உலகம் முழுவதும், பொருளாதார ரீதியிலும், இனம் மற்றும் சாதியின் பெயராலும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை நிலக்கிழார்களும் பெருமுதலாளிகளும் கொத்தடிமைகளாக வைத்து வதைத்த நிகழ்வுகளை வரலாறு நெடுக பார்க்க முடியும். இந்தியாவிலும் இத்தகை கொத்தடிமை கொடுமைகளுக்குக் குறைவே இல்லை. 1976ஆம் ஆண்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, 45 ஆண்டுகள் கடந்தும், இன்றும் இந்த முறை பரவலாக இந்தியாவில் இருக்கிறது. செங்கல் சூளை, கல்குவாரி, அரிசி ஆலை, பஞ்சாலைகள், உப்பளம், பட்டு நெய்தல், வீட்டுவேலை போன்ற பல்வேறு தொழில்களிலும் கொத்தடிமை முறை இருந்து வருகிறது. தற்போதுவரை 65,573க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறினாலும். அரசின் காதுகளுக்குக் கேட்காத அவலங்கள் ஏராளம். பல்வேறு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிறைந்த தற்போதைய சூழலிலும் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டிருப்போரைக் கண்டு அவர்களை மீட்பது சவாலாக இருக்கும் போது 90களின் துவக்கத்தில் அரசியல் பலமும் ஆள் பலமும் மிக்க ஒரு அரக்கனிடம் சிக்கி வதைபட்டு வந்த குடும்பம் நக்கீரன் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவம் 01.02.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

The story of the rescue of stone quarry slaves by Nakkheeran

Advertisment

அய்யோ....எங்களைக் கொல்றாங்களே!

Advertisment

சென்னை வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி கிராமத்தில் இருக்கும் எஸ்.கே.என்டர்பிரைசஸ் கல்உடைக்கும் குவாரியில் ஒரு குடும்பத்தினர் ஐந்து வருடங்களாக கொத்தடிமைகளாக முதலாளியிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். அரசியல் பலமும், பணபலமும், அடியாட்கள் பலமும் உள்ள அந்த முதலாளியின் பிடியில் இருந்து அந்தக் குடும்பத்தினரை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்.

18.1.92 அன்று மதியம் பனிரெண்டு மணிக்கு நமக்கு தொலைபேசியில் வந்த தகவல்.

சம்பந்தப்பட்ட முதலாளியின் பின்னணிகளை ஒரு மணி நேரத்திலேயே சேகரித்தோம்.அமைச்சர் கண்ணப்பனுடைய உதவியாளருடைய நெருக்கமான உறவினர். சி.எம்.ஜெயலலிதாவின் கறுப்புப் பூனைப்படையில் இருக்கும் ஒரு பூனையின் சொந்தக்காரர். ஊனமாஞ்சேரி கிராமத்தை அடுத்த வெங்கம்பாக்கம், மேட்டுக்காலனி பகுதிகளில் இருக்கும் காலனி குடிசைகளை பாதிக்கு மேல் வளைத்துப் போட்டிருப்பவர். தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதுடன் யாரும் எதிர்த்துக் கேட்டால் அடி-உதை கோதாவில் இறங்குபவர். அவர்தான் ராஜரத்தினம். அவரது மகன்கள் நந்தகோபால், விஜயகுமார்,முத்து.

மேற்படி தகவல்களை சேகரித்துக் கொண்டு மாலை மூன்று மணிக்கு நாம் ஊனமாஞ்சேரி கிராமம் சென்று எஸ்.கே.கல்குவாரியை நெருங்கவும் அந்தச் சம்பவம் நடைபெறுவதற்கும் சரியாக இருந்தது. கல்குவாரியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் முன்பே உள்ள வண்டலூர்-மகாலிங்கபுரம் ரோட்டின் நடுவே அந்தக் குடும்பம் நின்று கொண்டு போகும் வரும் கார்கள் லாரிகளை கை நீட்டி மடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளை நிற அம்பாஸிடர் கார் ஒன்று காலியாக வர அந்தக் காரின் முன்பு இந்தக் குடும்பத்தினர் விழுவது போல நிற்க காரும் பிரேக் அடித்து நின்றது.

அய்யா! எப்படியாவது எங்களைக் காப்பாத்துங்கய்யா....இந்தக் குவாரியில முதலாளி ஆளுங்க பன்ற கொடுமை எங்களால தாங்க முடியல சாமி! கெஞ்சிக் கதறிய அந்தக் குடும்பத்தினரை கார் ஏற்றிக் கொண்டு புறப்பட நாம் தேடி வந்த குடும்பம் இதுதான் என்பதைப் புரிந்து கொண்ட நாம் காரைப் பின் தொடர்ந்தோம்.சென்னை நகரின் சந்து பொந்துகள் எல்லாம் நுழைந்து கடைசியாகக் கார் நின்ற இடம் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ், டாக்டர்.நடேசன் ரோட்டில் இருக்கும் ‘‘மனித உரிமைக் கட்சி’’ அலுவலகம். நாமும் அந்தக் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அலுவலகம் உள்ளே சென்றோம். தருமபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா கரிங்காலிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி வசந்தா, நான்கு வயது குழந்தை முருகன், மற்றும் சின்னப்பாப்பா, சிவலிங்கம் ஆகியோரை நாம் விசாரித்த போது அவர்கள் கூறியவை இரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.

‘‘ஆறு வருஷம் முன்னாடி எங்க ஊர்ல இருந்து இருபது பேருக்கு மேல மணி மேஸ்திரி மூலமா இங்க வந்தோம். வேலைக்காக இந்தக் கல்குவாரி முதலாளிகிட்ட சேந்தோம். நாங்க புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நாள் பூரா சக்கை(கருங்கல் ஜல்லி) அள்ளி கொட்டுனா முப்பது ரூபாதான் கிடைக்கும். அது கூட சாப்பாட்டுக்காக பத்து அஞ்சுன்னு அப்பப்ப தருவாங்க. பாக்கியை உன்னோட கணக்குல சேத்துக் கிட்டேன்னு சொல்வாங்க. இடையில மிஷின் ரிப்பேர் அது இதுன்னு மாசத்துல பத்து நாள் வேலை இருக்காது.

இந்த வருஷம் பொங்கலுக்கு ஊருக்குப் போகலாம்னு முதலாளியின் ஆளுங்க இல்லாத சமயம் பாத்து தப்பிச்சு நாங்க ஊருக்குப் போய்ட்டோம். சரியா ஒரு வாரம் கழிச்சு (11.1.92) முதலாளி மகன்கள் விஜயகுமார், நந்தகோபால்,டிரைவர் கிருஷ்ணன், மேஸ்திரி பாண்டியன், ரெண்டு போலீஸ்காரங்க எல்லோரும் எங்க ஊருக்கு நடுராத்திரி வந்து தூங்கிக்கிட்டு இருந்த எங்களையெல்லாம் அடிச்சு எழுப்பி டிப்பர்வண்டியில (TN.O4/A.5155) தூக்கிப் போட்டுக்கிட்டு மறுபடியும் குவாரிக்கு கொண்டு வந்தாங்க.

என்னையும் சிவலிங்கத்தையும்(ஊனமுற்றவர்) வண்டலூர் ஓட்டேரி போலீஸ் ஸ்டேசன்ல இறக்கி விட்டுட்டு என்னோட பொண்டாட்டி வசந்தா, அக்கா சின்னப் பாப்பா ரெண்டு பேரையும் லாரியில குவாரிக்கு கொண்டு போயிட்டாங்க. ஸ்டேசன்ல என்னோட வாயில மூத்திரத்தை ஊத்துனாங்க. மறுநாள் காலை முதலாளி ஆளுங்க வந்து என்னைய சமாதானம் பண்ணி குவாரிக்கு கூட்டிட்டுப் போறதா போலீசுல சொல்லிட்டு கூட்டிப் போனாங்க. அவரையடுத்து அவரது மனைவி வசந்தாவும் அக்கா சின்னப் பாப்பாவும் அவர்களுக்கு முதலாளியின் ஆட்கள் செய்த கொடுமைகளைப் பற்றிக் கூறும்போது தாங்க முடியாமல் ‘ஓவென்று’ கதறி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

உங்களை எம் புள்ளையா நெனைச்சு சொல்றேன்

‘‘லாரியில் இருந்து நேரா குவாரிக்கு கூட்டிக்கிட்டுப் போயி என்னையும் வசந்தாவையும் புடவையெல்லாம் அவுத்து நிர்வாணமாக்கி சுடுதண்ணிய மேல ஊத்துனாங்க. கண்டபடி அடிச்சாங்க. உயிர் நிலைல மிருகத்தனமா தாக்குனாங்க’’ என்றவர் மேலும் சில செய்திகளைச் சொன்னபோது நாம் தலையைக் கீழே குனிந்து கொண்டோம். எழுதக் கூட கூசும் அக்கொடுமைகளை செய்த அவர்களுக்கு இனிமேல் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றித்தான் தண்டனை கொடுக்க வேண்டும்.

ராஜேந்திரனிடம் நாம் மேலும் விசாரித்தபோது வேலை செய்றது கூட எங்களுக்கு கஷ்டம் இல்லங்க. ஏதோ வந்ததுக்காக நாங்க கஷ்டப்பட்டுதான் ஆகணும். ஆனா எங்கள ஒரு புழு பூச்சி போல நடத்தி வெளிய கூட யார்கிட்டயும் சொல்ல முடியாதபடி கொடுமை பண்ணுவாங்க. என்னையும் என் பொண்டாட்டியையும் நிர்வாணமாக்கி உடலுறவு செய்யச் சொல்லி வேடிக்கை பாப்பாரு முதலாளியோட மகன் நந்தகோபால் வாத்தியாரு. இந்தக் கொடுமை சகிக்க முடியாமதான் நாங்க ஊருக்கு தப்பிச்சுப் போனோம். ஆனா மறுபடியும் எங்கள இங்க அடிச்சு கூட்டிட்டு வந்துட்டாங்க.‘‘நாங்க படிக்காத பாமரங்க. போலீசு கோர்ட்டுன்னா என்னன்னு கூடத் தெரியாது.எப்படியாச்சும் எங்களைக் காப்பாத்தி ஊருக்கு அனுப்பி விடுங்க. இல்லைன்னா எங்களை நீங்களே குடும்பத்தோட கொன்னுடுங்க’’ கையை பிடித்துக் கொண்டு கதறினவரை அணைத்துக் கொண்டு அருகிலேயே உள்ள ஐ.ஜி.அலுவலகம் சென்றோம்.

ஐ.ஜி.அலுவலகம்.

ஐ.ஜி.யின் பெர்சனல் அதிகாரி குமாரசாமி அவர்கள் நம்மை பரிவுடன் அழைத்து விசாரித்தார். செங்கல்பட்டு எஸ்.பி.ஸ்ரீ லட்சுமி பிரசாத்திடம் வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கினார். காஞ்சிபுரம் எஸ்.பி. கேம்ப் ஆபீஸ். எஸ்.பி.ஸ்ரீ லட்சுமி பிரசாத் நம்மை எதிர்பார்த்து தயாராக இருந்தார்கள். அனைத்தும் விசாரித்து விட்டு தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார் எஸ்.பி. ‘‘நீங்க ஸ்பாட்டுக்குப் போறது அங்க உள்ள லோக்கல் ஸ்டேசனுக்குக் கூடத் தெரியக் கூடாது. ஸ்டேசன்லருந்து போலீஸ்காரங்க எப்படி தர்மபுரிக்குப் போனாங்க? ஸ்டேசன்ல ராஜேந்திரனுக்கு இப்படி மோசமான ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்காரங்க பெயர் என்ன? சி.ஐ.டி.பிரிவு போலீசாருக்கும் தனி உத்தரவு ஒன்றை வயர்லெஸ் மூலம் கொடுத்தார் ஸ்ரீ லட்சுமி பிரசாத். வசந்தாவையும் சின்னப்பாப்பாவையும் விசாரிக்கச் சொல்லி விட்டு நாம் வெளியே வந்து விட்டோம். பதினைந்து நிமிட விசாரணைக்குப் பிறகு நமக்கு அழைப்பு வந்தது.

‘‘இவங்க சொல்றதக் கேட்டா எனக்கே உடம்பெல்லாம் ஆடுது. ஒரு புரொஃபசர் (நந்தகோபால் நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்) இவ்வளவு கீழ்த்தரமா நடந்துகிட்டத நெனைச்சா! இவரு எப்படி புரொஃபசர் ஆனார். எப்படி மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர்றார்னு நெனைச்சா ஆச்சரியமா இருக்கு’’ என்று வேதனையுடன் கூறிய எஸ்.பி. இதுமாதிரி நிறைய பிரச்சனைங்க வருது. ஆனா கோர்ட்டுக்குப் போகும் போது பாதிக்கப்பட்டவங்க வக்கீல் மடக்குற மடக்குல ஏதாவது உளறிட்டு கேஸ் ஒன்றுமில்லாம போயிடுது.அதுவும் பாதிக்கப்பட்ட ரெண்டு பொம்பளைங்களுக்கு அவுங்க வயசு எத்தனைன்னு கூட சொல்லத் தெரியல. நம்ம எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுப்போம். ‘‘என்னென்ன பிரிவுகள்ல வழக்குப் போடணுமோ அத்தனையும் பாத்து நான் கேஸ் போடச் சொல்றேன்’’ என்ற எஸ்.பி. நம்மை செங்கல்பட்டு டி.எஸ்.பி.ஜோசப்புடன் தொடர்பு கொள்ள வைத்தார்.

செங்கல்பட்டு டி.எஸ்.பி.கேம்ப் ஆபீஸ்.

‘‘எல்லாத்தையும் எஸ்.பி.அம்மா சொன்னங்க. நீங்க விவரமா எல்லாத்தையும் புகாரா எழுதிக் கொடுங்க. நாளைக்கு கவர்னர் பந்தோபஸ்து இருக்கறதால கொஞ்சம் தாமதமாகும். அதுவரைக்கும் நீங்க விருப்பப்பட்டா இவங்கள ஸ்டேசன்லயே தங்கச் சொல்லுங்க’’ என்றார். தர்மபுரியில் இருந்து ராஜேந்திரனின் உறவினர்கள் வந்து ‘‘வசந்தா, சின்னப்பாப்பா, சிவலிங்கம் மூவரையும் தர்மபுரிக்கே அழைத்துப் போகிறோம். ஆம்பளைங்கன்னா பரவாயில்ல. எங்களுக்கு பயமாயிருக்கு விசாரணைக்கு தேவைப்படும் போது கூட்டிக்கிட்டு வர்றோம்’’ என்றார்கள்.

பிறந்த ஆறுமாதக் குழந்தையாக குவாரிக்கு வந்த முருகன் நான்கு வருடங்களாக மலை, கற்கள் இடையே பழகியதால் நகரின் நாகரிக வளர்ச்சிகளை முதன் முதலாகப் பார்த்து அதிசயித்தான். முதலாளி வீட்டில் வசந்தா சின்னப்பாப்பாவுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் ராஜேந்திரனுக்கு ஸ்டேசனில் கொடுத்த துன்பங்களையும் இரண்டு நாட்கள் ஸ்டேசனில் ராஜேந்திரன் கையெழுத்து போட்டுவிட்டுப் போன விபரங்களை யும் நாம் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிய போது மிகவும் வேதனைப்பட்ட அவர் ‘‘என்னுடைய கவனத்துக்கு இந்த விசயங்கள் வராமல் போனதை நினைத்து வெட்கப்படுகிறேன். எஸ்.பி.அம்மாவின் உத்தரவுப்படி யாராயிருந்தாலும் குற்றம் செய்தவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பேன்’’ என உறுதியுடன் கூறினார் இன்ஸ்பெக்டர் தேவராஜன்.

மீண்டும் ஐ.ஜி.பெர்சனல் அதிகாரி குமாரசாமியை தொடர்பு கொண்டோம். இரண்டு நாட்களாக சேகரித்த தகவல்களின்படி குற்றம் நடந்திருப்பதை எஸ்.பி.ஸ்ரீ லட்சுமி பிரசாத் என்னிடம் கூறினார். தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். குற்றம் செய்தவர்கள் யாராயிருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். எங்களை நம்புங்கள் என்று கூறினார். எஸ்.கே.என்டர்பிரைசஸ் போன்ற குவாரிகளில் இன்னும் எத்தனை குடும்பங்கள் இது போல் குமுறிக் கொண்டிருக்கிறதோ? மலைகளில் இருந்து கேட்கும் அதிர் வேட்டு சத்தங்களுக்கிடையில் இது போன்ற கொத்தடிமைக் குடும்பங்களின் குரல் அமுங்கிப்போய் விடுகிறது. ஆந்திரா,ஒரிஸ்ஸா மாநிலங்களில் மட்டுமிருந்த இந்த குவாரிகள் கொத்தடிமைத் தனத்தை தமிழகத்திலும் தலை தூக்காமல் இந்த அரசு நசுக்குமா?