The strange festival called 'Moon Woman' Photograph: (dindigul village festival)
சில ஊர்களில் நிலப்பரப்பு மற்றும் உள்ளூர் கலாச்சாரங்களின் அடிப்படையில் சில வினோத பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து, புதுக்கோட்டை அருகே நடக்கும் கோப்பி கொட்டல் விழா, போர் தேங்காய் விழா இப்படி பல வினோத விழாக்கள் இருக்கின்றன.
இந்த வினோத விழாக்களுக்கான காரணங்களும் அவ்வாழ்விட மக்களாலேயே சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு அவை வினோதமாகத் தெரிந்தாலும் அவ்வாழ்விட மக்களின் முக்கிய நிகழ்வாக அவ் விழாக்கள் இருக்கும். அப்படி ஒரு விழாதான் 'நிலா பெண் விழா'
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள வேடசந்தூரை ஒட்டியுள்ள கோட்டூர், தேவிநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், மழை பெய்து ஊர் செழிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு தைப்பூசத் திருநாளில் ஒரு சிறுமியைத் தேர்வு செய்து அச்சிறுமியை ஆவாரம் பூக்களால் கிரீடம் செய்து அலங்கரித்து, நிலா பெண்ணாக வழிபடும் வினோத விழா நடைபெறுவது வழக்கம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவாக இது நடைபெற்று வருகிறது.
அப்படி இந்த விழாவில், நிலா பெண்ணாகத் தேர்வு செய்யப்படும் குறிப்பிட்ட சிறுமி இரவு முழுவதும் ஒரு குடிசையில் அமர வைக்கப்படுவார். பின்னர் ஊர் எல்லையில் உள்ள கிணற்று பகுதிக்கு அழைத்து சென்று விளக்கு ஏற்றும் சடங்கானது விடிய விடிய நடைபெறும். விவசாயம் செழிக்க வேண்டும், உலக அமைதி ஏற்பட்டு நோயற்ற வாழ்வு மக்களுக்கு இருக்க வேண்டும் என இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. தேர்வு செய்யப்படும் சிறுமி, ஆவாரம் பூக்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு பெண் தெய்வமாக கருதப்படுவார். இந்த நிலா பெண் நிகழ்வில் அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்பர்.
ஒரு முறை நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்படும் அச்சிறுமி, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக செயல்படுவார். இந்நிலையில் நேற்று தைப்பூசம் என்பதால் அதற்கு முன்னராக 8 நாட்கள் நடந்த வழிபாட்டில் இரவு முழுவதும் கண்விழித்து இருந்த 13 வயது சிறுமி ஒருவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விடிய விடியப் பெண்கள் கும்மி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow Us