ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு முன்னதாகவே இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு ‘டான்சி நில மோசடி’ வழக்கு. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டது. 90 களில் துவங்கி 2000 வரை நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் சிறை செல்லவும் நேர்ந்தது. ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் சருக்கலாக அமைந்த டான்சி வழக்கிற்குத் துவக்கப்புள்ளி வைத்தவர் சுப்பிரமணிய சுவாமி. அந்த வழக்கு பின்னணி குறித்தும் அதில் சுப்பிரமணிய சுவாமியின் பங்களிப்பு குறித்தும் 08.10.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியான கட்டுரை.
டெல்லி விமான நிலையம். 28.9.92. மாலை ஆறு மணி. உள்நாட்டு அன்னிய நாட்டு பிரமுகர்கள் பலரை வரவேற்க ஆங்காங்கே சிறிய சிறிய கூட்டமாக திரண்டிருந்த முக்கிய மனிதர்கள். அவர்கள் மத்தியில் நாமும் நின்று கொண்டிருந்தோம். நமக்கு அருகே அரவிந்த் சதுர்வேதி. இந்த நீள மூக்குக்காரர் வேறு யாரும் அல்ல. டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் முக்கிய உதவியாளர்தான் நாங்கள் அப்போது சென்னையிலிருந்து வரும் விமானத்துக்காகக் காத்திருந்தோம்.
சென்னையில் சாமி ஆளுனர் மாளிகைக்குச் சென்று மனு கொடுக்கிறார் என்பதும் அதையொட்டி பத்திரிகை நண்பர்கள் அவரை எப்படியும் பதம் பார்த்து விடுவார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அதனால் விஷயங்களை அடிஆழத்துக்கு எடுத்துச் சென்று எடுத்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் டெல்லிக்கு பறந்து சென்று காத்திருக்க வேண்டியிருந்தது. ‘மெல்ல மெல்ல’ நம் அருகே நின்று கொண்டிருந்த நமது நண்பரான சாமி உதவியாளரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மீண்டும் நவம்பரில் கூடுகிறதாம். அப்போது சிறுபான்மை நரசிம்மராவ் காங்கிரஸ் பெர்ம்பான்மை ஆகிவிடுமாம். அஜீத் சிங் கோஷ்டியினர் முழுக்க முழுக்க காங்கிரஸில் சேரப் போகின்றனராம். வி.பி.சிங்கும் பொம்மையும் என்னதான் குதித்தாலும் அஜீத்சிங் கோஷ்டியை ஆந்திராவின் உபேந்திரா கோஷ்டியைச் செய்தது போலவே காங்கிரஸில் சேர்த்துவிட நாடாளுமன்ற சபாநாயகர் சிவராஜ் பாட்டில் சட்ட புத்தகங்களைப்புரட்டிப் பார்த்து முடிவு எடுத்து விட்டாராம். பிரதம மந்திரியின் அலுவலகம் சுப்பிரமணியம் சுவாமி போன்ற அறிவு ஜீவிகளின் உதவியோடு சுறுசுறுப்பாக இயங்குகிறதாம். ஆந்திராவில் புதிய முதல்வர் பதவியேற்ற கையோடு கர்நாடகா பீகார் என்ற மாநிலங்கள் பட்டியலில் இருந்தாலும் தமிழ்நாட்டில் தனிக்கவனம் செலுத்த பாரதப் பிரதமர் ஒத்துக் கொண்டு விட்டார். பாருங்கள் சீக்கிரம்! ஜெயலலிதா ஆட்சி என்ன ஆகப் போகிறது என டிசம்பர் மாதத்தை நாள் குறித்துக் கூறினார்.
அந்நேரம் விமான நிலையத்தின் ஓடு பாதையில் சென்னை விமானம் வந்திறங்கியது. சுப்ரமணியசுவாமியும் திருச்சி வேலுச்சாமியும் வந்திறங்கினார்கள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சப்தர்ஜங் ரோடு வீட்டுக்கு அருகே உள்ளது சாமியின் வீடு. சென்னையில் சாமியா? மாமியா என்ற வாதத்தை தொடங்கி வைத்து விட்டு வந்தவர் இரவு பத்தரை மணியளவில் ஏ.பி.4. பண்டேரா ரோட்டில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரியான சேஷன் வீட்டுக்குப் போனார். இரவு வெகுநேரம் நடந்த அவர்கள் சந்திப்பு பற்றிய விபரங்களை காலையில் சி.1/38,பண்டேரா ரோட்டில் உள்ள சேஷன் அலுவலகத்துக்குச் சென்று சேகரித்தோம். சாமி சென்னை செல்லும் முன்னரே ஜெயலலிதாவைப் பதவி நீக்கம் செய்வதற்கு எந்தெந்த சட்டப் பிரிவுகள் உள்ளது. அதற்கு என்ன ஆதாரங்கள் தேவை என்ற குறிப்புகளை எடுத்துக் கொண்டு நடவடிக்கையைப் பற்றி விவாதித்து விட்டுத்தான் தமிழக கவர்னரை சந்தித்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது.
தமிழக அரசின் புத்தக வெளியீட்டு நிறுவனத்துக்காக பாட புத்தகங்கள் அச்சடிக்க ஜெயலலிதா பங்குதாரராக உள்ள ஜெயா பப்ளிகேஷன்சுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர், அதற்காக அரசு ஒப்படைத்த தொகை 94 லட்சம், இந்த தொகைக்கான ‘‘செக்’’கைத்தான் அப்படியே ஜெயா பப்ளிகேஷன்சுக்காக அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலலிதா வாங்கும்போது கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை ‘‘கேஷ்’’ஆக கட்டியிருக்கிறார். இத்தனை ஆதாரங்களையும் சாமி சேகரித்து வந்து டி.என்.சேஷனிடம் நட்பு முறையில் கொடுத்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் கூறின.
மேலும் தமிழகத்தில் ஜெயலலிதாவை மட்டும் எதிர்த்துப் பேச, ‘ஜெ’வை ‘‘பதவி இறக்கும் கமிட்டி’’ என ஒன்றை அமைத்திருக்கிறார் சாமி. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கிய அக்டோபர் பதினைந்தாம் தேதியன்று ராஜாராம், பி.எச்.பாண்டியன், திருநாவுக்கரசு, வி.வி.சாமிநாதன் சோ, பொன்னையன் உள்ளிட்டோர் அமைந்துள்ள இந்தக் கமிட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கூட்டம் போட்டுப் பேச திட்டமிட்டிருக்கிறது. அதோடு ராஜாராம், பி.எச்.பாண்டியன், வி.வி.சாமிநாதன் ஆகியோர் பிரதமர் நரசிம்மரவைச் சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்கியுள்ளார் சாமி. அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெற சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.
டெல்லி சாமி வட்டாரங்கள் மூலம் இத்தகவல்களை பெற்ற நாம் பிரதமர் அலுவலகம் உள்ள ‘சௌத்பிளாக்’ பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். ஏதாவது மெட்ராஸ் செய்திகள் உண்டா? என நாம் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அந்தச் செய்தி கிடைத்தது. சாமி ஆளுனரை பார்த்துப் பேசிவிட்டுப் போன பிற்பாடு போயஸ் கார்டனுக்கு தகவல் போயிருக்கிறது. பி.என்.சிங் மிகவும் சோர்வுடனும் அச்சத்துடனும் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து ஜெயலலிதா எதிர்பாராத முடிவை எடுத்திருக்கிறார். நேற்றுவரை எல்லா முயற்சிகளையும் எடுத்து தோல்வியடைந்து போன ஜெயலலிதா ‘‘டெல்லியிலும் நல்லுறவு இல்லை, ஆளுநரும் திடீரென துரோகம் செய்கிறார்’’ என்ற நிலைமையில் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.
‘‘ஆந்திரா போல் முதல்வரை மாற்றும் பகடைக் காய்கள் நகர்த்துவதை அனுமதிக்க மாட்டேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சென்று சந்திப்பேன்...’’ போயஸ் தோட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்துறைச் செயலாளர் மூலமாகப் பேசிய ஜெயலலிதா பேசிய இந்த ஆவேசப்பேச்சு செய்தி வழக்கமாக வரும் ஐ.பி. மூலம் இல்லாமல் தமிழ்நாடு போலீசிலிருந்தே டெல்லிக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் இந்த முடிவை பற்றி கருத்துக் கேட்க சாமியை எவ்வளவோ முறை தொடர்பு கொண்டும் அவர் கிடைக்கவில்லை.
சட்டம் தன் கடமையைச் செய்யும் – சட்டப்புலி!
பி.எச்.பாண்டியன் பேட்டி.
நக்கீரன்;
ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவி எந்த அடிப்படையில் பறி போகும்?
பதில்;
அரசியல் சட்டம் 191 – ‘‘ஒரு எம்.எல்.ஏ. லாபகரமாக ஒரு அலுவலகத்தைக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி லாபகரமாக ஒரு தொழிலை அரசாங்கத்தோடு வைத்திருந்தால் எம்.எல்.ஏ.பதவியை இழக்க நேரிடும்’’என சொல்கிறது. இதன்படிதான் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெக்டே திட்டக்குழுத் துணைத்தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த காரணத்தால் தேர்தல் கமிஷனே அவரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்துக் கொண்டது. காரணம் திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவி லாபகரமான அரசாங்கப்பதவி. அதனால் ஜெயா பப்ளிகேஷன்சுக்காக அரசாங்க காண்டிராக்டு கொடுத்து கொள்ளை லாபத்தை சம்பாதித்ததால் பதவியை இழக்கப் போகிறார் ஜெயலலிதா.
நக்கீரன்;
கவர்னர் ஏதேனும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தால் என்ன செய்ய
முடியும்?
பதில்;
கவர்னர் ஒரு போஸ்ட்மேன்தான். இவருடைய வேலை நாம் கொடுக்கும் மனுவை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டியதுதான். கமிஷன் முடிவே இறுதியானது.
நக்கீரன்;
காண்டிராக்ட் விசயமாக வழக்கறிஞர் இரத்தினவேலு கொடுத்த வழக்கில் நீங்கள் ஆஜராகியது என்னாவாயிற்று?
பதில்;
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதாவைப் பதவி நீக்கம் செய்யக்கோரி நான் கொடுத்த ரிட் மனு நீதிபதி ராஜு முன்னிலையில் வந்தது. இது 26.3.92 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு நீதிபதி மிஸ்ரா தலைமையிலான பெஞ்சுக்கு சென்றது. அவர்கள் 3.4.92 அன்று ‘‘அதிகாரம் படைத்தவர்களிடம் மனு கொடுங்கள்’’ என தீர்ப்பு வழங்கினார்கள். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 இல் ரத்தினவேலு அவர்களுக்கும் மனு அனுப்பினார். நான் உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்திருக்கிறேன். சட்டம் தன் வேலையை தவறாமல் செய்யும்.