Skip to main content

ஆன்மீக அரசியல் என்று சொன்னபிறகும் ரஜினியை வரவேற்காமல் இருப்போமா !! -தமிழக பாஜக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்

Published on 19/06/2018 | Edited on 22/06/2018

 

தமிழக அரசியலில்  பல்வேறு  மாற்றங்கள் நடந்துவரும் நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தனது அரசியல் கருத்துக்களை நக்கீரனுடன் பகிர்ந்துகொண்டார்.
 

bjp

 

இடைத் தேர்தல்களில் பாஜக சரிவு, நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் விதம் இவையெல்லாம் பார்க்கும்போது, மோடி அலை குறைந்துவிட்டதா?

ஒருவேளை நீங்கள் சொல்கிற மாதிரி 2014களிலேயே மோடி அலை முடிந்துவிட்டது என எடுத்துக்கொண்டால், 2014-க்கு பிறகு நடந்த கர்நாடக தேர்தல்வரை பாஜகவின் வெற்றி முகத்தை எப்படி பார்ப்பது. இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மோடி அலை குறைந்துவிட்டது என்று சொன்னால் மாநிலங்களெல்லாம் பாஜகவின் கைகளுக்கு வருவதை நீங்கள் மோடி அலை தொடர்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை முடிந்துவிட்டது என நினைக்கிறீர்களா? எங்களை தவிர ஆல்ட்டர்நேட்டிவ் என்று யாராவது இருக்கிறார்களா? பாஜகவை ஒழிச்சு முடுச்சு எங்களுக்கு பதில் ''ஆல்ட்டர்நேட்டிவ்'' யாராவது இருக்கிறார்களா? இன்னைக்கும் ''சிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டி'' நாங்கதான். பெரும்பான்மை இல்லை என்பது ஒன்று, ஆனால் லார்ஜெஸ்ட் சிங்கிள் பார்ட்டி நாங்கதானே. கர்நாடகாவில் காங்கிரசும் ஜெ.டி.எஸ்ஸும் ஒன்னு சேர்ந்துதானே ஆளுறாங்க. ஆனால் ''சிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டி'' நாங்கதானே அதை ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். கர்நாடக தேர்தலை பொறுத்தவரை ஆளுநரோ, குடியரசு தலைவரோ யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெரிந்து தனிப்பெரும் கட்சியாக யார் வருகிறார்களோ அவர்களுக்குத்தானே உரிமை. அதன்படிதான் எங்களை அழைத்தார்கள். ஆனால் எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. தேர்தலுக்கு  பிறகுதானே கூட்டணி அமைந்தது அங்கே எனவே எல்லா மாநில தேர்தல்களிலும் மக்கள் பாஜகவிற்கு பெரும்பான்மையை கொடுக்கிறார்கள், கடைசியாக நடந்த கர்நாடக தேர்தல் உட்பட. பாஜக புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது தோல்விமுகமாகவோ இல்லை ஆனால்  நிறைய பேர் அப்படி ஆகணும்'னு ஆசைப்படுறாங்க. எல்லோரும் என்ன  நினைக்கிறார்கள், நாம வரவில்லை என்றாலும் பரவாயில்லை பாஜக மட்டும் வரக்கூடாது என நினைக்கிறார்கள். வாங்க அரசியல் களத்தில் மக்கள்  முடிவு பண்ணட்டும்.

 

 

 

பாஜகவைச் சேர்ந்த தமிழக தலைவர்கள் பேசுபவை கடந்த நாட்களில் சர்ச்சையில் முடிகிறது. சமீபமாக நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்கூட சமூக விரோதிகள், தேச விரோதிகள், ஆன்டி இந்தியன்ஸ் என கூறுகின்றனர் அதுபற்றி ?

அதற்கான வாய்ப்புகள் என்பதும் அதற்கான சம்பவங்கள் என்பதும் பார்த்துக்கொண்டிருந்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாஜகவின் தலைவர்கள் பேசும் பொழுது தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் என்று பேசுகிறார்கள் என்று பார்க்கக்கூடிய நீங்க ஏன் தமிழகத்திலுள்ள அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவதை என்னைக்காவது விமர்சனம் பண்ணியிருக்கிங்களா?. 

இந்தியா ஒரு நாடா இந்தியாவை விட்டு பிரிஞ்சு போவோம், தமிழ்நாட நாங்க தனி நாடா மாற்றுவோம் என்று கூறுகிறார்களே. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், சகோதரர் சீமான் என எத்தனை எத்தனை அமைப்புகள். இன்னைக்கு கண்ணுமுன்னாடி அமைப்புகள் எல்லாம் ஒவ்வொரு பேரு வெச்சுகிட்டு பேசறாங்களே. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக இந்தியாவின் தேசபக்திக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் பாஜக தலைவர்களின் கருத்துக்களை மட்டும் சர்ச்சையாக்குவது ஏன்? அதையும் விமர்சனம் பண்ணுங்க. தமிழ்நாட்டு மக்கள் இன்னைக்கு  வேதனை படுறாங்க ஏன் இந்த தமிழ்நாடு இப்படி போய்க்கொண்டிருக்கிறது.    

 

 

 

 

நெடுவாசல் போராட்டமாகட்டும், நியூட்ரினோ போராட்டமாகட்டும் மக்கள் பின்னாடி நீங்கள்(பாஜக) நிற்கிறீர்களா ?

நாங்க வந்து எங்க கட்சியின் கொள்கைமுடிவுப்படி, எது நாட்டுக்கு நல்லது, எந்த திட்டம் நாட்டிற்கு தேவைப்படும் அப்படிங்கிறத அரசாங்கம் முடிவு பண்ணும். எனவே ஒரு சில கட்சிகள் எடுக்கின்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லையென்றால் மக்களுடனே நாங்கள் இல்லை என்று அர்த்தமல்ல. மக்களோடு இருக்கிறதாக சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் தேர்தலின் போது எங்கே இருந்தார்கள். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு அளித்த வாக்குகள் என்ன? வாக்கு சதவிகிதம் என்ன?  அப்படியிருக்க அரசியல் ரீதியாக அவர்களுக்கு கருத்து சொல்ல உரிமைகள் இருந்தால் பாஜக தலைவர்களுக்கும் இருக்கும்தான். பிறகு ஏன் எங்களோட கருத்துக்களை மட்டும் சர்ச்சையாக பார்க்குறீங்க. அவர்களோட குரலை எல்லாம் புறக்கணிச்சிட்டு எங்களோட குரலை மட்டும் சர்ச்சையாக்குவதை நாங்கள் அரசியலாய் பார்க்கிறோம். எங்க மத்திய அமைச்சர் கடந்த ஒன்றரை வருட காலமாக சொல்லிகொண்டிருக்கிறார் தமிழகம் தேசவிரோதிகளின் பயிற்சி கூடமாக இருக்கிறது என்று. ஒவ்வொரு போராட்டத்தின் முடிவிலும் அரசே சொல்கிறது ஆமாம் சமூகவிரோதிகள் தான் காரணம், அவர்கள் மீது கேஸ் போட்டுயிருக்கோம் என்று.

 

சமீபத்தில் கோவையில் நடந்த தொலைக்காட்சி நிழச்சியில் அமீர் பேசியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் எதும் தவறாக பேசவில்லை என அமீர் கூறியுள்ளார் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

 

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் சர்ச்சைக்குரிய, அவசியமில்லாத கருத்தை தெரிவித்திருக்கிறார் எனவேதான் அந்த சேனல்கூட அதை ஒளிபரப்பவில்லை. சசிகுமாரின் படுகொலை என்பது ஆரம்பத்தில் என்னவெல்லாம் சொன்னார்கள். சசிகுமார் கொலை சொந்த விவகாரம், குடும்ப விவகாரம் என என்னென்னவோ சொன்னார்கள் ஆனால் அதற்குப்பின் என்னவாயிற்று மாநில அரசே அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார்கள். மத அடிப்படைவாத, மத பயங்கரவாத குழுக்களுக்கும் இந்த கொலையிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்று சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. அதையெல்லாம் கண்ணை திறந்து பார்க்கவே மாட்டீர்களா? ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, சசிகுமார், பாடி சுரேஷ் இவையெல்லாம் சமீபத்தில் நடந்தது. இத்தனைபேரும் இயக்கத்தின் சார்பாக வேலை செய்ததற்கு சமூக விரோதமாக அவர்களை கொலை செய்தார்களே அப்போ இந்த தமிழ்நாடு சமூக விரோதிகளோட கூடாரமா மாறிக்கொண்டிருக்கவில்லையா? சமீபத்தில் மட்டுமல்ல ஏற்கனவே இதற்கு முன்பாகவே எவ்வளவு உயிர்களை எங்கள் இயக்கத்திலிருந்து பலிகொடுத்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். ஆஃபீஸ் குண்டுவெடிப்பிலிருந்து ஆரம்பித்து, நான் கல்லூரி படிக்கும் பொழுது 1988ல் வீரகணேஷின் கொலையிலிருந்து ஆரம்பிச்சது. வேற இயக்கங்களோட இழப்புகளை பற்றி பேசுபவர்கள் அது எங்க இயக்கமாக இருந்தால் மட்டும்  புறக்கணிக்கிறீர்களே அது எந்தவகையில் தர்மம். எந்தவொரு வன்முறை செயலுக்கும் பாஜக ஒத்துழைக்காது, ஆதரிக்காது.

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன ?


இதை ஏன் மாநில அரசு இவ்வளவு நாள் வளர்த்துவிட்டது. 99 நாள் ஒரு போராட்டத்தை மாநில அரசு வேடிக்கை பார்க்கணுமா? அரசியல் சார்பில்லாத மக்கள் போராட்டம் என்றால் ஏன் அங்கு அரசியல் தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இங்கு எதாவது ஒன்று கையில் கிடைக்குமா என பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இறுதியில் அப்பாவியான பொதுமக்கள்தான் சுடப்பட்டனர். மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டர்லைட் ஆலை எத்தனை வருடமாக இயங்கிக்கிட்டு இருக்கு. அந்த ஆலைக்கு பாஜக காரணமா? பிரதமர்தான் காரணமா ஸ்டெர்லைட்டுக்கு? எடுக்கவேண்டிய முடிவை  மாநில அரசு ஏன் முன்னதாகவே எடுக்கவில்லை. மாநில அரசின் மீது எங்களுக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது. 

 

நிறைய விமர்சனங்கள் வருகிறது பாஜக வழியில்தான் அதிமுக ஆட்சி நடக்கிறதென்று ஆனால் கடந்த நாட்களில் மாநில அரசாங்கத்தை எவ்வளவோ முறை கடுமையாக விமர்சித்திருக்கோம். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பற்றி பேசிய மத்திய அமைச்சர் தமிழ்நாடு எவ்வளவு மோசமான சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னாரே. அப்படியிருந்தும் மாநில அரசு சரியாக செயல்படமால் மெத்தனமாக இருந்தால் அதற்கான விலையை அவங்க கொடுத்துதான் ஆகணும். மக்களிடம் சரியான தகவலை கொண்டுசேர்க்காமல் தவறான கருத்துக்களால் அவர்களை திசை திருப்பி அரசாங்கத்திற்கு எதிரான, ஜனநாயகத்திற்கு எதிரான  கருத்துக்களை வெளியிடும் தலைவர்கள், அதில்  ஈடுபடும் அமைப்புகள், அவர்களுடைய பின்னணி, அவர்கள் அச்சிடும் பிரசுரங்கள் என இவை எல்லாமே முழுக்க, முழுக்க மக்களை திசை திருப்புவதாகவே இருக்கிறது.  

 

ஸ்டெர்லைட் ஆலையிடன் அதிகம் நிதிவாங்கிய கட்சி பாஜக எனக்கூறுகிறார்களே ?

அதுபற்றி எனக்கு தெரியாது.

 

ரஜினியுடைய ஆன்மீக அரசியலை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ஆன்மீக அரசியலை நான் கட்டாயம் வரவேற்கிறேன். நாங்கள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அவரும் ஆன்மீக அரசியல் என்று சொல்லியிருக்கிறார். ஆன்மீக அரசியல் என்று சொல்லும்போது பாஜக வரவேற்காமல் இருக்க முடியுமா.

 

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.