Skip to main content

இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம்... தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது - எவிடென்ஸ் கதிர் வேதனை!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

fg

 

சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட நபர்களால் தாக்கப்படும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞரைச் சந்தித்த சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர்  சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

 

அவரின் கருத்துக்கள் வருமாறு, “தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்ற 21 வயது இளைஞன், கடந்த 1ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட கும்பலால் அடித்து சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். பொது இடத்தில் பலர் முன்னிலையில் அவர் அடித்து இழுத்து வரப்பட்டுள்ளார். அதையும் தாண்டி தோப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டு அடிக்கப்பட்டுள்ளார். அங்கு அடித்தது பத்தாது என்று நினைத்து சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். இறுதியாக அவரை ஒரு புளியமரத்தில் கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளார்கள். மிகக் கொடூரமான வகையில் அவரை அடித்து சித்தரவதை செய்துள்ளார்கள். அந்த இளைஞர் மீது என்ன குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்றால், அவர் பணத்தைத் திருடியுள்ளார் என்று சொல்கிறார்கள். அந்தப் பாதிக்கப்பட்ட இளைஞரை தற்போது மருத்துவமனை சென்று பார்த்து வருகிறோம். அவர் தன்னுடைய முதலாளியிடம் சம்பளம் வாங்க சென்ற இடத்தில், முதலாளி ராகுலிடம் பிரச்சனை செய்துள்ளார். இதன் காரணமாக ராகுலை அவர் தாக்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்றும் தாக்கி இருக்கிறார். இதைத் தாண்டி பலர் முன்னிலையில் நாம் அவர் தாக்கப்படும் வீடியோவைப் பார்த்தோம். 

 

தற்போது அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாம் அவரிடம் பேசியதில், அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் அவர். அவரின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த சித்தரவதை சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் திருடினார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏன் அவர் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கப்படவில்லை? இப்போது டிஎஸ்பியிடம் பேசினோம், காவல்நிலையத்தில் பேசினோம். அவர் திருடினார் என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டியது தானே? ஆனால் இந்த நிமிடம் வரை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படவில்லை. இந்தக் குற்ற சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்ட நிலையில், தற்போது 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

 

தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையில் தள்ளப்பட்டு வருகிறது. ஒரு பொது இடத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதில் என்ன கொடுமை என்றால் இந்த சம்பவம் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை தொடர்ந்து நடந்துள்ளது. அவர் குடியிருந்த பகுதிக்கும், அடிவாங்கிய பகுதிக்கும் சம்பந்தம் இல்லை. அவரைக் கடத்தி வந்து இந்தச் சம்பவத்தை செய்துள்ளார்கள். அவர் மீது வன்மத்துடன் இந்தத் தாக்குதலை செய்துள்ளார்கள். அவர் தவறு செய்திருந்தார் என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதுதானே சரியான முறை. அவரை தாக்குவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கொடுமையான இந்த தாக்குதலில் அவர் உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை அனைத்து இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் தாண்டி அவரை தீவைத்து கொளுத்துவதற்குக் கூட முயற்சிகள் நடந்துள்ளது. ஆனால் காவல்துறை அடித்தவர்களைக் கைது செய்யாமல் பாதிக்கப்பட்டவரை அவருடைய அப்பாவிடம் ஒப்படைத்துள்ளார்கள். அடுத்தநாள் இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, மன உளைச்சலில் அந்த இளைஞர் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டுள்ளார். அந்த இளைஞரைப் பார்க்கும்போது அவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு மற்றும் காவல்துறை கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

 

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.