பெண் பத்திரிகையாளர் மீது ஆபாசமாக அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைத்தளங்களில் இயங்கிவரும் பெண் ஊடகவியலாளர்கள் மீது ஆபாசமான பதிவுகள் மூலம் தாக்குதல் நடைபெறுவது தொடர் நிகழ்வாக உள்ளது. சமீபத்தில் சசிகுமார் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபல பெண் பத்திரிகையாளரின் புகைப்படத்தை அவதூறாகச் சித்தரித்துப் பதிவிட்டிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பத்திரிகையாளர், அந்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து 14 முறை புகார்கள் கொடுக்கப்பட்டும் தற்போதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.