நாகை அருகே 10 டன் அளவிலான ரேசன் அரிசியை மர்ம நபர்கள் ஆற்றில் கொட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த சின்னத்தும்பூரில் உள்ள மறவானற்றில் குவியலாக ரேசன் அரிசி கொட்டி கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் இரண்டு டிராக்டரில் வந்த மர்ம நபர்கள், ரேசன் அரிசியை கொட்டி சென்றதாக தெரியவந்துள்ளது. சுமார் 10 டன் அளவிலான ரேசன் அரிசி, எந்தப் பகுதி ரேசன் கடையில் இருந்து எடுத்து வரப்பட்டது. எடுத்துவந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.