Skip to main content

“எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

"I thank the opposition parties" Chief Minister M.K.Stalin

 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதன்படி 20/04/2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட மானியக் கோரிக்கைகள் மற்றும் அவற்றின் மீது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் மீதான விவாதத்திற்கு பதில் உரை மற்றும் வாக்கெடுப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை கொடுத்து உரையாற்றினார்.

 

அப்போது பேசிய அவர், “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விழுந்து கிடக்கும் தமிழ்நாடு எழுந்து நிற்கும் என்று நினைத்தார்கள்; இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக தி.மு.க.தான் ஆளவேண்டும் என மக்கள் எண்ணும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம்; ஆட்சிக்கு வரும்போது மிகவும் மோசமான நிதி நெருக்கடி இருந்தபோதிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளோம்; விலையில்லா பேருந்து பயண திட்டம் மூலம் இதுவரை 265 கோடி விலையில்லா பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் 1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெற உள்ளனர்; தமிழ்நாடு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில், தி.மு.க. அரசு ஏதாவது ஒரு உதவியை செய்து வருகிறது; மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக இந்த அரசு இருக்கிறது; தி.மு.க. ஆட்சி பற்றி யார் எது கூறினாலும் மக்கள் மனதை மாற்ற முடியவில்லை. இது ஸ்டாலினின் அரசோ, தி.மு.க. அரசோ இல்லை; இது ஒரு இனத்தின் அரசு, கொள்கையின் அரசு, 8 கோடி மக்களின் அரசு; இந்தியாவையே ஈர்க்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது.

 

சமூகநீதி, சமத்துவம், சம தர்மம், சகோதரத்துவம், மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி, ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிடவியல் கோட்பாடு என்பது எனது சாசனம்; பெரியாரின் சுயமரியாதை, சம தர்மமும், அண்ணாவின் தமிழ்நாடு உரிமை முழக்கங்களும், கலைஞரின் சமூகநீதி செயல்பாடுகளும் என்னுள் இருந்து இயக்கி கொண்டிருக்கிறது; ஒரு அரசானது மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் எதிர்க்கட்சி கடமை தவறிவிட்டது. இருந்தாலும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்; குறைகளை கண்டதும் அவை திருத்தப்பட்டதே தவிர, அவற்றை மூடி மறைக்கவோ, குற்றவாளிகளை தப்பிக்கவிடவோ இல்லை; குற்றங்கள் நடந்தும் குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்று புகார் இருந்தால் சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.

 

தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று மக்கள் நன்கு அறிவார்கள்; 100 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? மக்களின் ஆசையை தூண்டி நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன; நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்; நிதி நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்