Skip to main content

திமுகவிடம் லைசென்ஸ் இருக்கு...வர வேண்டியது வரும்...அதிர வைத்த எடப்பாடி!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

தமிழக முதல்வர் எடப்பாடி தன் வசம் வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் விடப்படும் டெண்டர்கள் அனைத்திலும் 13 சதவீதம் கமிஷன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் துறையைச் சேர்ந்தவர்கள். தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் அதிக டெண்டர் எடுப்பதாக முதல்வர் எடப்பாடியிடம் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள் குற்றச்சாட்டு வைக்க, அதற்கு முதல்வரே, "தமிழக முழுவதும் தி.மு.க. பிரமுகர்கள் தொழில்முறை லைசென்ஸ் வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் எடுப்பதில் தவறு எதுவும் கிடையாது. உங்களுக்கு தேவையான கமிஷனை வாங்கிக்கொள்ளுங்கள்'' என அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டாராம். 

 

dmk



ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கொடுத்தால் போதும் என்று சொன்ன முதல்வரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது முதல்வருக்கே தெரியாமல் 3 சதவீதம் கூடுதலாக கேட்டு டெண்டர் போடுவதற்கு முன்னமே திருச்சி ஒப்பந்தக்காரர்களிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்கள். வருகிற அக்டோபர் 1-ம் தேதி CRIDP என்கிற பெயரில் ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய்க்கான டெண்டர் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அக்டோபர் 4-ம் தேதி டெண்டர் திறக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே 13 சதவீதம் கமிஷன் தொகையாக 15.60 கோடி வாங்குவார்கள். ஆனால் இந்த முறை 3% அதிகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை டார்ச்சர் செய்கிறார்கள் என்கிற சத்தம் அதிகமாக இருக்கிறதாம். லால்குடி, முசிறி, துறையூர், திருச்சி, மணப்பாறை என ஒவ்வொரு ஏரியா அதிகாரியும் தன்னுடைய ஏரியாவில் உள்ள ஒப்பந்தக்காரர்களிடம் கூடுதல் தொகை கேட்பதுதான் தற்போது பெரிய பேச்சாக இருக்கிறது. 


என்ன நடக்கிறது? கமிஷன் தொகை உயர்வுக்கு யார் காரணம் என்று விசாரிக்கையில்... 

"திருச்சியை பொறுத்தவரையில் ஒப்பந்தக்காரர்கள் சார்பாக கண்ணையன் என்பவர் கடந்த சில வருடங்களாக கமிஷன் தொகையை வசூல் செய்து மொத்தமாக கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரை கடந்த வருடம் ஒதுக்கிவிட்டு திருக்குமரன் என்பவர் வசூல் செய்து கொடுத்து வந்தார். அவர் அந்த 13 சதவீதத்தில் பாதியை மட்டும் நெடுஞ்சாலைத்துறையிடம் கொடுத்து விட்டு மீதியை முதல்வரிடம் கொடுத்துவிட்டேன் என்று ஏமாற்றியதால் இந்த முறை உஷாரான நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி கூடுதலாக 3 சதவீதம் கேட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார்கள்.
 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.