“ஜெயலலிதாவும் பத்திரிகைகளும்” - நக்கீரனுக்கு ஆதரவாக ஆங்கில இதழ்!

Vidura magazine's article on Jayalalithaa's repression

நக்கீரனின் முதல் இதழ் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் வெளியானதிலிருந்தே அதில் வெளியான உண்மைகளுக்காகவும், ஊழல் அரசுகளுக்கு எதிரான கட்டுரைகளுக்காகவும் பல அடக்குமுறைகளையும், மிரட்டல்களையும் சந்தித்துள்ளது. குறிப்பாக, 1991 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றிய பல்வேறு உண்மைகள் நக்கீரனால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அதற்காக நக்கீரன்மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் ஏராளம். ஊடகங்கள் மீதான ஜெ. அரசின் தாக்குதல்கள் குறித்து பிரபல ஆங்கில இதழான ‘விதுரா’ கட்டுரை வெளியிட்டது. அதன் சில பகுதிகள் 15.10.1992 தேதியிட்ட நக்கீரனிலும் வெளியிடப்பட்டன.

Vidura magazine's article on Jayalalithaa's repression

‘விதுரா’ ஆங்கில இதழின் படப்பிடிப்பு.

விதுரா. ‘இண்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிட்யூட்’ என்றபெயரில் ஜெனீவாவைத் தலைமை அலுவலகமாகக் கொண்ட பத்திரிகை. டெல்லியிலிருந்து வெளிவரும் ‘விதுரா’ உலகம் முழுவதும் செல்லக்கூடியது. இந்திய நாட்டின் பத்திரிகைகள் பற்றி வெளியுலகுக்கு செய்திகள் தருவதே இதன் பணி.

தமிழகத்தில் பத்திரிகைகள் மேல் ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டிருக்கும் முடிவுக்கு வராத போர் பற்றி ‘‘ஜெயலலிதாவும் பத்திரிகைகளும்’’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று ‘விதுரா’ வெளியிட்டிருக்கிறது. நக்கீரனின் அட்டைப்படமான ‘ஹிட்லர்’ ஸ்டைலில் ஜெயலலிதா படத்தையும் வெளியிட்டு நக்கீரனை உலக அளவில் கொண்டு போயுள்ளது. இக்கட்டுரையை எழுதியவர் ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை சாம் ராஜப்பா. விதுரா ஆசிரியர் எஸ்.நிகார் சிங் அவர்களுக்கும் ராஜப்பா அவர்களுக்கும் நன்றி.

கட்டுரையின் சில பகுதிகள்;

நக்கீரன் சிறப்பாக புலனாய்வு செய்தியை தாங்கிவரும் அரசியல் வார இதழ். இது (ஜெயலலிதா) மற்றுமொரு குவளையில் அகப்பட்ட மீன். நக்கீரன் 1988 இல் அதன் துவக்க காலத்திலிருந்தே கவர்னர் பி.சி.அலெக்ஸ் சாண்டர் ஆட்சியிலோ தி.மு.க. முத்துவேல் கருணாநிதி ஆட்சியிலோ அல்லது தற்போதைய செல்வி. ஜெயலலிதா ஆட்சியிலும் கூட ஆட்சியாளர்களை மண்டியிட்டு வணங்கியதில்லை.

முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மாற்றுக் கருத்துகளை பிரசுரிப்பதற்கு அதிக விலையினை (அடக்கு முறைகளை சந்தித்து) கொடுத்து வருகிறது.

நக்கீரன் ஆசிரியரும் பதிப்பாளருமான ஆர்.ஆர்.கோபால் சொல்கிறார்;

நாங்கள் வழக்கமாக ஒரு டஜன் வழக்குகளுக்குக் குறையாமல் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.’ தற்போது இவருக்கு எதிராக இருபது வழக்குகள் இருக்கின்றனவாம். இது ஒன்றும்ரகசியப்பத்திரிகை இல்லை என்றாலும் கூட ஆசிரியரும் தலைமைச் செய்தியாளர் காமராஜும் மாநிலஅரசின் போலீஸ் விசாரணைகளுக்குப்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை சாயங்காலமும் தலைமறைவாகிவிடுவது வாடிக்கையாகி விட்டது. திங்கட்கிழமை காலையில்தான் வெளியே வருகிறார்கள்.

காரணம்? மாநிலஅரசின் காவல்துறை தனக்குத் தொந்தரவு தருவதாகக் கருதுபவர்களை வெள்ளிக்கிழமை இரவுதான் கைதுசெய்வது வழக்கம். இதனால், கைது செய்யப்படுபவர்கள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திங்கட்கிழமை காலைவரை அவஸ்தைப்படட்டுமே என்பதுதான் அவர்கள் எண்ணம்.

நக்கீரன் அலுவலகத்துக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை. இன்வெஸ்டிகேட்டிவ் நிருபர் குழு கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருக்கும் முக்கியமான ஆவணங்களையும் சாட்சியங்களையும் பத்திரமாக பாதுகாத்து வைக்க வழியில்லாமல் போய் விட்டது; யாரோ! சிலபேர் அலுவலக வளாகத்துக்குள் குண்டு வைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு போலீஸ் அடிக்கடி ‘ரெய்ட்’ செய்து வருகிறது; ஆனால், அவர்கள் தேடுவதென்னவோ பத்திரிகையின் சான்றாதாரங்களையும் ஆவணங்களையும் தானே தவிர வேறொன்றுமில்லை.

ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அவரின் தவறான செயல்பாடுகள் மீது ஆவணச்சான்றுகளுடன் ஒரு கட்டுரை வெளியிட்டது நக்கீரன். உடனடியாக முதல்வர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் கேட்டு மானநஷ்டவழக்கு தொடர்ந்தார்; ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அது கிடப்பிலேயே போடப்பட்டு விட்டது; வழக்கு பரண் ஏற்றப்பட்டு விட்டது. முதல்வர் இந்த வழக்கில் அடுத்து எதுவும் தொடர்ந்து செயல்படாமலேயே இருந்து விட்டார். அதற்குப்பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருடைய தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்ற செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

இதையொட்டி நக்கீரன் கோபாலும் பிரதமநிருபர் காமராஜும் வெள்ளிக்கிழமை இரவில் கைதுசெய்யப்பட்டார்கள். செவ்வாய்க்கிழமைதான் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டார்கள். ‘‘அரசியல் பத்திரிகைகளை அச்சடித்து தரக்கூடாது’’ என்று அச்சக உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். அநேகம் பேர் இப்படி போர்டே மாட்டி வைத்திருக்கிறார்கள்; ‘‘அரசியல் பத்திரிகைகள் அச்சுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’’.

ஒரு தைரியமான ஆத்மா ஆர்.கணேசன்.

நக்கீரன் அச்சடித்துக் கொண்டிருந்தவர். ஏப்ரல் பத்தாம்தேதி கைது செய்யப்பட்டார். பத்துநாள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். மேலும் போலீசாரின் ஹிம்சைக்கும் சித்திரவதைக்கும் உள்ளானார். மிக மோசமான நிலையில் ஏப்ரல் இருபதாம் தேதி விடுதலை செய்யப்பட்டார். நக்கீரன் அலுவலகம் வந்து கொண்டிருக்கும்போதே சோர்ந்து மயங்கி விழுந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஒரு வாரத்தில் அநியாயமாய் இறந்து போனார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி வாக்கில் நீதிமன்றங்கள் கிறிஸ்துமஸ் விடுப்பில் இருந்த சமயம் நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் மின்வரத்து துண்டிக்கப்பட்டது. சட்டப்படி உடனே எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் நீதிமன்ற ஆணை மூலம் மீண்டும் மின் வசதியைப் பெற்றார் ஆசிரியர் கோபால். நக்கீரனை மௌனப்படுத்த முடியாத ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர்களை ‘‘நக்கீரனைப் படிக்கவேண்டாம்’’ என்று தடை விதித்திருக்கிறார். நக்கீரன் விற்பனை இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படவில்லை. பத்திரிகை ஏஜண்டுகளும் புத்தக விற்பனையாளர்களும் ‘‘நக்கீரன் பத்திரிகையை விற்பனை செய்யக் கூடாது என்றும் கடைகளில் தொங்க விடக் கூடாது’’ என்றும் மிரட்டப்பட்டுள்ளனர். இறுதியாக அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நக்கீரன் பத்திரிகைகளை ‘‘தீ வைத்துக் கொளுத்தும்படி’’ ஆணையிடப்பட்டது.

எல்லா மாவட்ட அளவிலும் இந்த எரிப்பு நடைபெற்றது. மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா கடந்த ஏப்ரல் எட்டாம்தேதி கட்சி ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டினார். ‘‘நக்கீரன் அ.தி.மு.க.வினரால் தமிழ்நாடு பூராவும் தடை செய்யப்பட வேண்டும். நாம் இதை மதுரையிலும் அமல் படுத்த வேண்டும். நக்கீரன் பத்திரிகைக்கட்டுகளைக் கட்சிக்காரர்கள் யார் யார் தீ வைத்துக் கொளுத்துகிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் போலீஸ் பாதுகாப்புத் தரப்படும்’’ இது அவர் பேச்சின் ஒரு பகுதி. இந்த மனிதர்தான் ராஜ்யசபை எம்.பி.யாக உயர்த்தப்பட்டிருக்கிறார்.

அரசு இயந்திரத்தின் அதிகார துஷ்பிரயோகங்களையும் தொந்தரவுகளை யும் மீறி ஆளும்கட்சியின் அனைத்துத் தடங்கல்களையும் தாண்டி நக்கீரன் ஒரு இதழ் கூட தவறாமல் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை காலையும் அது தன் வாசகர்கள் கையில் கிடைக்கிறது. அடிக்கடி கூடும் ஆசிரியர் குழுக்கூட்டம் குண்டர்களின் தாக்குதலுக்கு ‘முன்ஜாக்கிரதையாக’ அலுவலகத்துக்கு வெளியில் நடத்தப்படுகிறது.

ஆசிரியர் கோபால் தன் மனைவியையும் குழந்தையையும் பாதுகாப்புக் கருதி தன் சொந்த கிராமத்துக்கே அனுப்பி விட்டார். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இரவில் தொலைபேசியின் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். ஒரு ‘‘நல்ல இராத்தூக்கம்’’ வேண்டுமென்றால் கூட ஹோட்டல் அறையில் தங்குகிறார் ஆசிரியர் கோபால். இந்த நிலைமைகள் இப்படியே நீடித்தால் எவ்வளவு காலத்துக்கு எதிர் நீச்சல் போட்டுப் போராடி வாழ்வது?

admk jayalalitha nakkheeran
இதையும் படியுங்கள்
Subscribe