விழுந்திருக்கிறான். இதைக் கண்ட அவனது தம்பி ராகுல் பாட்டியிடம் கூறியிருக்கிறார். பாட்டி கணபதியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மதன் அங்குள்ள அகழியில் சிக்கியதால் வெளியே வரமுடியாமல் தண்ணீரிலேயே மூழ்கி உயிரிழந்திருக்கிறான். இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு இறுதிச் சடங்கு நடத்த முயன்றுள்ளனர்.

 

இந்த இரண்டு சம்பவத்தையும் அறிந்த ஆலங்குளம் நகர டி.எஸ்.பி. பொன்னிவளவன், இன்ஸ்பெக்டரான சுரேஷ், எஸ்.ஐ.க்கள் பரத் லிங்கம், ராஜேஸ்வரன் ஆகியோர் உடல்களைக் கைப்பற்றி தென்காசி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குகள் பதிவுசெய்த போலீசார், மேல் விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து இளம் பிஞ்சுகளான 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஆலங்குளத்தையும் சுற்றுப்புற கிராமங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்