Skip to main content

“என்னுடைய கட்சியை நீங்கள் நிராகரிக்கலாம்; ஆனால் என்னுடைய அரசியலை எவனாலும் நிராகரிக்க முடியாது!” - சீமான்

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

ty

 

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் குறித்துப் பேசினார். அவரின் பேச்சு பின்வருமாறு, " என் வீட்டில் குடில் வைத்து முருகப் பெருமான் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதையும் கூட பாஜகவினர் பார்த்துவிட்டு ‘இது முருகப் பெருமானே இல்லை’ என்று கூறுகிறார்கள். இவர்கள் என்னவோ முருகனோடு கூடி விளையாடியவர்கள் போல பேசுகிறார்கள். நான் என் முப்பாட்டன் எப்படி இருப்பான் என்ற கற்பனையின் அடிப்படையில் அவனை உருவாக்கி சிக்ஸ் பேக் வைத்தேன். அதைக் கூட அவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. இவர்கள் பூராவும் தற்போது கத்துகிறார்கள். உலகம் முழுவதும் முருகனை நிருவி விட்டேன். எல்லாருடைய காலண்டரிலும் என்னுடைய முருகன்தான் இருக்கிறான். என்னையும், என்னுடைய கட்சியையும் நீங்கள் நிராகரிக்கலாம். ஆனால் என்னுடைய அரசியலை எவனாலும் நிராகரிக்க முடியாது. நான் பேசுகிறேன், காயிதே மில்லத் அவர்களைப் பற்றி மூன்று மணி நேரம் நான் பேசுகிறேன். அண்ணன் பழனிபாபா பற்றி 30 மணி நேரம் வேண்டுமானாலும் நான் பேசுகிறேன். ஆனால் ஸ்டாலினை மூன்று நிமிடங்கள் பேச சொல்லுங்கள் பார்ப்போம். குறைந்த பட்சம் எழுதி வைத்தாவது பேச சொல்லுங்கள்.  அவரால் முடியாது. ஆனால் இந்த மக்கள் அவரை தலைவர் என்று அவருக்கு வாக்களிக்கிறார்கள். இவர்களை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

 

என் அண்ணன் கூட சொல்கிறார், அன்பாக யாராவது பேசினால் அவர்கள் பின்னால் இவர்கள் சென்றுவிடுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார். ஒருநாள் தொப்பி போட்டு, நோன்பு கஞ்சி குடித்தால் அவர் இஸ்ஸாமியர் ஆகிவிடுவாரா? ஜெயலலிதா முதல் ஸ்டாலின் வரை அனைவரும் நோன்பு கஞ்சி குடித்துள்ளார்கள். குடிக்காத ஒரே ஆள் உன்னுடைய சொந்த மகன் நான்தான். என் சொந்த தம்பியே இஸ்ஸாத்தை ஏற்றிருக்கிறான். பல தம்பிகள் அந்த மதத்தை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏன் இந்த விழாக்களுக்கு வருவதில்லை. ஏனென்றால் நான் வேஷம் போட தயாரில்லை. தம்பிகள் ‘அண்ணே’ என்று அழைப்பார்கள், ‘கஞ்சியை வீட்டுக்கு அனுப்பிவிடு, நான் அங்கே வரவில்லை’ என்று கூறிவிடுவேன். ஏனென்றால் நான் உங்களின் உணவுக்கானவன் அல்ல. என்னுடைய உயிரானவர்களே, உங்களின் உணர்வுக்கானவன், உங்களின் உரிமைக்குப் பாடுபடுபவன். நான் இருக்கும்வரை என்னை தாண்டிதான் என் இன மக்களை எவனும் தொட முடியும். வரலாற்றில் இப்போதுதான் ஒரு பகைவனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். சிறுபான்மை, சிறுபான்மை என்று எங்கள் பிள்ளைகளை அச்சுறுத்துகிறார்கள். அப்போதுதான் சலுகை கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். நமக்கு வேண்டியது சலுகையல்ல, உரிமை. அதைத்தான் நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 

இந்த நாடு என் நாடு. இந்த நாட்டில் ஆகப்பெரும் சிறும்பான்மை கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாதான். இதுபுரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். உலகத்தில் எந்த மனிதனையும் மதம், சாதி அடிப்படையில் கணக்கிடுவதே இல்லை. மொழியின் அடிப்படையில்தான் கணக்கிடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் கிருஸ்துவம் இருக்கிறது. அதில் பல நாடுகள் இருக்கிறது. இருந்தும் ஏன் அனைத்தும் ஒரே நாடாக இருக்கவில்லை. மதம் வேறு, மொழி வேறு என்ற அடிப்படையில் அவைகள் பல நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. 46ல் விடுதலை அடைய வேண்டிய இந்தியா, 47ல் விடுதலை அடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் முகமது அலி ஜின்னா. அதற்கு காரணம், காந்தி இரண்டு கூட்டங்களில் சிறுபான்மை மக்களின் தலைவர் ஜின்னா நம்முடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டுச் சொல்லிவிடுகிறார். ‘நாம் பொதுவாகத்தானே போராடுகிறோம், இவர்கள் ஏன் நம்மை சிறுபான்மையினர் என்று கூறுகிறார்கள்’ என்று யோசித்துப் பார்த்தார். கூடவே மதக்கலவரத்தைத் தூண்டுகிறார்கள். அவர் சிந்தித்தார், ‘அந்நிய நாடு நம்மை ஆண்டுகொண்டிருக்கும்போதே நம்மை அவர்கள் சிறும்பான்மையினர் என்று கூறுகிறார்கள் என்றால், இவர்கள் கையில் ஆட்சி வந்துவிட்டால் இவர்கள் நம்மை என்ன செய்வார்கள்’ என்று யோசித்துப் பார்த்து அவர் தனிநாடு கேட்டார். எனவே நான் இப்போதும் சொல்கிறேன். நான் இருக்கும் வரையில் அவர்கள் மீது யாரும் கை வைத்துவிட முடியாது" என்றார்.

 

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.