Skip to main content

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
water

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பவானி சாகர் அணைக்கு 50 அடிக்கு கீழ் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி மற்றும் பவானி சாகர் அணை பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை பவானி சாகர் அணைக்கு 1, 316 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.36 அடியாக உள்ளது.  கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.12 அடியாக குறைந்துள்ளது. 33.45 அடி கொள்ளளவு கொண்ட வறட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.03 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணை நீர்மட்டம் கடந்த ஒன்றரை மாதமாக முற்றிலும் வற்றிப் போய் உள்ளது.

சார்ந்த செய்திகள்