தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய போராட்டம்! எதற்காக? எப்போது நடந்தது தெரியுமா..?

tamilnadu police and their dream for a union

tamilnadu police and their dream for a union

தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கடந்த நூற்றாண்டில் ஜவுளி மில் தொழிலாளர்களில் தொடங்கி, தற்போது ஐ.டி ஊழியர்களுக்கு வரை தொழிற்சங்கம் அமைக்கும் அளவுக்கு, சங்கங்களின் தேவையும், சேவையும் தொழிலாளர்களுக்கு இன்றியமையாததாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் அத்தனைத் தொழில்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இருக்கும்போது, இதுவரை தமிழகத்தில் காவல்துறையினருக்கு என்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் கிடையாது. பல்வேறு காலகட்டங்களில், பலர் இந்த சங்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், இதுவரை காவல்துறையினருக்கான சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் எனப் போராடிய காவலர்களின் போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கைகளையும் பற்றி 16.11.1991நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா!

சார்... ‘‘நக்கீரன் பத்திரிகைல போலீஸ்காரர்கள் செய்ற அடாவடித்தனத்தையும் தவறுகளையும் போட்டு தூள் கிளப்புறீங்க. அப்படிப்பட்ட பிரச்சனைகள் மட்டும்தான் உங்க கண்களுக்கு தெரிகிறதே தவிர, போலீஸாராகிய நாங்க படுற துன்பங்கள் மட்டும் ஏன் உங்க கண்களுக்கு படமாட்டேங்குது. நாங்களும் மனுஷங்கதான். அடுத்துதான் போலீஸ். இதை யாரும் புரிஞ்சுக்கிடவே மாட்டேங்குறாங்க’’ என்று சில போலீஸார் நம் அலுவலகத்தில் வந்து ஆவேசமாக தங்கள் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தனர்.

என்ன விஷயம்? தெளிவாகாச் சொல்லுங்கள்’’ என்று நாம் கேட்கவும், ‘‘போலீஸ்காரர்களுக்கென்று என்று சில உரிமைகள் இருக்கிறது. அதனைத் தட்டிக் கேட்டுப் போராடியதால இப்போ நாங்க எட்டுப் பேரு சஸ்பெண்ட் ஆகி வெளியே நிக்கிறோம்’’ என்று பதிலைச் சொல்லவும் அவர்களோடு பேச ஆரம்பித்தோம்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஆயுத போலீஸ்படையில் போலீஸ்காரர்களாக இருக்கும் ரவீந்திரன், முருகன், சரவணப்பெருமாள், திவான் காசிக், லோகசம்பதிராஜ், துரைசாமி, சுப்பையா ஆகிய எட்டு போலீஸாரும் தற்போது வழக்கமாக உள்ள போலீஸ்காரர்களை விடவும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.

போலீஸ்காரர்கள் என்றால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறதோ அதன்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவர்கள். அதேநேரத்தில் தனக்குரிய உரிமைகளுக்காக யாரிடமும் மோதுவதற்கும் பயப்பட மாட்டார்கள்.

போலீஸார்கள் சட்டப்படி நடந்தால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒத்துப் போகுமா? டி.எஸ்.பி.தங்கசாமி தன் நாற்காலியில் இருந்து துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார். ‘‘நான் எந்த நேரமும் என்ன வேலைகள் சொன்னாலும் நீங்க கட்டாயம் செஞ்சாகனும்.’’

‘‘அது முடியாது. ட்யூட்டி நேரத்தில் போலீஸ்காரர்களுக்கு என்னென்ன வேலைகள் உண்டோ அதை மட்டும் தான் நாங்கள் செய்வோம்’’ என்று இவர்கள் சொல்லவே டி.எஸ்.பி.க்கும் இவர்களுக்கும் இடையில் மோதல்கள் வலுக்கத் தொடங்கின.

பட்டுப்போன மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது. மண் சுமப்பது போன்ற கடினமான வேலைகளை ட்யூட்டி நேரத்தில் ஏட்டு சந்தானம் மூலம் செய்யச் சொல்லி எட்டு போலீஸாருக்கும் தண்ணீர் காட்டத் தொடங்கினார் டி.எஸ்.பி.தங்கசாமி.

போலீஸ்காரர்களும் வேறு வழியில்லாமல் ‘‘நமக்கும் ஒரு காலம் வரும்’’ என்கிற எண்ணத்தோடு சளைக்காமல் வேலை செய்தனர்.

ஒருகட்டத்தில், இதனைக் கண்டு கொதித்துப்போன எட்டு போலீஸ்காரர்களும், நமது உரிமைகளைப் பறித்து விட்டு நம்மை நாயைவிடக் கேவலமாக நடத்துகிறார். இதற்கு சரியான முடிவு கட்டிவிட வேண்டும். அதற்கு ஒரே வழி போலீஸ் சங்கம் அமைப்பதுதான் என்று கூடி முடிவெடுத்து அதற்கான முதற்கட்டப் போராட்டமாக உண்ணாவிரதம் இருப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி கடந்த 12.6.91 அன்று ‘‘காவல் துறையினருக்கு சங்கம் கொடுக்க வேண்டும். சினிமாத் துறையில் காவல்துறையினரை இழிவாகப் பேசவும் கேலித்தனமாகவும் விமர்சிப்பதைத் தடைசெய்ய வேண்டும். காவலர்களின் கொத்தடிமைத் தனத்தை ஒழிக்க வேண்டும் என்கிற 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 42 நாள் உண்ணாவிரதம்,சாகும்வரை’’ என்று வி.சி.புரத்தில் தொடங்கவும், போலீஸ் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியாளரும் தலைதெறிக்க ஒடி வந்து போலீஸார்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடைசியில் ‘கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறோம்’ என்கிற பாவனையைக் காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிட வைத்தனர்.

அதற்குப் பிறகும் எட்டுப் போலீஸார்களும் சும்மா இருக்கவில்லை.

ஆகஸ்ட் ஐந்தாம் தேதி திரும்பவும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர். முன்புபோல் இல்லாமல் போலீஸ் அதிகாரிகள் உஷாராகி எட்டு போலீஸாரையும் தூக்கிச்சென்று வள்ளியூர் டி.எஸ்.பி.முன்னிலையில் இருபத்தெட்டு நாட்கள் காவலில் வைத்தனர். எனவே போலீஸாரால் உண்ணாவிரதம் நடத்த முடியாமல் போயிற்று.

இருபத்தெட்டு நாட்கள் கழித்து வெளியே வந்த பிறகும் போலீஸார் மனம் தளரவில்லை. இரண்டாம் தேதி செப்டம்பரில் திடீரென்று உண்ணாவிரதத்தில் ஈடுபடவும் வேறு வழியில்லாமல் எட்டு போலீஸ்காரர்களுக்கும் ‘‘சஸ்பெண்ட் ஆர்டரை’’ அடித்துக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார் மாவட்ட எஸ்.பி.நரேந்திரபால் சிங்.

சஸ்பெண்ட் ஆகி வெளியில் இருக்கும் ரவீந்திரன் என்ற போலீஸ்காரரை கேட்டபோது, ‘‘முன்பு வெள்ளைக்காரர்கள் போலீஸார்களை எப்படி அடிமைகளாக்கி வைத்து வேலைவாங்கினார்களோ அதே போன்றுதான் இன்றும் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் மட்டும் ஸ்டெப் கட்டிங், டிஸ்கோ கட்டிங், என்று தங்கள் இஷ்டப்படி முடி வெட்டலாம். ஆனால் நாங்கள் மட்டும் எல்லோரும் சிரிக்கிறபடி முடி வெட்டிக்கனும். நான் மீசையை எடுத்ததுனால எனக்கு மெமோ தந்தாங்க. மீசையை எடுக்கக் கூடாது என்று போலீஸ் சட்டத்தில் எந்த விதியும் கிடையாது.

போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து ‘ஐயா' என்றுதான் கூப்பிட வேண்டும். சார் என்று கூப்பிடக் கூடாது. ஆனால் போலீஸ் அதிகாரிகள் மட்டும் எங்களை வாயில் வந்த வார்த்தைகளை சொல்லிக் கூப்பிடலாம். இப்போதுள்ள போலீஸ்காரர்களும் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்கள் என்பதைக் கூட அதிகாரிகள் நினைத்துப் பார்ப்பதில்லை. இதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காகத்தான் போலீஸ் சங்கமே கேட்கிறோம்’’ என்றார்.

சுப்பையா என்ற போலீஸ்காரர் நம்மிடம் சொல்லும்போது, ‘‘பொதுவாக எல்லாத் துறைகளிலும் லஞ்சம் பெருகித்தான் இருக்குது. அதேபோன்று போலீஸாரும் லஞ்சம் வாங்கத்தான் செய்றாங்க. ஆனால் போலீஸ்காரன் வாங்குற ரெண்டு ரூபாய் லஞ்சம் மட்டும்தான் நாட்டுக்கே பெரிசா தெரியுது. போலீஸ்காரர்கள் என்றாலே இழிவுபடுத்தித்தான் சினிமாவே எடுக்கறாங்க. அதனால மக்களிடம் எங்களுக்கு இருக்கற மதிப்பும் போய் விடுகிறது. இதை எங்களைப் போன்ற நேர்மையாக இருக்கும் போலீஸ்காரர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை’’ என்றார்.

‘‘நாட்டில் விஞ்ஞானம் நாகரீகம் வளர்ந்த பின்பும் போலீஸ்துறை மட்டும் வளராமல் இருக்குது. இன்றைக்கு காவல்நிலையங்களில் இருக்கற துப்பாக்கிகள் எல்லாம் போலி துப்பாக்கிகள்தான். எந்த துப்பாக்கியும் ஒழுங்கா செயல்படுவது கிடையாது. போலீஸ் அதிகாரிகள் போலீஸார்களுக்கு வேண்டிய பயிற்சிகள் எதுவுமே கொடுப்பது கிடையாது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையுண்டபோது போலீஸார் பயந்து ஓடியதற்கு போதுமான பயிற்சியின்மைதான் காரணம். போலீஸ் அதிகாரிகளிடம் பயிற்சி சொல்லித் தாருங்கள் என்று கேட்டால் மிரட்டத்தான் செய்கிறார்கள்’’ என்கிறார் முருகன் என்ற போலீஸ்காரர்.

சரவணப்பெருமாள் கூறும்போது ‘‘காவல்துறையில் உள்ள கடைமட்ட ஊழியரான எங்களுக்கு எந்த உரிமையும் சிறிதளவும் கிடையாது. நாங்கள் வருடத்தில் 365 நாட்களும் பணியில்தான் இருக்கிறோம். வி.ஐ.பிகளுக்கு 24 மணிநேரமும் கண்விழித்துப் பாதுகாப்புக் கொடுக்கும் போலீஸாருக்கு தங்க ஓர் இடம் கூடக் கொடுப்பதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் வி.ஐ.பிக்களுக்கு அரசு மரியாதை கொடுக்கக் கூடாது என்கிறது போலீஸ் விதி. ஆனால் போலீஸ் அதிகாரிகளோ இரவு ஒரு மணிக்குக் கூட வி.ஐ.பிக்களுக்கு அரசு மரியாதை கொடுக்கச் சொல்கிறார்கள். நாங்கள் வேறு வழியில்லாமல் கொடுப்போம். எங்களுக்கு ஓட்டுப் போடக்கூட உரிமை கிடையாது. இதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காகத்தான் நாங்கள் சங்கமே கேட்டோம். அதற்காக என்னைப் போன்ற எட்டுப் போலீஸ்காரர்களை சஸ்பென்ட் செய்து விட்டனர்.’’என்றார்.

மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து 24 மணிநேரமும் கால்கடுக்க நின்று இந்த தேசத்துக்காக பாடுபட்டு வரும் போலீஸ்காரர்களைப் பற்றி இதுவரைக்கும் எந்த அரசும் கண்டு கொள்ளவேயில்லை.

அவர்களின் கோரிக்கைகள் எல்லாம் குடத்தில் வைத்திருக்கும் விளக்கு போன்றுதான் இருக்கிறது. இதனைப் புரிந்துகொண்டு ஜெயலலிதா இனிமேலாவது நிவர்த்தி செய்து கொடுத்தால் சரி.. இல்லையென்றால் பல போராட்டங்களை முறியடிக்கப் பயன்படுத்திய போலீஸாரின் போராட்டத்தை அடக்க முடியாமல் போவது உறுதி.

App exclusive tamilnadu police
இதையும் படியுங்கள்
Subscribe