Skip to main content

பணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 14/02/2020 | Edited on 03/03/2020

குழந்தை பராமரிப்பு வேலை, வீட்டு வேலை என்று ஏஜெண்டுகள் மூலமாக மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இப்போது சென்னை ஆவடியைச்சேர்ந்த ஜெயலட்சுமி, மலேசியாவில் ஒரு கும்பலிடம் சிக்கித்தவித்து நக்கீரன் எடுத்த அதிரடி முயற்சிகளால் அப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

 

incident



ஆவடியைச்சேர்ந்த கால்டாக்சி டிரைவர் கோதண்டராமன் மனைவி ஜெயலட்சுமி. கணவர் வருமானம் குடும்பம் நடத்த போதவில்லை என்று ஓட்டல் வேலைக்கு சென்றுவந்தார். அப்போது அனுஷியா என்ற வெளிநாட்டு ஏஜெண்டு அவருக்கு அறிமுகம் ஆனார். குழந்தையை மட்டும் பார்த்துக்கொள்ளும் வேலை; 50 ஆயிரம் சம்பளம் என்றதும், ஜெயலட்சுமி மலேசியா செல்ல முடிவெடுத்தார். பிளஸ்டூ படிக்கும் மகளுக்கும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனுக்கும் ஸ்கூல் பீஸ் கட்ட வசதியாக இருக்கும் என்று ஜெயலட்சுமி சொன்னதால், கோதண்டராமனும் இதற்கு ஒத்துக்கொண்டார். மலேசியா செல்ல 50 ஆயிரம் ரூபாயை அனுஷியாவிடம் கொடுத்தார்கள். வேலூரைச் சேர்ந்த முகமது இம்ரான் மூலமாக கடந்த அக்டோபர் மாதம் மலேசியா சென்றார் ஜெயலட்சுமி.

சொன்னபடியே அங்கே குழந்தை பராமரிப்பு வேலை மட்டும் இல்லை. வீட்டு வேலைகள் அத்தனையையும் ஓய்வின்றி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தினார்கள். தூங்கக்கூட முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஜெயலட்சுமி. "தூங்கக்கூட முடியாத அளவுக்கு வேலை அதிகமாக இருக்கு. என்னால இதுக்குமேல இங்க இருக்கமுடியாது, ஊருக்கே அனுப்பி வச்சிடுங்க...' என்று, மலேசியா ஏஜெண்டுகள் வினோத், சரளாவிடம் அழுதார். "மூணு மாசம் கழித்து, வேறு வேலை வாங்கித் தருகிறோம். அதுவரை சமாளித்துக்கொண்டிரு' என்று ஆறுதல் சொல்லிவிட்டனர். ஆனால், மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அதே வீடுதான் அதே வேலைதான்.

 

incident



இதற்கிடையில் ஜெயலட்சுமியின் உடல்நிலையும் மிகவும் மோசமானது. இதற்கு மேலும் அங்கே இருந்தால் தனது பிணம்தான் ஊருக்கு செல்லும் என்று நினைத்த ஜெயலட்சுமி, அங்குள்ள ஒருவரின் மூலமாக கணவனை தொடர்புகொண்டு, அழுதிருக்கிறார்.

கோதண்டராமன் இது தொடர்பாக வினோத், சரளாவிடம் பேசியபின்னர், மூன்று மாதம் சம்பளம் என்று 76 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கோதண்டராமன் பலமுறை முயன்றும் கூட ஜெயலட்சுமியிடம் பேசவே முடியவில்லை.

மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை உணர்ந்த கோதண்டராமன், "ஜெயலட்சுமியை ஊருக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்' என்று கெஞ்சினார். அதற்கு, "2 லட்சம் அனுப்பி வை. உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கிறோம். இல்லேன்னா பொய் கேஸ் போட்டு ஜெயில்ல போட்டுவிடுவோம்'’என்று மிரட்டினார்கள்.


"மனைவியை மீட்டுத் தாருங்கள்' என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கோதண்டராமன் புகார் கொடுத்தார். அவர்கள், ஆவடி போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல அனுஷியாவையும், இம்ரானையும் விசாரிச்ச எஸ்.ஐ., ‘அவுங்க சொல்ற மாதிரியே சுமுகமா முடிச்சிக்கோங்க'' என்று கை விட்டுவிட்டார்.

இந்த நிலையில், கோதண்டராமன் நக்கீரனை தொடர்புகொண்டு கண்ணீர் வடித்தார். உடனே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம். பின் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணைக் கமிஷனர் உதவியுடன் வழக்குப் பதிவு செய்து, வெளிநாடு வாழ் தமிழக நல ஆணையர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் ஐ.ஏ.எஸ். மூலம் இந்திய தூதரகம் மற்றும் மலேசிய வெளியுறவுத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டது .


கலெக்டர் உதவியுடன், மலேசியாவில் செயல்படும் தன்னார்வலர் பாத்திமாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்த பாத்திமாவே ஒரு ஏஜெண்டு என்பதுடன், சரளாவுடன் சேர்ந்து கொண்டு அவரும் பணம் கேட்டு மிரட்டியது அதிர்ச்சியானது.

நடந்தவை அனைத்தையும் பின்னர் கலெக்டரிடம் கூறினோம். அதன் பின்னர் நடந்த முயற்சியினால், ஏழு நாட்கள் கழித்து ஜெயலட்சுமியை பேச வைத்தார்கள். ஆனாலும், ’பணம் தராவிட்டால் பொய்வழக்கில் ஜெயிலுக்கு அனுப்புவோம்’ என்றே மிரட்டி வந்தனர். இதையடுத்து, லண்டனில் உள்ள அப்துல் பாஷித் என்ற தன்னார்வலரான தமிழர் மூலம் மலேசியன் ஹைகமிஷனுக்கு அழுத்தம் தரப்பட்டது.

இந்த நிலையில், அப்துல் பாஷித் மற்றும் துணைக்கமிஷனர் நாகஜோதியின் அறிவுறுத்தலின்படி, 80 ஆயிரம் ரூபாய்க்கான தேதி குறிப்பிடாத காசோலைகள் கொடுக்கப்பட்டு ஜெய லட்சுமி மீட்கப்பட்டார்.

அடுத்தகட்ட நட வடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மீட்கப்பட்ட ஜெய லட்சுமி நம்மிடம் பேசிய போது, "நக்கீரன் இல்லை என்றால் என் குழந்தைகள் இன்று என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது''’என்று சொல்லிவிட்டு அழுதார். அவர் மேலும், "உன் வீட்டுக்காரனால பணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட் டுப்போ'’’என்று சொல்லி அடித்து சித்ரவதை செய்தார்கள். நான் மீட்கப்பட்டுவிட்டேன். ஆனால், நான் இருந்த அறையில் இன்னொரு தமிழ்நாட்டுப் பொண்ணும், ஒரு வடமாநிலத்துப் பொண்ணும் சிக்கித் தவிக்கிறார்கள்''’என்று அதிரவைக்கிறார்.

 

 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.