Skip to main content

இரண்டு முறை கைதான உலக 'பில்'லியனர்! - மைக்ரோசாப்ட் டிட்பிட்ஸ்

Published on 04/04/2018 | Edited on 05/04/2018

ஏப்ரல் 4 - மைக்ரோசாப்ட் நிறுவப்பட்ட நாள் 

 

microsoft


 

"பில் கேட்ஸ்" என்ற மனிதர் உலகம் எங்கும் ஏன் பட்டி தொட்டி எங்கும் கூட பிரபலமானவர். அப்படி அவர் பிரபலமானது உலக பணக்கார்கள் பட்டியலில் அவர் முதலிடம் வந்த பின்புதான். இந்தக் கணினிமயமான உலகத்தில் தொழில்நுட்பத்திலும் மேலும் பல்வேறு கணினி சம்மந்தமான விஷயங்களிலும் முதன்மை பெற்று இருக்கிறது இவரது மைக்ரோசாப்ட் நிறுவனம். மாணவனாக இருந்தபோதே பில் கேட்ஸ்,  பவுல் அலன் என்ற நண்பருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை நியூ மெக்சிகோவில் ஏப்ரல் 4 1975 ஆம் ஆண்டு நிறுவியிருக்கின்றனர். அதாவது மைக்ரோசாப்ட் என்ற ஒரு சாப்டவேர் நிறுவனம் பிறந்து நாற்பத்தி மூன்றாம் வருடத்தை எட்டி பார்க்கிறது. அதனால், மைக்ரோசாப்ட்டை பற்றியும் பில் கேட்ஸை பற்றியும் சில சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.

 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயர் முதன் முதலில் மைக்ரோ - சாப்ட் என்று இருந்துள்ளது. மைக்ரோ என்பது மைக்ரோகணினி என்றும். சாப்ட் என்பது சாப்டவேர் என்று குறீயீடாக வைத்து ஆரம்பித்துள்ளனர். பின்னர் அடுத்த வருடமே குறுக்கே உள்ள ஹைபனை மட்டும் எடுத்துவிட்டு மைக்ரோசாப்ட் என்று மாற்றிவிட்டனர்.

 

2013 ஆம் ஆண்டின் படி பில் கேட்ஸ் 11.5 பில்லியன் சம்பாரித்துள்ளார். அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு 33.3 மில்லியன், ஒரு மணி நேரத்திற்கு 1.38 மில்லியன், ஒரு நிமிடத்திற்கு 23,148 டாலர் என்று பிரித்து வைக்கலாம்.

 

bill gates


 

கடந்த ஆண்டின் உலக பணக்காரர்களில் பில் கேட்ஸ் 86 பில்லியன் மொத்த தொகையுடன் முதல் இடத்தை பிடித்தார், இது தொடர்ந்து நான்காவது முறையாக முதல் இடம் பிடித்துள்ளார், போர்ப்ஸ் பத்திரிகையின் வரிசைப்படி.

 

பள்ளிப் பருவத்தில் எல்லோரும் கணினியை வைத்து கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பில் கேட்ஸ் புரோகிராமிங் செய்யத் தொடங்கிவிட்டார். பில் கேட்ஸ் கணினியில் செய்யும் கோடிங்கை பார்த்து பள்ளி நிர்வாகம் ஆச்சரியப்பட்டு ஒரு வேலை இவருக்கு அளித்தது. பள்ளியில் மாணவர் வருகை, இருக்கை ஒதுக்கீடுக்கு தேவையான மென்பொருள் ஒன்றை செய்யச் சொன்னது. பில்லோ அதில் விஷமத்தனமாக பள்ளியில் இருக்கும் அழகான பெண்கள் அவரை சுற்றி இருப்பது போன்று கோடிங் செய்து கொடுத்துள்ளார்.

 

ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் படிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பி உழைப்பார்கள். பில்லுக்கு அந்த வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்குவதற்காக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

 

1987 ஆம் ஆண்டில் அவருக்கு வயது முப்பத்தி ஒன்று. அப்போதே அவர் பில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். 1996 ஆம் ஆண்டில் 12.8 பில்லியன் மொத்த சொத்துடன் உலக பணக்காரர்களில் முதலிடம் பெற்றார் பில் கேட்ஸ்.

 

'க்ஸனாடு 2.0' என்னும் அவருடைய எஸ்டேட்டை 1988 ஆண்டு இரண்டு மில்லியன் டாலருக்கு வாங்கினார். அதன் மொத்த அளவு சுமார் 66,000 சதுர அடி, அதில் தான் அவரது சகலவசதிகொண்ட வீடு இருக்கிறது. அது வீடு இல்லை அரண்மனை. இந்த எஸ்டேட்டின் தற்போதைய மதிப்பு சுமார் 123 மில்லியன். 

 

ms word


 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது விண்டோஸும், வேர்டும் தான். அந்த விண்டோஸ் 95 ஆன் செய்யும் போது வரும் ஏழு நொடி இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த இசையை இயக்கியவர் "பிரியன் இனோ" என்பவர் தான்.    

 

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு போட்டி என்று ஒரு நிறுவனம் இருந்தால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பித்த ஆப்பிள் நிறுவனமாகத்தான் இருக்கும். இந்த இரண்டு நிறுவனமும் மெக்கிண்டாஷ் என்ற கணினியை கண்டுபிடிக்கும் வரை ஒன்றாக சில வருடங்கள் வேலை பார்த்தும் இருந்திருக்கிறார்கள். விண்டோஸ் என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு வந்த பின்னர் தான் இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவியிருக்கிறது.

 

'டேட்டா லிங்க்' என்ற ஸ்மார்ட் வாட்ச்சை 1994 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கன்பிடிப்பதற்கு 12 வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்திருக்கின்றனர். இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் மோசமான ஒன்றாக இருக்கிறது. டைமிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இதை உருவாக்கியது.

 

billionaire


 

ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகளை திருடிதான் பில் கேட்ஸ் விண்டோஸ் என்ற ஒன்றை கண்டுபிடித்தார் என்று பலரால் பேசப்பட்டு வந்தது. அதேபோன்று இரு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டது.  பின்னொரு காலத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட தொய்வினால் வங்கியில் 150 மில்லியன் வரை இழப்புகள் கட்டவேண்டியிருந்திருக்கிறது. அந்தப் பணத்தை பில் கேட்ஸ் கொடுத்து உதவியதாக ஸ்டீவ் ஜாப்ஸே சிஇஓ வாக அவரது முதல் மேடையில் கூறியிருக்கிறார்.

 

பில் கேட்ஸ் இரண்டு முறை போலீசார்களால் கைது செய்யப்பட்டுள்ளார். 1975 ஆம் ஆண்டு லைசன்ஸ் இல்லாமலும் மற்றும் வேகமாக கார் ஓட்டியதற்காவும் கைது செய்யப்பட்டார். 1977 ஆம் ஆண்டும் இதே போன்று லைசன்ஸ் இல்லாமலும், காரை போலீசார்கள் நிப்பாட்ட சொல்லியும் நிப்பாட்டாமல் போனதற்காகவும் கைது செய்யப்பட்டார்.

 

பல பில்லியன்களுக்கு அதிபதி, இவரது சொத்து மதிப்பு 140  வளரும் நாடுகளின் ஜிடிபியாக இருக்கிறது. இருந்தாலும் இவர் தனது சொத்தில் கால் வாசியை மட்டுமே தன் மூன்று குழந்தைகளுக்கு பிரித்து தருவதாகவும் மற்ற முக்கால்வாசி சொத்தை பில் கேட்ஸ் பவுண்டேசன் என்ற அவரது டிரஸ்டுக்கு தரப்போவதாக 2014 ஆம் ஆண்டு தெரிவித்திருக்கிறார்.

Next Story

மீண்டும் காதல்; பில்கேட்ஸ் சூசகம்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Love Again; Bill Gates hinted

 

மைக்ரோ சாஃப்ட் நிறுவனரும் உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். 27 ஆண்டுகள் நீடித்திருந்த அவர்களது  திருமண வாழ்க்கை அப்போது முடிவுக்கு வந்தது. 

 

தற்போது 67 வயதான பில்கேட்ஸ் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவி பவுலா ஹர்ட் (60) மீது பில்கேட்ஸ் காதல் வயப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல இதழ் ஒன்று, ‘பில்கேட்ஸும் பவுலாவும் டேட் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், பவுலா இன்னும் பில்கேட்ஸின் பிள்ளைகளை சந்திக்கவில்லை’ எனக் கூறியுள்ளது. பில்கேட்ஸுக்கு ஜென்னர்(26), ரோரி (23) மற்றும் போப் (20) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை இருவரும் ஒன்றாக பார்த்து ரசித்தனர். உங்களுக்கு மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு அவர், "கண்டிப்பாக நான் ஒன்றும் ரோபோ இல்லை" என்று பதில் அளித்துள்ளார்.

 

 

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் டாக்; புதிய முயற்சியில் அன்பில் மகேஷ்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Talk with Microsoft for public school students!; Anbil Mahesh in a new venture

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக மைக்ரோசாஃப்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 

கடந்த அக்டோபரில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். முடிவுகளை வெளியிட்ட பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “எந்த நிகழ்விற்குப் போனாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக வைப்பவன். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது கூட அவரிடம் பேசினேன். சார், ஏதோ தனியா க்ளாஸ் வச்சு நடத்துறதா கேள்விப்பட்டேன். அதில் அரசுப்பள்ளி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டு உள்ளோம் என்று சொன்னார். உள்ளபடியே மகிழ்ச்சி. 

 

அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போய் பார்த்தோம். டீல்ஸ் என்ற அமைப்பின் மூலமாக ஐ.டி. துறையில் வேலை செய்து கொண்டு இருக்கும் நபர் அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று தான் பணியாற்றும் துறை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அதைப் பார்க்க முடிந்தது. இதே போன்ற நிகழ்வை நீங்கள் எங்கள் பள்ளி மாணவர்களிடமும் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லியுள்ளோம். 

 

வெறுமனே நீங்கள் பாடம் நடத்திச் செல்வதைக் காட்டிலும் உங்கள் நிறுவனத்தின் சான்றிதழ் கிடைத்தால் மாணவர்கள் பள்ளி முடிந்து செல்லும்போது அவர்களுக்கு இன்னும் அது மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நிறுவனத்தில் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்லுகிறோம் எனச் சொல்லியுள்ளார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.