Skip to main content

கோரக்பூர் குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவரின் தற்போதைய நிலை தெரியுமா?

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
Gorakhpur

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் அடுத்த ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட 100 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அவர்கள் அனைவருமே அந்த மருத்துவமனையில் உள்ள மூளைவீக்க நோயாளிகளுக்கான பிரிவில்  சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதுதான் துயரம். 

 

நீண்ட நாட்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தொகையை நிலுவையில் வைத்திருந்ததால், புஷ்பா சேல்ஸ் எனும் நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியதுதான் அந்த மாபெரும் துயரத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் தனது பணிநேரம் இல்லை என்றாலும், இரவு முழுவதும் அலைந்துதிரிந்து கிடைத்த சிலிண்டர்களை வாங்கிவந்து, முடிந்தமட்டும் குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சித்தார் மருத்துவர் கஃபீல்கான். 

 

Gorakhpur

 

இந்தத் துயரச் சம்பவத்தில் எப்படியேனும் குழந்தைகளைக் காப்பாற்றிவிடலாம் என நம்பி முயற்சித்த கஃபீல்கான் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விரைவாக பரவின. இதையறிந்த மாநில அரசு அவரைப் பாராட்டாமல், மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் வைத்தே மிரட்டல் விடுத்தது. ‘சிலிண்டர்களை வெளியில் இருந்து வாங்கிவந்தால் நீ ஹீரோ ஆகிவிடுவாயா? எப்படி ஹீரோ ஆகிறாய் என்று நான் பார்க்கிறேன்’ என உ.பி. முதல்வர் யோகி சொன்னபோதே ஆடிப்போயிருந்தார் கஃபீல்கான். அந்த மாதமே அவர்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். 

 

அவரது கைதுகுறித்து கோரக்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் ஒருவர், ‘மனசாட்சிக்கு உட்படும் ஒரு மருத்துவர் என்ன செய்வாரோ.. அதையே கஃபீல்கான் செய்தார். ஆனால், அவர் செய்யாத தவறுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 

Gorakhpur

 

தற்போது கஃபீல்கான் சிறையில்தான் இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு, பலமுறை கோரியும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நேரடித் தலையீடே கஃபீல்கானின் இந்த நிலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரை நேரில் சந்திக்க எத்தனையோ பேர் முயற்சிசெய்தும், ‘உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவு’ உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி அவர் மற்றவர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்ற தகவல்களே இப்போதைக்கு நமக்குக் கிடைத்துள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி ராமர் கோயில் திறப்பு; கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட உ.பி. அரசு! 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Inauguration of Ayodhya Ram Temple; U.P.  Government ordered educational institutions.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்று ராமர் கோயில் திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், 18 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல் பலகைகளை வைக்க வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“அயோத்தி ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியத்தின் தொடக்கம்” - யோகி ஆதித்யநாத்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 Yogi Adityanath says The Ram temple in Ayodhya is the beginning of Rama's kingdom

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சத்தீஸ்கர் மாநிலம், கோன்டா நகரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஆட்சியில் ஜாதி, மத அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் இருப்பது தான் ‘ராம ராஜ்ஜியம்’. அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களிடம் போய் சேரும். அனைவருக்கு நாட்டின் வளர்ச்சியில் இருந்து உரிய பங்கு கிடைக்கும். 

 

பாதுகாப்பு, வசதிகள் மற்றும் வளங்களின் உரிமைகள் ஆகியவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். இது தான் ராமராஜ்ஜியம். உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும், இந்த கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அயோத்தியில் உருவான ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியம் தொடங்கப்பட்டதற்கான அறிகுறி. இந்த  விஷயத்தில் உத்தர பிரதேச மக்களை விட சத்தீஸ்கர் மக்கள் தான் அதிகளவில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் சத்தீஸ்கர் மாநிலம் தான் ராமரின் தாய்வழி இடம்

 

அதே நேரத்தில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட விடாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இப்போது கூட சத்தீஸ்கரில் ‘லவ் ஜிகாத்’ மதமாற்றம் ஆகியவற்றை ஆதரிக்கும் நபராக முதல்வர் பூபேஷ் பாகேல் இருக்கிறார். பா.ஜ.க சத்தீஸ்கரில் ஆட்சி அமைந்தால், லவ் ஜிகாத், மாடுகளை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.