Skip to main content

'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒன்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், கல்வியாளருமான மதுவந்தியிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,
 

m


சமீபத்தில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். தான் யார் என்று அமித்ஷா தற்போது உலகத்துக்கு காட்டியுள்ளார் என்று அவரை ரஜினி புகழ்ந்துள்ளார். இதை பற்றிய உங்களின் கருத்து?

இதில் எந்த ஒரு தவறும் இல்லை. இருவரும் நண்பர்கள், அதையும் தாண்டி காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு போல்டான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நான் ஆதரிக்கிறேன். ரஜினி சித்தப்பாவும் இதனை ஆதரித்து பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்த நடவடிக்கையின் மூலம் பல நல்ல திட்டங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டம் 70 ஆண்டுகளாக தொடர்ந்தது. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் இனி தேச விரோத சக்திகளின் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்படும்.

நடிகர் விஜய் சேதுபதி உங்கள் நண்பர்தான். அவர் காஷ்மீர் விவகாரத்தில் தவறு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினி அதனை ஆதரித்துள்ளார், இந்த இருவேறு கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்த விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதை போலவே விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்ன ரஜினியை எதிர்த்து கருத்து தெரிவித்தாரா? அவர் அவருடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஏன் நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள்? சமூக வளைதலங்களில் இந்த மாதிரியான கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தேவையில்லாத ஒன்று. அதையும் தாண்டி விஜய் சேதுபதியும், ரஜினிகாந்தும் ஒரே லீட் இல்லை. இருவரும் வெவ்வேறான நேரங்களில் அந்த கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே அதை ஒருவருக்கான பதிலாக நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை.

ரஜினி பாஜகவை ஆதரிக்கிற கருத்தை தெரிவிக்கிறார், ஆனால் விஜய் சேதுபதி அதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இதை எப்படி புரிந்துகொள்வது? தொடர்ந்து பாஜகவின் முகமாகவே ரஜினி இருப்பார் என்று கூறப்படுகிறதே?

ஒரு கட்சியில் இருக்கிறவங்க செய்கிற நல்ல விஷயங்களை பாராட்டினால் உடனே நீங்கள் கட்சி முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது. அப்படி கருத்து சொன்னால் இவுங்க அவருடைய கண்ணு, காது, மூக்குனு சொல்றது என்னை பொறுத்த வரையில் முட்டாள்தனம். ரஜினி பெரிய ஐகான். அவருக்கு பிடித்த விஷயங்களில் அரசு நல்லமுறையில் நடவடிக்கை எடுத்தால் பாராட்டுகிறார், அவ்வளவுதான். இதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்.

ஆனால், ரஜினி எல்லா விஷயங்களிலிலும் வாய் திறப்பதில்லையே? 

நீங்க ஏன் அவரு வாயை திறக்கனும்னு விரும்புறீங்க. அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர் ஏன் கருத்து சொல்லனும். அவருக்கு சரினு பட்ட இடங்களில் அவருடைய ஆதரவை தெரிவிக்கிறார். நீங்கள் உடனே பாஜக முகம், காதுனு சொன்னா நாங்க பொறுப்பாக முடியாது.

 

 

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார். 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.