The world's smallest dinosaur - a fascinating study Photograph: (world)
பிரம்மாண்ட உயிரினமாக கருதப்படும் டைனோசர்கள் பற்றிய தேடல்கள் என்பது இன்று வரை நீடித்து வரும் நிலையில் அர்ஜென்டினாவில் குட்டி டைனோசர்களின் படிவம் கண்டறியப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
அர்ஜென்டினாவின் படகோனியா பகுதியில் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சில பெரிய டைனோசர்கள் நிலப்பரப்பில் இருந்ததாக கருதப்படுகிறது. அவற்றில் சுமார் எட்டு டன் எடையுள்ள பயங்கரமான இறைச்சி உண்ணும் ஜிகானோடோசொரஸ் மற்றும் 70 டன் எடையுள்ள மிகப்பெரிய நீண்ட கழுத்து தாவர உண்ணி அர்ஜென்டினோசொரஸ் ஆகியவை அடங்கும். ஆனால் அர்ஜெண்டினா வெறும் ராட்சத டைனோசர்களின் நிலம் மட்டும் அல்ல என்று புதிதாக கிடைத்த புதைபடிவங்கள் வெளிச்சமிட்டுள்ளது.
உலகின் மிகச்சிறிய டைனோசர்களில் ஒன்றான அல்னாஷெட்ரி செரோபோலிசியன்சிஸின் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒப்பிட்ட அளவில் இது ஒரு காகத்தின் அளவு கொண்டது.இவை பல்லிகள், பாம்புகள், பாலூட்டிகள் மற்றும் முதுகெலும்பு இல்லாத விலங்குகள் போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு படகோனியாவின் ரியோ நீக்ரோ மாகாணத்தில் உள்ள லா பியூட்ரேரா என்ற இடத்தில் மணல் கற்களுக்கு அடியில் இந்த படிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இது கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரிந்துள்ளது. "அல்னாஷெட்ரி உண்மையிலேயே சிறியது. சுமார் 0.7 கிலோ (1.5 பவுண்டுகள்) எடையுள்ள இது ஒரு கோழியை விட சிறியது," என்று நேச்சர் என்ற இதழில் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் பழங்கால ஆராய்ச்சியாளர் பீட்டர் மகோவிக்கி விவரித்துள்ளார்.
பெலிக்ஸ் டி அசாரா அறக்கட்டளை மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் பழங்காலவியல் நிபுணரும் ஆய்வு இணை ஆசிரியருமான செபாஸ்டியன் அபெஸ்டெகுயா கூறுகையில், ''அல்னாஷெட்ரி ஒரு இலகுரக விலங்கு, அது அதன் மெல்லிய கால்களில் குன்றுகளைக் கடந்து சென்றது. அதன் உடல் சேவலின் உடலை ஒத்திருந்தது, ஆனால் நீண்ட வால் கொண்டது. பெரிய மற்றும் சிறிய டைனோசர்களின் புதைப் படிவங்களுக்கான உலகின் ஹாட் ஸ்பாட்களில் படகோனியாவும் ஒன்றாகும். மிகச்சிறிய டைனோசர்களில் ஒன்றான அல்னாஷெட்ரி வாழ்ந்த சகாப்தம், அது ராட்சதர்களின் காலம் அல்ல, மாறாக மகத்தான பல்லுயிர் பெருக்கத்தின் காலம் என்பதை நமக்குக் காட்டுகிறது," என்று அபெஸ்டெகுயா தெரிவித்துள்ளார்.
Follow Us