Skip to main content

‘கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துக் கழகம் தகவல்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
'Additional Special Bus Operation' - Transport Corporation Information

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாளை மறுநாளான வெள்ளிக் கிழமை (17/05/2024), சனிக்கிழமை (18/05/2024) மற்றும் ஞாயிற்றுக் கிழமை (19/05/2024) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று 555 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 645 பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 280 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று 195 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

'Additional Special Bus Operation' - Transport Corporation Information

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமையன்று 555 பேருந்துகளும் சனிக்கிழமையன்று 645 பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 280 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயம் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 12 ஆயிரத்து 96 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7 ஆயிரத்து 494 பயணிகளும் ஞாயிற்றுக் கிழமை 10 ஆயிரத்து 556 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்