Skip to main content

துரை வையாபுரி டூ துரை வைகோ; பிசினஸ்மேன் பொலிடிசியன் ஆன கதை!

Published on 26/03/2024 | Edited on 27/03/2024
 The story of a businessman becoming a politician!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து விட்டன. அந்த வகையில் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக கூட்டணியில் பெற்றநிலையில், இம்முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே கிடைத்தது. இந்தமுறை காங்கிரஸ் வசமிருந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி, மதிமுகவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழுமனதுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி ஒப்பந்தத்தில் போட்டியிட கையெழுத்திட்டார். 

இதையடுத்து, யார் திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடுவார்கள்? என்ற கேள்வி எழுந்த நிலையில், அக்கட்சியினர் வேட்பாளராக துரை வைகோ ஒருமனதாக களமிறங்கியுள்ளார். துரை வையாபுரியாக இருந்தவர், வாரிசு அரசியலை விரும்பாத வைகோவின் கட்சியிலே வேட்பாளராக வளர, பல தடைகளை கடந்து இந்த உச்சத்தை எட்டியுள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சர்கள். வைகோ - ரோணுகாதேவி தம்பதியின் மகன் துரை வைகோ. கல்லூரி படிப்பு வரை துரை வையாபுரிக்கு அரசியலில் ஈர்ப்பு கிடையாது. கோவையில் கல்லூரி முடித்த பிறகும், அவர் தந்தையின் அரசியல் பாதையின் மீது அதிகம் ஈடுபாடு வாலிப பருவத்தில் இல்லாத காரணத்தால், தனியாக பிசினஸ் செய்து வந்தார். அதன்பிறகு, அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட, ஒருபுறம் மதிமுக கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, மாநில நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது என கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகளை தவிர பொதுவில் வெளிக்காட்டியது இல்லை.

பொடா வழக்கில் வைகோ கைதான சமயத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை கட்சி பணிகளை கவனித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு, கட்சித் தொடங்கிய வைகோ, தொண்டர்கள் மத்தியில் என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள் என பேசிவந்தார். இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வராமலே, கட்சிக்காக பல பணிகளை செய்து வரும் துரை வையாபுரி கட்சியில் இணைய வேண்டும் என்றும், கட்சிப் பணியிலும் களப் பணியிலும் ஈடுபடுவரை தடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை பரிசீலனை செய்த வைகோ தொண்டர்களின் விருப்பத்தை உணராமல், கட்சிக்காக பணியாற்றும் ஒருவரை தடுக்கக் கூடாது என முடிவெடுத்தார். ஆனால், எளிதாக தனது மகனிற்கு பதவி கொடுக்க வைகோ விரும்பவில்லை. 

மதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 104 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் வாய்ப்பு வழங்க கூடாது என்றனர். இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார். மதிமுக கூட்டத்தில், இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் தியாக தழும்புகளை ஏற்று மிசா, தடா போன்ற அடக்குமுறை சட்டங்களை சந்தித்து குடும்ப சுகபோகங்களை மறந்து தமிழினம், தமிழ் மொழிக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் திராவிட இயக்கத்து போர்வாள் வைகோ அவர்களின் புதல்வர் துரை வைகோ அவர்களை உரிய இடத்தில் வைத்து மதிமுகவில் பணியாற்றிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் கட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பதவி வந்தபிறகும் விடாமல் துரை வையாபுரி முழுவீச்சில் கட்சிப்பணியிலும் களப்பணியிலும் ஈடுபட்டார். 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்கள் என அனைத்திலும் அவர் பங்கேற்றார். இதனிடையே குறுங்காடுகள் அமைப்பது போன்ற பணிகளையும் தேர்ந்தெடுத்து சூழலியல் ஆர்வலராகவும் துரை வையாபுரி வலம் வந்தார். இத்தனை பணிகளை செய்துதான் துரை வையாபுரி அரசியலில் துரை வைகோவாக மாறியதாக மதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான், துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மகன் போட்டியிடுவது பற்றிய பேசிய வைகோ, ''தொண்டர்களை வசீகரிக்கக்கூடிய திறமை துரை வைகோவிற்கு இருக்கிறது. மனிதாபிமானம் இருக்கிறது. பொதுவாழ்வில் வெற்றிபெற தேவையான அனைத்து குணமும் அவருக்கு இருக்கிறது. எனவே துரை வைகோ வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது..'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

திருச்சி நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்களில் செல்வராஜ், அடைக்கலராஜ், குமார் மூவர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட வைகோவின் மகன் துரை வைகோவும் வெற்றி பெறுவார் என மதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திமுகவைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் மதிமுகவின் எல்.கணேசன் வெற்றிபெற்றிருப்பதால் அதை காரணமாக கூறி திருச்சி தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுக கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அரசியலில் முதன் முறையாக காலடி எடுத்து வைக்கும் துரை வைகோ பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து பணிகளையும் அவரது கட்சியினர் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், மதிமுகவினர் தேர்தல் பணிகளில் அதிரடி காட்டத் தொடங்கியுள்ளனர்.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.