1991 - 1996 அதிமுக ஆட்சியில் தடா சட்டம் தலைவிரித்தாடியது. 1991 தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா, இந்த தடா சட்டத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் கைது செய்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டின. மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கலாம் எனச் சந்தேகப்படும் ஒரு நபரை இந்த சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து ஒரு வருடம் வரை எந்தவிதமான விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும். பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தைத் தமிழக அரசும் அக்காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தியது.
அதில் குறிப்பாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் இந்த சட்டத்தின்கீழ் அதிகம் கைது செய்யப்பட்டனர். திராவிட கழக வக்கீல் வீரசேகரன் பத்நாபா கொலை வழக்கில் தொடர்புடைய குண்டு சாந்தனுக்குக் கடிதம் எழுதியதாகவும், அவருக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ‘தடா’கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி கே.என்.பக்தவச்சலம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் இடம்பெற்றது. இந்த வழக்கு குறித்தும் பக்தவச்சலம் தீர்ப்பு குறித்தும் 25.01.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியான கட்டுரை.
நீதி தேவன் மயக்கம்.
ஒரு பயங்கர திடீர் திருப்பம்.
நூற்றுக்கணக்கான வக்கீல்களும் ஜனநாயக சக்திகளும் ‘ஓ’வென்று குரல் எழுப்பி குதித்து தங்கள் சந்தோசங்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.
பக்தவச்சலம் வாழ்க!
விண்ணைப் பிளக்கும் கோஷங்கள்! கடந்த ஒன்பதாம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகங்களிலும் திராவிட கழக கூட்டங்களிலும் அதிர்ந்தன. யார் அந்த பக்தவச்சலம்? எதற்காக அவருக்கு வாழ்க?
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிய ‘தடா’ சட்டத்தில் கைதான வீரசேகரன் அட்வகேட்டின் வழக்கில் ஒரு திருப்புமுனையைக் கொடுத்து நீதித்துறை வரலாற்றில் தன்னைப் பதிய வைத்துக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிதான் கே.என்.பக்தவச்சலம்.
திராவிடர் கழக வக்கீல் வீரசேகரன் ‘க்யூ’ பிராஞ்ச்சால் கைது செய்யப்பட்டு சித்திக்கின் பிரத்யேகக் கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். வீரசேகரன் குண்டு சாந்தனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கைது செய்யப்பட்ட வசந்தன் வாக்குமூலத்தில் குண்டு சாந்தனுக்கு வீரசேகரன் உதவியதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் வீரசேகரன் பத்மநாபா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். எனவே இவரை முப்பது நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும்’’ என்று போலீசார் கேட்டுக் கொண்டனர். பிரத்யேகக் கோர்ட்டின் நீதிபதி சித்திக் அப்படியே அதை ஏற்றுக் கொண்டார். போலீசார் முப்பது நாட்கள்தான் கேட்டார்கள். சித்திக் 43 நாட்கள் வீரசேகரனை சிறையில் தள்ள உத்தரவிட்டார்.
வீரசேகரன் சென்னை மத்திய சிறையின் அந்த இருட்டறையில் தனது நினைவுகளின் துணையை மட்டுமே நம்பிக் கொண்டு நாட்களை நகர்த்தி விட்டார்.
‘‘பிரத்யேகக் கோர்ட் விதித்த தீர்ப்பினை உயர்நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது’’ என்று தடாச் சட்டத்தில் உள்ளது. ஆனால் ஏன் என்ற கேள்வியுடன் அதையும், அந்தப் பிரிவில் உள்ள ஒரு சில ஓட்டைகளையும் வைத்துக் கொண்டு திராவிடர் கழக வழக்கறிஞர்கள் என்.கணபதியும், துரைசாமியும் உயர்நீதிமன்றத்துக்கு வழக்கை எடுத்துச் சென்றார்கள்.
இந்த இடத்தில்தான் திருப்புமுனை வந்தது.
திருப்புமுனையை தந்த நீதிபதி பக்தவச்சலத்தின் தீர்ப்பு பலருக்கு நெஞ்சில் பால் வார்த்ததோடு மட்டுமில்லாமல் நம்பிக்கை ஒளியையும் காட்டியது.
‘‘வசந்தனிடமிருந்து கைப்பற்றிய கடிதத்தில் தேதியோ, வீரசேகரனின் கையெழுத்தோ இல்லை. கிட்டுவுக்கு வீரசேகரன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்துடன் குண்டு சாந்தனுக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கையெழுத்து ஒன்றாக இருப்பதாக கையெழுத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் வீரசேகரன்தான் இந்த கடிதத்தை எழுதினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதைக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. அப்படியே அக்கடிதத்தை அவர் எழுதியதாகக் கொண்டாலும் அவர் விடுதலைப் புலிகளின் வக்கீல் என்பதால் அதைத் தொழில் ரீதியான கடிதமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்’’ என்று தனது தீர்ப்பில் கூறியதோடு, ‘சித்திக் கோர்ட்’டின் தீர்ப்பைப் பற்றிக் கூறும்போது, ‘‘அதுஒரு வக்கிரமான தீர்ப்பு. அறிவைப் பயன்படுத்தாமல் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு வீரசேகரனுக்கு ஜாமீன் மறுத்தது மன்னிக்க முடியாதது’’என்றார் ஹை கோர்ட் நீதிபதி.
வீரசேகரன் வழக்கில் க்யூ பிராஞ்ச் தரப்பிலிருந்த இன்னொரு ஓட்டைதான் எல்லோரையும் சிரிக்க வைக்கிறது.
க்யூ பிராஞ்ச் சித்திக்கின் கோர்ட்டில் சமர்ப்பித்த வசந்தனின் வாக்குமூலத்தில் செப்டம்பர் மாத இறுதிவரை சுப்பு அக்கா வீட்டில்தான் இருந்தோம். தனசேகரனுடன் சென்னைக்கு வந்தேன். வக்கீல் வீரசேகரன் சாந்தனுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்தேன். அதில் சாந்தனை சில நாட்களுக்கு தலைமறைவாக இருக்கும்படி எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு 16.1௦.91 அன்று பவானி சென்று சாந்தனைப் பார்க்கச் சென்றேன். சாந்தன் அங்கு இல்லை. ஜெகதீசனிடம் சாந்தன் எங்கே? என்று கேட்டேன்.அதற்கு அவர் 18.1௦.91 அன்று திருச்சிக்கு அருகில் கரும்மண்டபம் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விட்டேன்’’ என்று சொன்னார் என்பதுதான் வாக்குமூலம்.
வசந்தனும் ஜெகதீசனும் சந்தித்தது 16.1௦.91 அன்று. அப்போது வசந்தன் சாந்தனைப் பற்றிக் கேட்கும் போது 18.1௦.91 அன்று திருச்சிக்கு அருகில் கொண்டு போய் விட்டதாக இருக்கும் வாக்குமூலம்தான் வீரசேகரன் வழக்கில் விழுந்த மிகப் பெரிய ஓட்டை. நீதிபதி, ‘‘சந்தித்தது 16 ஆம் தேதி.18 ஆம் தேதி எப்படி கொண்டு போய் விட முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார். க்யூ பிராஞ்ச் முழித்தது.
பலர் சிரித்தனர். சிலர் கோபப்பட்டனர்
‘பிரத்யேகக் கோர்ட்டின் தீர்ப்பு தவறானது’ என்பதை சென்னை ஹைகோர்ட் கூறிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. ஒரு நீதிமன்றமே வக்கிரமாக நடந்து கொண்டிருந்தால் போலீஸ்காரர்கள் எவ்வளவு வக்கிரமாக நடந்து கொண்டிருப்பார்கள். பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் மாற்ற முடியாது என்று தடா புத்தகத்தில் ஆட்சியாளர்களே ஒத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அதற்கான காரணத்தை அகற்ற அவர்கள் விரும்பவும் இல்லை.
முயற்சி எடுக்கவும் இல்லை.’’என்று நெத்தியடி அடிக்கிறார் முன்னாள் நீதிபதி வேணுகோபால்.
இது குறித்து, வீரசேகரனுக்காக பல நேரங்களிலும் மேடைகளிலும் கோர்ட் வளாகங்களிலும் முழங்கிய அட்வகேட் சந்துருவைச் சந்தித்தோம். தடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் பக்தவச்சலம் தீர்ப்பின் ஹைலைட். ‘‘எந்த ஒரு நியாயமான மனிதனும் இப்படியொரு முடிவுக்கு வர மாட்டார்.’’ (வீரசேகரனுக்கு ஜாமீன் கொடுக்காதது) என்று பக்தவச்சலம் சொன்னது சித்திக் கோர்ட்டுக்குக் கிடைத்த மரண அடி! அது மட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ‘‘இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது’’ என்று ஹைகோர்ட் நீதிபதி சொல்லி இருந்தாலும், இதே மாதிரியான வழக்கு வரும் போது இதே தீர்ப்பைத்தான் தரமுடியும். ஏன்? இந்த வழக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.
‘‘பிரத்யேகக் கோர்ட்டை மேற்பார்வை செய்யும் அதிகாரம் உயர் நீதி மன்றத்துக்கு கிடையாது’’ என்று சி.பி.ஐ.அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல் சட்டம் ஷரத்து எண்-227 படி சித்திக் கோர்ட்டை சென்னை ஹைகோர்ட் மேற்பார்வை செய்யும் அதிகாரம் இருக்கிறது. அதையேதான் நீதிபதி பக்தவச்சலமும் தனது தீர்ப்பு மூலமும் சொல்லியுள்ளது, அராஜகமாக நடந்து கொள்ளும் அதிகார வர்க்கத்தை கலக்கியுள்ளது.
தடா சட்டத்தில் இதுவரை மெயின் குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணவில்லை. குற்றம் புரிந்தவர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என்று சொல்லிதான் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘‘தடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து அட்வகேட்டுகள் எல்லோரும் ஒரு தீவிரமான போராட்டத்தில் குதிக்க இருக்கிறோம். மக்கள் நினைத்தால் அது முடியும். அந்தச் சூழ்நிலையும் தற்போது இருக்கிறது. ஆனால் இதை எதிர்த்து ஒரு அரசியல் ரீதியான போராட்டம் நடக்காதது வருந்தததக்கது’’ என்றார் சந்துரு. தற்போது முன்னூறுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சந்துருவுடன் தோளோடு தோள்நின்று தடாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.
வீரசேகரன் வழக்கு தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் துரைசாமி நம்மிடம் பேசும் போது மிகவும் சீரியஸாக ஒரு ஜோக் அடித்தார். ‘‘என்னை இவர்கள் கைதுசெய்து கொலையாளிகளுக்கு உதவியது ஏன்? என்று வாக்குமூலம் கேட்டால் ஜனாதிபதி வெங்கட்ராமன்தான் நடு இரவு இரண்டு மணிக்கு எனக்கு போன்பண்ணி அடைக்கலம் தா என்றார். அதனால்தான் நான் கொலையாளிக்கு அடைக்கலம் தந்தேன். மீண்டும் அவர் தொலைபேசியில் பேசுவேன் என கூறியுள்ளார் என்று வாக்குமூலம் கொடுப்பேன். ஏனென்றால் தபாலில் யாரோ ஒருவர் க்யூ பிராஞ்ச்சுக்கு அனுப்பிய ஜெராக்ஸ் காப்பியை ஆதாரமாக எடுத்துக் கொண்டு வீரசேகரனை அரெஸ்ட் பண்ணியவர்கள் என்னுடைய நேரடி வாக்குமூலத்தின்படி வெங்கட்ராமனைக் கைது செய்ய வேண்டுமல்லவா?’’ என்றார் படு சீரியஸாக.
சிறையிலிருந்து வெளிவந்த வீரசேகரனை திராவிடர் கழக பொது செயலாளர் கி.வீரமணி பாராட்டி வரவேற்கும் போது, ‘‘சாதாரணத் தொண்டனாக நின்று நான் இந்த ஆட்சியாளர்களைக் கேட்கிறேன்.ஏற்கெனவே ஆட்சியில் இருந்த
அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்குப் பழி வாங்கினால் அரசு இயந்திரம் என்ன ஆகும்? உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதால் தாண்டவமாடுகிறீர்கள். நேற்றைய அமைச்சர் இன்று உள்ளே போயிருக்கிறார். நாளை அவர் முதல்வரானால் நீங்கள் உள்ளே போக வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு கல் எறியாதீர்கள். அது கடும் விளைவைத்தான் பரிசாகத் தரும். இன்று நீங்கள் பத்மநாபா வழக்கு என்று சொல்லிப் பலரைப் பழி வாங்குகிறீர்கள். நாளை வரும் ஆட்சி சண்முகம் கொலை’’ என்று சொல்லி ஆரம்பித்தால்? அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையைத் தொடுத்து தடாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லப் போவதாகக் கூறுகிறார்.
பல நாட்கள் சிறையிலிருந்து விட்டு வெளி உலகைக் கண்ட வீரசேகரன் நம்மிடம் பேசும்போது, ‘‘எனக்கு ஒன்றும் புரியல. வெளியில் என்ன நடந்ததுன்னே தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். நீதி நியாயத்தை எல்லாக் காலத்திலும் ஒடுக்கி வச்சுட முடியாது’’ என்றார் அமைதியாக. கொஞ்சம் உறைந்து போய் இருந்தார்.
நாம் கேட்பது இரண்டு விசயங்கள்.
மொத்தம் 46 நாட்கள் வெஞ்சிறையில் வாடிய வீரசேகரன் தற்போது குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், 46 நாட்கள் வீரசேகரனை சிறையில் அடைத்து மகிழ்ந்தவர்கள் என்ன இழப்பீடு தரப் போகிறார்கள்? அவர்கள் தரும் இழப்பீடுகள் வீரசேகரனின் இழப்புகளை ஈடு செய்யுமா? பலம் பொருந்திய திராவிடர் கழகமும் பல நூறு வக்கீல்களும் துணை நின்று போராடியதால் வீரசேகரனின் மேல் உள்ள குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வந்தார். ஆனால் இன்னும் இருபத்தெட்டுப் பேர் பத்மநாபா கொலையில் மட்டும் சம்பந்தப்படுத்தி தடாவில் தள்ளப்பட்டு உள்ளனர். அத்தனை பேருக்கும் கை கொடுக்கப் போவது எத்தனை பேர்? அது தவிர தடா சிறையில் இன்னும் நிறையப் பேர். அவர்களுக்காக வாதாடப் போவது யார்?
இப்பொழுது சுப்புலட்சுமி ஜெகதீசன் இதே வீரசேகரனின் வழக்கில் வரும் வசந்தனின் சுப்பு அக்கா என்ற வாக்கு மூலத்தையும், நாகராஜனின் வாக்கு மூலத்தையும் வைத்துதான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவருடைய வழக்கு
நீதி மன்றத்துக்கு வரும் போது எப்படி அவர் குற்றம் சாட்டப் படுகிறார்?எப்படி வழக்கறிஞர்கள் வழக்காடப் போகிறார்கள் என்பதை சில நாட்களுக்குள் பார்க்கலாம். ‘‘சுப்புலட்சுமியின் வழக்கை ஹைகோர்ட்டுக்கு கொண்டு செல்ல முடியாது’’ என்கிறார் ஒரு க்யூபிராஞ்ச் அதிகாரி.
இதற்கிடையில் கடந்த எட்டாம்தேதி நீதிபதி சித்திக் சென்னை மத்திய சிறையில் தடா கைதிகளைப் பார்க்கச் சென்றபோது ‘‘நீதிமன்றத்தையே சிறைச்சாலையாக்கும் உங்களை நாங்கள் சந்திக்க மாட்டோம்’’ என்று கைதிகள் சித்திக்கைப் பார்க்காமல் புறக்கணித்தது வெளியில் தெரியாமல் போய் விட்டது.