Skip to main content

மன நலப் பயிற்சியா? பணம் காய்க்கும் மரமா? போலீஸ் கவுன்சிலிங் மோசடி!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
police

 

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிபதி பாரதிதாசனிடம் ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், "ஒரு ம__ பு__ முடியாது'' எனச் சொன்ன போலீஸ்காரர்கள் ஆகியோர் நடந்து கொண்ட விதம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கேள்வி எழுப்பியபோது, அந்தக் காவலர்கள் "மன அழுத்தத்தில் இருந்தார்கள்'' எனத் தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அத்துடன் "காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாயில் மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன'' எனத் தமிழக போலீசின் காவலர் நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் பதில் அளித்தார்.

 

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர்களின் மன அழுத்தத்தை நீக்க பயிற்சி அளிக்கும் திட்டம் என்ன என நக்கீரன் ஆராய்ந்தது. இந்தத் திட்டம் 20.09.2018 அன்று முதல்வர் எடப்பாடியால் துவக்கி வைக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பிரபல மனநல சிகிச்சை மருத்துவமனையான NIMANS நிறுவனத்தின் டைரக்டரான பேராசிரியர் பி.என். கங்காதர் என்பவரது ஆலோசனையோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் போலீசார் மற்றும் மூன்றரை லட்சம் பேர் அடங்கிய அவர்களது குடும்பம் ஆகியோரது மன அழுத்தத்தை நீக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

 

இதற்குத் தமிழகத்தில் ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்பவர் மதுரையின் புகழ்பெற்ற மனநல மருத்துவரான டாக்டர் சி.ராமசுப்பிரமணியன். அவரிடம் இந்தத் திட்டத்தைப் பற்றி கேட்டோம்.

 

"2018 ஆம் ஆண்டு நிறைய காவலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களது மனநிலை சரியில்லாததால் அவர்களது கடமைகளில் இருந்து தவறினார்கள். அதனால் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் காவல்துறையில் இருந்து 200 பேர் உளவியல் படிக்கவும், சமூகவியல் படிக்க 200 பேர் என 400 பேரை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு NIMANS மருத்துவமனையில் ஐந்து நாட்கள் பயிற்சி கொடுத்தோம்.

 

police

 

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் போலீசாருக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளித்தோம். அவர்களின் மனஅழுத்த அளவைக் கண்டுடித்து, மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்போம். இதுவரை 75 ஆயிரம் காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளித்துள்ளோம்.

 

சிகிச்சை அளிக்கும் உளவியல் மருத்துவர்களுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை சிகிச்சைக்கான செலவாக அளித்துவிடும். இதுபோல நாங்கள் சிகிச்சை அளிப்பதை சாத்தான் குளம் சம்பவத்தில் விசாரிக்கும் நீதியரசர் பி.என்.பிரகாஷ் கேட்டார். அவர் முன் நான் ஆஜராகினேன்.

 

police

 

ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் வீடியோ மூலமாக ஆஜராகி இந்தத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். இந்தத் திட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவில்லை. நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளித்தோமா என்பதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல முடியாது. நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள், மன அழுத்தத்தால்தான் அப்படி நடந்து கொண்டார்கள் எனத் தமிழக போலீசார் கூறியது பற்றி எனக்குத் தெரியாது. உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறையில் காவலர் நலன் பிரிவைக் கவனிக்கும் உயர்போலீஸ் அதிகாரியான தாமரைக் கண்ணனிடம் கருத்துக் கேட்டார். அந்த முயற்சியில் தமிழக காவல்துறைக்கு உதவியாக இயங்கும் நாங்களும் கோர்ட்டுக்கு போனோம்'' என்றார்.

 

police

 

இந்த சி.ராமசுப்பிரமணியன் மதுரையில் ஒரு மனநல மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் தாமரைக் கண்ணனின் தூரத்து உறவினர். "நீங்கள் அளித்த சிகிச்சை பயன் அளிக்காமல் போனதால்தான் சாத்தான் குளத்தில் உள்ள போலீசார் கொலை செய்தார்களா?'' என ராமசுப்பிரமணியத்திடம் கேட்டோம். அதற்கு அவர், "நான் இந்தத் துறையில் புகழ் பெற்ற மருத்துவர். அதனால்தான் பெங்களூருவில் உள்ள NIMANS நிறுவனம் என்னை தேர்ந்தெடுத்தது. நானும் காவவர் நலன் பிரிவில் பதவி வகிக்கும் தாமரைக்கண்ணனும் உறவினர்கள் என்பது உண்மை. ஆனால் நாங்கள் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க அளிக்கும் சிகிச்சைக்கும் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இதுபற்றி நம்மிடம் பேசிய காவல்துறையைச் சேர்ந்தவர்கள், "தாமரைக் கண்ணன் சென்னை மாநகர உளவுத்துறையில் பணியாற்றியபோது ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டார். இந்த ஒரே காரணத்திற்காக எடப்பாடி அவரை ஒதுக்கி வைத்தார். டி.ஜி.பி. திரிபாதிக்கு நெருக்கமான அவரைச் சட்டம் ஒழுங்கு பதவிகளுக்குக் கொண்டுவர திரிபாதி முயற்சித்தார்.

 

அதற்கு உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, தாமரைக் கண்ணன் சசிகலாவின் உறவினர் என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்தார். டி.ஜி.பி.யின் செல்லப் பிள்ளையான தாமரைக்கண்ணன், காவலர்களுக்கு மனஅழுத்தத்தை நீக்குகிறேன் எனத் தனது உறவினரான ராமசுப்பிரமணியனுடன் சேர்ந்து கொண்டு அரசுப் பணத்தைக் கல்லாகட்டுகிறார். இவர்கள் காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கவும் இல்லை, காவலர்கள் மனஅழுத்தத்திற்கும் சாத்தான்குளம் கொலை சம்பவத்திற்கும் நீதிபதி பாரதிதாசனின் அவமானப்படுத்தியதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை'' என்கிறார்கள் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

 

தமிழக காவல் துறை என்றாலே, எல்லாமே செட்டப்தானா?

 


 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.