UN sounds alarm bells over 'water bankruptcy' Photograph: (WORLD)
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் சிட்டி முதல் இந்தியாவின் பெங்களூரு சிட்டி வரை தண்ணீர் பஞ்சம் தலை விரிக்கிறது. 'டேய் ஜீரோ'எனும் தண்ணீர் தீர்ந்து போகும் நிலையை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டி வரும் நிலையில் தண்ணீர் திவால் குறித்த எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது ஐ.நா.
இயற்கை என்னதான் மழையாக நீரை கொட்டினாலும் அந்த அளவை விட அவரவர் தேவைக்கு பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்கும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது தான் தண்ணீர் திவாலுக்கு காரணம் என்கிறது ஐநா. இது சாதாரண எச்சரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் வாழ்வாதாரத்திற்கு வரப்போகும் பயங்கர பேராபத்து என்று பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2026-ல் வெளியான அந்த அறிக்கையின்படி, உலகம் கடுமையான “தண்ணீர் திவால்”(Water Bankruptcy) நிலையை எட்டியுள்ளது. இது எதோ தற்காலிகமாக ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறை அல்ல. இயற்கையான நீர் இருப்பு என்று கருதப்படும் நிலத்தடி நீர், ஆறுகள் மூலம் கூட மீட்க முடியாத அளவுக்கு உலகின் நீர் மேலாண்மை தோல்வி அடைந்த நிலையை குறிப்பதாக ஐ நா சுட்டிக்காட்டியுள்ளது.
மழை, நிலத்தடி நீர் உள்ளிட்ட இயற்கையாகப் புதுப்பிக்கப்படும் வழிகள் மூலம் பெறப்படும் நீரின் அளவைவிட, அதிகமாக நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிரந்தரமான நீர் பற்றாக்குறை தான் தண்ணீர் திவால்.
காலநிலை மாற்றம், நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுதல், நீர் நிலை மாசுபாடு, சுற்றுச்சூழல் அழிவு போன்றவை இதன் முக்கிய காரணிகளாக உள்ளன. இதன் காரணமாக 6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பற்ற நீர் விநியோகத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் நீரோடு தொடர்புடைய உணவு பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தண்ணீர் திவாலின் மையப்புள்ளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது ஐநா. குறிப்பாக சென்னை நகரம் தண்ணீர் திவாலை நோக்கி வேகமாக பயணிக்கும் 25 நகரங்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால் 2019 ஆண்டு சென்னையில் நிலவிய தண்ணீர் பஞ்சம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேநேரம் தண்ணீர் திவாலை எதிர்கொள்ள சில தீர்வுகளையும் ஐநா முன்வைத்துள்ளது, மழைநீர் நீர் சேமிப்பு, நீர் நிர்வாகத்தை மாற்றி அமைத்தல், விவசாயத்தில் நீர் பயன்பாட்டைக் குறைத்தல். சொட்டு நீர் பாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல். நீர் தொடர்பான இயற்கை மூலதனத்தைப் பாதுகாத்தல், கழிவுநீர் மறுசுழற்சியை தீவிரப்படுத்துவது போன்றவற்றில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மீள வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது ஐநா.
'நீரின்றி அமையாது உலகு'
Follow Us