Skip to main content

தாமிரபரணியில் பறிக்கப்பட்ட உயிர்கள் - அன்று மாஞ்சோலை... இன்று ஸ்டெர்லைட்...

Published on 23/05/2018 | Edited on 23/05/2018

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான தேடல்களுக்கும், உணர்வுப்பூர்வமான உரிமை மீட்பிற்கான போராட்டங்களுக்கும் அதிகார வர்க்கம் என்றுமே கற்பிப்பது மரணம் எனும் கொடிய பாடத்தைத்தான் என்பதற்கு நேற்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்விக்கப்பட்ட துப்பாக்கிச் சூடே இரண்டாவது சாட்சி. முதல் சாட்சி நமக்கு மறந்துவிட்ட ஒன்று.

 

monjolai


 

 

 

 

ஆம், 1999ஆம் ஆண்டு 17 பேரின் உயிரை பலிகொண்ட மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டம்தான் அது. என்றும்போல் அன்றும் சூரியனுடன் பொழுது விடிந்தது, 1999-ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் திருநெல்வேலியில். அன்றும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் கோரிக்கையுடன் சென்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் அடித்தட்டு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டும் முன்பு நடந்த போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்கச் சென்றனர். அந்தப் போராட்டத்தில் அப்பொழுது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த, தமாகாவைச் சேர்ந்த எஸ்.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னின்று வழிநடத்தினர். அவர்கள் கேட்டது, 70 ரூபாய் எனவிருக்கும் தினக்கூலியை 100 ரூபாய் என உயர்த்தவேண்டும். எட்டு மணி நேர வேலை, தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 625 தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும், இவைதான்.


 

monjolai

 

 

 

ஒன்று திரண்ட மக்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு சற்று தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். திறந்த ஜீப்பில் சென்ற தலைவர்கள், தங்களை மட்டுமாவது உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அனுமதிக்காததால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர், அருகே இருந்த தாமிரபரணி நதிக் கரையில் இறங்கி வேறு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆத்திரமடைந்த போலீசார், அவர்களை ஓட ஓட விரட்டித் தாக்கினர். மக்கள் செய்வதறியாது சிதறியடித்து ஓடினர். ஒரு பக்கம் மதில் சுவர், ஒரு பக்கம் தாமிரபரணி ஆறு போலீசாரின் தடியடியை சமாளிக்க முடியமால் தப்பிக்க வழியின்றி ஆற்றுக்குள் ஓடினர் மக்கள். அந்தத் தாக்குதலில் போலீஸ் தடியை மட்டும் பயன்படுத்தவில்லை, கற்களை எடுத்து மக்கள் மேல் எறிந்தனர். செங்கலை எடுத்து வீசினர். இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத மக்கள், திசை தெரியாது ஆற்றுக்குள் இறங்கி ஓட, ஆற்றின் மறுகரையிலும் நின்று தாக்கியது போலீஸ். வலிக்கு பயந்து துடித்து ஓடிய பெண்களும் குழந்தைகளும் உயிரை விட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி, தாமிரபரணி ஆற்றில் இறங்கி விக்னேஷ் என்ற சிறுவன், அவனது தாய் உட்பட பதினேழு பேர் ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள். 500 பேர் படுகாயமடைந்தனர். 30 ரூபாய் உயர்த்திக் கேட்டதற்கு உயிரைப் பறித்து தமிழகத்தையே உலுக்கியது அந்த மாஞ்சோலை படுகொலை. 

 

monjolai


 

 

 

உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்க மறுக்க, அரசே அவர்களை புதைத்தது. இத்தனை கலவரத்துக்குப் பின் தொழிலாளர்களின் ஊதியம் 130 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டது, சிறையிலிருந்த தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனுமதியின்றி நுழைந்து முற்றுகையிட முயன்றதால்தான் போலீஸ் தடுத்தது என்றும் வெடித்த வன்முறையை கட்டுக்குள் வைக்கவே தாக்குதல் நடத்தியது என்றும் விளக்கமளித்தது அப்போதைய திமுக அரசு. பின்னர், போராடிய கட்சிகளும் ஆண்ட கட்சியும் பின்னர் சேர்ந்து கொண்டன. போராட வந்து அவர்கள் விட்ட உயிரும், அந்த சம்பவம் ஏற்படுத்திய பயமும் அப்படியே இருந்தது. நேற்று, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் அரசு இதே காரணம்தான் சொல்லியது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தார்கள், அடித்து நொறுக்கினார்கள், அதனால் சுட்டோம் என்கிறது. நிவாரணம் அறிவித்துள்ளது. அமைதியாக சுமூகமாக சென்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் இறுதியில் வன்முறை நிகழ்த்தி, பயத்தைக் கொடுத்து முடித்துவைத்தது போலீஸ், அதன் ரிமோட்டை இயக்கும் அரசு. இப்படி, மக்கள் எழுச்சியுடன் போராட வந்தால் பயம் காட்டுவதுதான் அரசுகளின் வாடிக்கை. அதை மீறி, வாழ்வாதாரங்களைப் போராடிக் காப்பதுதான் தேவை. 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது