Skip to main content

வெள்ளைக்காரன் நல்லவனா? உப்புக்குறவர் சாதிக்கு அவன் இழைத்த அநீதி தெரியுமா - வரலாற்றை உடைக்கும் எழுத்தாளர் ரத்னகுமார் 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், உப்புக்குறவர் சாதியினர் குற்றப்பரம்பரையில் சேர்க்கப்பட்டது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

" பிரிட்டிஷுக்கு ஆதரவாக நம் ஆட்கள் சிலர் பேசுகிறார்கள். ஒன்று, அவர்கள் வரலாற்றை அரைகுறையாக படித்தவர்களாக இருக்கும் அல்லது எல்லோரும் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக பேசுகிறார்கள், நாம் ஆதரவாக பேசுவோம் என்று பேசுபவர்களாக  இருக்கும். பிரிட்டிஷ்காரன்தான் சாலை போட்டான், ரயில்வே அமைத்தான், கல்வி கொடுத்தான் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதையெல்லாம் அவன் ஏன் போட்டான் என்று தெரியுமா? நம் நாட்டில் இருந்த பொருட்களையெல்லாம் கடத்திக்கொண்டு செல்வதற்காகவும், எங்காவது கலகம் நடந்தால் உடனே அந்த இடத்தில் ஆர்மியை கொண்டு வந்து இறக்குவதற்காகவும் ரயில்வே ட்ராக் போட்டான்.

 

அவனைச் சுற்றி படித்த ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்ததால் பள்ளி, கல்லூரிகளை கட்டினான். வெளியே இருந்து பார்த்தால் இது சேவை மாதிரி இருக்கும். ஆனால், அவனுக்கான தேவை அதற்கு பின்னால் இருந்தது. இது உங்கள் வீட்டை பிடித்து அவன் மராமத்து வேலை செய்வது போன்றது. நம் வீட்டில் மராமத்து வேலை நடப்பதுபோல இருந்தாலும் அந்த வீட்டில் வாழப்போவதும் அவன்தான். நாம் வீட்டிற்கு வெளியேதான் நிற்கவேண்டும். 

 

நம் மக்களை எவ்வளவு நசுக்கினார்கள் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். 1882ஆம் ஆண்டு இந்திய உப்புச் சட்டம் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. யார் வேண்டுமானாலும் உப்பு எடுக்கலாம், யார் வேண்டுமானாலும் உப்பு விற்கலாம் என்பதற்கு இந்தச் சட்டம் தடைபோட்டது. அந்தக் காலகட்டத்தில் உப்புக்குறவர்கள் என்று ஒரு சாதியினர் இருந்தனர். அவர்கள்தான் உப்பை வண்டியில் தள்ளிக்கொண்டு வந்து ஊரில் விற்பார்கள். உப்பு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால் அதன் தேவையும் அதிகமாக இருந்தது. சந்தையில் அவர்களுக்கென்று தனியிடம்கூட ஒதுக்கப்பட்டது. நெல்லையும், சோளத்தையும் கொடுத்துவிட்டு பண்டமாற்றுமுறையில் உப்பை வாங்கிக்கொண்டு செல்வார்கள். இதை பார்த்த வெள்ளைக்காரன், உப்பில் இவ்வளவு வருமானம் வருமா, ஒரு இந்தியன் இத்தனை கிராம் உப்பு எடுத்துக்கொண்டால் நாடு முழுக்க எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கு போட்டு பார்த்து உப்பு எடுக்கும், விற்கும் உரிமையை அவன் கைவசம் எடுத்துக்கொண்டான். 

 

அதன் பிறகு, உப்பு விலை அதிகமானதால் ஒருகட்டத்தில் இந்தியர்கள் உப்பு போடமலே சாப்பிட ஆரம்பித்தார்கள். சிலர் உப்பிற்கு பதிலாக தும்பைச் சாற்றை பிழிந்து பயன்படுத்தினார்கள். வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் நம் மக்களை வதைத்து அட்டுழியம் செய்திருக்கிறான். வெள்ளைக்காரனின் சட்டத்தை மீறி ஆங்காங்கே உப்புக்குறவர்கள் திருட்டுத்தனமாக உப்பு விற்றதால் உப்புக்குறவர் இனத்தையே குற்றப் பரம்பரையில் சேர்த்தான். இது அந்த இனமக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி". 

 

 

Next Story

5 ரூபாய்க்கு வேலைக்கு வந்தவர் ஆற்காட்டை கைப்பற்றியது எப்படி? - சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை விளக்கும் ரத்னகுமார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ராபர்ட் க்ளைவ் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் ராபர்ட் க்ளைவின் மிகப்பெரிய ரசிகன். அலெக்சாண்டர், நெப்போலியன் போல ராபர்ட் க்ளைவும் வரலாற்று நாயகன். அடிதடி, வெட்டுக்குத்து எதற்கும் அஞ்சாதவன் ராபர்ட் க்ளைவ். ஹைதர் அலி வேகமாக முன்னேறுவதில் வல்லவர். மருதநாயகம் வியூகம் வகுப்பதில் வல்லவர். இந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவர் ராபர்ட் க்ளைவ். வெறும் 500 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஆற்காட்டைப் பிடித்துக்காட்டியவர். 

 

இந்தியா பற்றிய அறிவை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று  ராபர்ட் க்ளைவ் பதிவு செய்துள்ளார். அவர் இந்தியாவிற்கு வந்தபோது அவருடைய வயது 19. கிளர்க் வேலைக்காக வந்தவருக்கு 5 ரூபாய் சம்பளம். பின், சில காலம் குடோனில் கணக்குவழக்கு எழுதியுள்ளார். அதன் பிறகு ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில் புத்தகத்தைத் துடைத்து வைக்கும் வேலை பார்த்திருக்கிறார். 

 

அந்த நூலகத்தில் வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகம்தான் இருக்கும். கடுக்காய் மையைப் பயன்படுத்தித்தான்  வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அதை விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை படித்துத்தான் இந்தியர்களை அடையாளம் கண்டதாக  ராபர்ட் க்ளைவ் பதிவுசெய்துள்ளார். வெறும் கிளர்க்காக பணியில் சேர்ந்த  ராபர்ட் க்ளைவ், ஆறு வருடங்களிலேயே லாரன்ஸ் ஸ்டிங்கர் மூலமாக ஆர்மி கேப்டனாகிவிடுகிறார்.  

 

திருச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி சண்டை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்குப் பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரெஞ்சு படைகள் சந்தா சாஹேப்பிற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் பிரெஞ்சு படைகளை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் படைகள் சற்று பலவீனமாக இருந்தன. இந்த திருச்சி முற்றுகையில் சந்தா சாஹேப் தோல்வியடைகிறார். அதற்கு முக்கிய காரணம் ராபர்ட் க்ளைவ் வகுத்த நேர்த்தியான போர் வியூகம்தான். 

 

இந்தச் சண்டையின்போது பிரெஞ்சு படைகள் வலுவுடன் இருந்ததால் சந்தா சாஹேப்பை தாக்க வேண்டுமா என்று பிரிட்டிஷுக்கு யோசனை இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்தான், சந்தா சாஹேப்பை வீழ்த்த இங்குதான் அடிக்க வேண்டும் என்றில்லை; ஆற்காட்டிலும் அடிக்கலாம் என்று யோசனை கூறுகிறார். ஆற்காட்டுக் கோட்டையில் சந்தா சாஹேப்பின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்வுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை. நான் செய்துகாட்டுகிறேன், எனக்கு ஒருநாள் அவகாசமும் 500 பேரும் கொடுங்கள் என ராபர்ட் க்ளைவ் கேட்டுள்ளார். தான் சொன்னது போலவே 500 பேரோடு சென்று ஒரு குண்டைக்கூட வெடிக்கச் செய்யாமல் ஆற்காட்டைக் கைப்பற்றிக்காட்டினார் ராபர்ட் க்ளைவ்”.     

 

Next Story

”’கருங்காலிப் பயலே’னு திட்டுறோமே, அதன் அர்த்தம் தெரியுமா?” - உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ரத்னகுமார்

Published on 16/06/2022 | Edited on 22/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கருங்காலி என்ற சொல்லுக்கான பெயர்க்காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"தோகத்தி மரத்தைத்தான் கருங்காலி மரம் என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் தோகத்தி கருமை நிறத்தில் இருக்கும். அந்த மரத்தை அரிவாள் கொண்டு வெட்டவே முடியாது. கருங்காலி மரக்கட்டை கோடாலி, ஈட்டி, வேல் கம்பு செய்வதற்குப் பயன்படும். அந்தக் கட்டையை பாறையில் அடித்தால்கூட உடையாது, தெறிக்காது. 

 

கருங்காலிப் பயலே என்று சிலர் திட்டி கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்? தற்போது கருங்காலி மரம் வெட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலத்தில் கருங்காலியை வெட்ட வேண்டுமென்றால் கோடாரியைத்தான் பயன்படுத்துவார்கள். கோடாரி வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் கருங்காலி கட்டையில்தான் அதன் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும். கருங்காலி கட்டையில் செய்யப்பட்ட கோடாரி கருங்காலி மரத்தை வெட்டவே பயன்படுவதால், தன்னுடைய இனத்தை காட்டிக்கொடுப்பவனை குறிப்பிட கருங்காலி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி என்பதற்கான பெயர்க்காரணம் இதுதான்".