Skip to main content

உலகின் புகழ்பெற்ற புகைப்படத்தின் கதை !!!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

சே - பிறந்த தினம் இன்று 

 

che


சென்னை இளைஞர்களின் டீ-ஷர்ட்களிலும், பைக் வைசர்கள், சாவிக்கொத்துகளிலும், ஃபேஸ்புக் புகைப்படங்களிலும்,  கடிகாரங்கள்,  ஏன், காலணிகளிலும்  கூட இருக்கும் இந்தப் படம் உலகப் புகழ் பெற்றது. சென்னை மட்டுமல்ல, ஜியோ  நெட்வொர்க் சரியாகக்  கிடைக்காத குக்கிராமங்களிலும் இவரைப் பார்க்கலாம்.  இவர் யாரென்றே தெரியாதவர்களுக்கும் கூட,  தீர்க்கமும் கோபமும் உறைந்த இந்தப் புகைப்படமும், 'சே' என்னும் சொல்லும், இன்று வரை புரட்சியின் அடையாளமாக இருக்கிறது. இந்தப் படத்திற்கும் படம்  போட்ட பொருள்களுக்கும்  உலக இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினால்,   உலகின் மிகப்பெரிய வணிக அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் புகழ் பெற்ற கலைகளுக்கான கல்லூரியான மேரிலாண்ட் கல்லூரி, இந்தப் படத்தை உலகின் மிகப் புகழ் பெற்ற புகைப்படமாக அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள, விக்டோரியா-ஆல்பர்ட் அருங்காட்சியகம், 'இந்தப் படம் அளவுக்கு உலகில் வேறு எந்தப் படமும்,  பல வடிவங்களில் மிக அதிகமாக மருவுருவாக்கம் செய்யப்படவில்லை"  என்று கூறியுள்ளது. 
 

இத்தகைய புகழ் பெற்ற இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், ஆல்பர்டோ கோர்டா என்ற பத்திரிகை புகைப்படக்கலைஞர். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி, கியூபாவின் தலைநகரான ஹவானாவில் நடந்த ஒரு நினைவஞ்சலி நிகழ்வின் போது இது எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தின் முதல் பிரதியில் சேகுவேராவுக்கு அருகில் ஒரு மரத்தின் பகுதியும், இன்னொரு பக்கம் வேறொருவரும் இருந்தனர். "சேவின் கண்களில் நான் கண்ட சலனமற்ற தன்மையும், கோபமும், சோகமும் ஒருங்கே இருந்த முகமும் என்னை ஆச்சரியப்படுத்தின", என்று கூறிய  ஆல்பர்டோ, அந்தப் புகைப்படத்தில் சே மட்டும் தனியே இருக்கும் வண்ணம் வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர், 1963 ஆம் ஆண்டு, அயர்லாந்தைச் சேர்ந்த ஜிம் ஃபிட்ஸ்பாட்ரிக் என்ற மாணவர், சேகுவேராவைச் சந்தித்து, பழகி அவர் மீது மிகுந்த மதிப்பு உருவாகி, இந்தப் புகைப்படத்தை மேலும் மெருகூட்டி வடிவமைத்தார். அந்த வடிவம் மெல்லப் புகழ் பெற்றது. இணையம் உலகத்தை இணைத்த பின், கட்டுக்கடங்காத சுதந்திரத்தையும், எந்த அடக்குமுறையையும் எதிர்க்கும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் அந்தப் புகைப்படம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. சே, எதிர்த்த அமெரிக்காவிலும் கூட அவரது படம் போட்ட பொருட்களின் விற்பனை அதிகம் தான்.
 

che


சேகுவேராவைப் பற்றிய மேலும் சில தகவல்கள்...
 

'சே' ஒரு மருத்துவர். தொழுநோய்க்கான சிகிச்சையில் மிகுந்த ஆர்வமும் அறிவும் கொண்டவர்.
 

அயர்லாந்தைப் பூர்விகமாகக் கொண்ட தந்தைக்கு  அர்ஜென்டினாவில் பிறந்த எர்னஸ்டோ குவேரா, கியூபா மக்களால் நேசிக்கப்பட்டு, பின் உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.    
 

1950ஆம் ஆண்டு, ஒரு சைக்கிளில் தனியாக சுமார் 4500 கிமீ வடக்கு அர்ஜென்டினா முழுவதும் சுற்றினார். பின்னர், 1951இல் தன் நண்பர் அல்பர்டோ க்ரேனடோவுடன் இணைந்து இவர் சென்ற 8000 கிமீ  மோட்டார் சைக்கிள் பயணம் புகழ்பெற்றது. 'சே' வின் புரட்சி வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்த இந்தப் பயணம்,   'மோட்டார் சைக்கிள் டைரிஸ்' என்ற புத்தகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வந்தது.   
 

che fidel


சே - ஃபிடல் இருவருக்குமான நட்பும் உலகப்புகழ் பெற்றது. இவர்கள் இருவரும் முதலில் சந்தித்தது 1955இல். முதல் சந்திப்பிலேயே தொடர்ந்து பத்து மணிநேரம் புரட்சி குறித்து உரையாடினர். அடுத்த வருடம் 'மெக்சிகோ'வில் இவர்கள் இருவரும் சிறைவைக்கப்பட்டனர். ஃபிடலை மட்டும் முதலில் விடுவித்தபோது, 'சே இல்லாமல் நான் போக மாட்டேன்' என்று காத்திருந்து சேகுவாரவுடன் தான் விடுதலையானார் ஃபிடல்.         
 

படிஸ்டா அரசை வீழ்த்தி, க்யூபப் புரட்சி பெற்ற வெற்றிக்குப் பின் சில காலம் கியூபாவில் அமைச்சராகப் பணியாற்றினார் சே. அப்பொழுது, கல்வியில் மிகுந்த அக்கறை காட்டினார். 60 சதவிகிதமாக இருந்த கியூபாவின் கல்வி விகிதம், 'சே'வின் காலத்தில்  96  சதவிகிதமாக  உயர்ந்தது.
 

இறுதிக்காலத்தில், சே-ஃபிடல் நட்பில் விரிசல் உருவானது. ரஷ்யாவுடனான உறவு விஷயத்தில் இருவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. இதனால், சேகுவேராவை ஃபிடல் கேஸ்ட்ரோ ஒதுக்கினார் என்றும் கூறப்படுகிறது. கியூபாவின் தலைவனாகத் தான் மட்டுமே அறியப்படவேண்டுமென ஃபிடல் விரும்பியதாகவும் கூறப்பட்டது.
 

போராடிப் பெற்ற கியூப வெற்றியில் சொகுசாக நிற்காமல், காங்கோ, பொலிவியா மக்களின் புரட்சியை வழிநடத்தச் சென்றார் சே. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.
 

che family

 

சேகுவேராவின் முதல் மனைவி கில்டா. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், காதல் வாழ்க்கை நீடிக்கவில்லை. இரண்டாம் மனைவி அலீடா மார்ச்சுடன் வாழ்ந்த காதல் வாழ்வில் நான்கு பிள்ளைகள் பெற்றார்கள்.
 

பொலிவியாவின் காடுகளில், அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்ட பொலிவிய ராணுவம், 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 8  அன்று இவரைப் பிடித்தது. அடுத்த நாளான அக்டோபர் 9 அன்று கொல்லப்பட்டார் சே. கொல்லப்பட்ட போதும் கண்கள் மூடாத நிலையில் இருக்கும் இவரது புகைப்படம் அடக்கப்படும்  ஒவ்வொரு தேசத்தின் இளைஞர்களையும் போராட அழைப்பதாய் இருக்கும். இவர் கொல்லப்பட்ட பின், இவரது கைகள் வெட்டப்பட்டு, கைரேகைச் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்தக் கதை நமக்கு நெருக்கமாகத் தோன்றுகிறதல்லவா?
 

கொல்லப்பட்ட பின், இவரது உடலைத் தர மறுத்து, புதைத்த இடத்தையும் ரகசியமாக வைத்திருந்தது பொலிவியா. முப்பது ஆண்டுகள் கடந்து, 1997இல் அவரது மிச்சங்களைக் கொண்டு சென்று, நினைவிடத்தில் வைத்தது கியூபா.
 

இத்தகைய வாழ்வு வாழ்ந்த சேகுவேராவை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர், தேவையே இல்லாமல், பல உயிர்களைக்  கொன்றார் என்றும் ஒரு பேச்சு உண்டு. ஆனால், அவர் ஒரு போதும், மக்களை சந்தையாக மாற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை விரும்பியதில்லை. இன்று, அவரது படமே ஒரு மிகப்பெரிய நுகர்பொருளாக மாற்றப்பட்டு, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்படுவது, மிகப்பெரிய முரண். என்றாலும்,  அம்பேத்கர், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் எல்லாரும் நமக்கு மத்தியில் படும் பாட்டில், இது நமக்குப் பெரிய விஷயமல்ல...

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.