Skip to main content

“போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் செயல்பட வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
E.P.S. Emphasis for tn govt Be alert  

சென்னையில் ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை நேற்று (16.05.2024) மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் செய்தனர். மேலும் இது தொடர்பாக நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர் சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த அரசே காரணியாக உள்ளது. போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலியல் வழக்கில் சிக்கிய காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர்; நீதிமன்றம் உத்தரவால் அதிருப்தி?

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
high court order bail to Priest of Kalikampal temple caught in case

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சினிமா மோகத்தில் சென்னை வந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல் சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அப்பெண்ணுக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்பொழுது காளிகாம்பாள் கோவில் குருக்களாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு இருவரும் அடிக்கடி பேசிப் பழகி உள்ளனர். கார்த்திக் பென்ஸ் கார் ஒன்று வைத்திருந்த நிலையில் அந்தக் காரில் அவரை ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தீர்த்தம் என எதையோ குடிக்க கொடுக்க, அவரும் குடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தான் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டது அறிந்து அப்பெண் அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பயந்த அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் செல்போனை அப்பெண் ஆய்வு செய்தபோது பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். தன்னுடைய படங்களையும் அர்ச்சகர் கார்த்திக் பல நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளது மேலும் அப்பெண்ணுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் அர்ச்சகர் கார்த்திக் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை கொடைக்கானலில் வைத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி கைது செய்துள்ளனர். 

இதனிடையே, கோவில் அர்ச்சகரான கார்த்திக் முனுசாமி தனக்கு ஜாமீன் வேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தை ஜாமீன் வழங்கியும், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு வாரம் கார்த்திக் முனுசாமி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் வழக்கில் சிக்கிய கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட பெண் மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் ஜாமீன் வழங்கியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அதிவேகமாக வந்த சொகுசு கார்; சாலையோரம் படுத்துறங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
happened to the young man lying on the side of the road in chennai

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில், அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் படுத்திருந்த சூர்யா மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காரை மறிக்க முயன்ற போது காரில் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காருடன் தப்பி சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த இளைஞர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.