Skip to main content

‘பைத்தியம்’ என்று திட்டியதால் ஆத்திரம்; தாயை கொடூரமாகக் கொலை செய்த மகன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
lost her lives his mother for Rage at being called crazy in delhi

டெல்லி அருகே குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரானுஷா (59). இவருக்கு கணவர் மற்றும் மகன் அத்ரிஷ் (27) ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். மகன் அத்ரிஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட அத்ரிஷ், தனது பெற்றோரிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (10-03-24) இரவு ரானுஷாவுக்கும், அத்ரிஷுக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அத்ரிஷ், அங்கு இருந்த கத்தியை வைத்து தனது தாய் ரானுஷாவை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அத்ரிஷ், தனது வீட்டுக்கும் தீ வைத்துள்ளார். இதனைக் கண்டு பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வீட்டுக் கதவை உடைத்து ரானுஷாவை மீட்டனர்.

கத்திக்குத்து காயம் மற்றும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரானுஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அத்ரிஷ் அடிக்கடி தாயுடன் சண்டைபோட்டு அவரைத் தாக்கி வந்துள்ளார்.

அந்த வகையில், நேற்று நடந்த வாக்குவாதத்தின் போது ‘பைத்தியம்’ என்று ரானுஷா அத்ரிஷை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அத்ரிஷ், தனது தாயை கத்தியால் கொலை செய்ததும், பின்னர் வீட்டுக்குத் தீ வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, தனது தாயை கொலை செய்த அத்ரிஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்