Skip to main content

சம்பளத்துக்காக மட்டுமே போராடுறோமா? -ஜாக்டோ-ஜியோ போராட்டக் களம்!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
jactogeo

 

"இவுங்க பாக்குற வேலைக்கு இந்த சம்பளம் போதாதாக்கும்...''


""அரசு அலுவலகத்துல யாராச்சும் லஞ்சம் வாங்காம காரியம் பாக்குறாங்களா''


அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் எப்போது நடந்தாலும் சரி... இப்படி ஒரு பேச்சு பொதுமக்களிடம் வெளிப்படுவதும், அதனை அரசாங்கம் மற்றும் அரசு ஆதரவு ஊடகங்கள் மிகைப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.


அதுவும்போக, யாராவது ஒருத்தரைக் கொண்டு போராட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தின் மூலமாக தடையுத்தரவு பெறுவதும் சமீபகாலமாக அரசாங்கத்தின் புதிய பாணியாக மாறியிருக்கிறது.

 


அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல, நள்ளிரவில் கைது செய்து, பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அதன் பலனை அடுத்துவந்த நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் அனுபவித்தார். அவர்தான், 2011-2016 ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களின் பென்சன் திட்டத்தை ரத்துசெய்தார். அது ஏற்படுத்திய எதிர்ப்பு உணர்வு காரணமாக, 2016 தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்காலமே அரசாங்கத்தின் பென்ஷனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அத்தகைய வாழ்வாதாரத்தை மீட்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் ஜாக்டோ ஜியோ அமைப்பு காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியது. 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்களைக் கொண்ட இந்த அமைப் பின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். மதுரையில் போராடிய அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினார்கள். இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பரசு, “""கைது நடவடிக்கைக்கு அஞ்சாமல் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம்''’என்றார் நம்மிடம்.
jactogeo
ஏற்கெனவே, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதி போராட்டத்துக்கு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்தது.

அந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. விசாரணையில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிமன்றமே கருத்துத் தெரிவித்துள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் இப்போது ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வு -நீட் தேர்வு தயாரிப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் போராட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கும்படி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல் மூலமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு 25-ஆம் தேதி அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அரசு ஊழியர்களை போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை அறிந்த பிறகு இந்த வழக்கை விசாரிக்க வசதியாக 29 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோவின் போராட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்து அவர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை விளக்கும்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ஞானத்தம்பியிடம் பேசினோம்.…

 


""பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளிகளின் தனித் தன்மையை ஒழித்து, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் அவற்றை இணைக்கக் கூடாது. அரசின் இந்த முடிவால் 3500 சத்துணவு மையங்கள் மூடப்படுவதை தடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களை குறைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளுக்கு நியமிக்கும் (பணி இறக்க நடவடிக்கை) முடிவை கைவிட வேண்டும். அந்த வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து வேலைவாய்ப்பு வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் அனைத்தும் எந்தக் காலத்திலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கானவை ஆகும். 9 கோரிக்கை களில் 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும்கூட அரசின் கடமையுடன் தொடர்புடையதுதான்.

ஆனால், எங்கள் கோரிக்கைகள் குறித்து இரண்டு ஆண்டுகளாக சாக்குப்போக்கு சொல்லியே காலத்தைக் கடத்துகிறது அரசு. நீதிமன்றம் அறிக்கை கேட்டால் சம்பளத்திருத்தம் தொடர்பாக குளறுபடியான அறிக்கையை வேண்டுமென்றே தாக்கல் செய்கிறது. அமைச்சருடன் பேச்சு நடத்தினால்... எங்கள் கோரிக்கை எதையுமே ஏற்காமல் இழுத்தடிப்பது, எங்கள் கோரிக்கை குறித்து கேட்கும் மனநிலை முதல்வருக்கே இல்லாதது என்று எங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்கே நீடித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? மூன்றரை லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பி புதிய வேலைவாய்ப்புகளை வழங்க அரசு முயற்சியே செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல்தான் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்''’’என்றார்.

ஜனவரி 24 அன்று கூடிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், தங்கள் போராட்டம் தொடரும் என்றும், 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தனர்.

-சோழன், அருண்பாண்டியன்
படங்கள் : ஸ்டாலின்


 

 

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.