Skip to main content

சிறை செல்வாரா தங்கமணி? லஞ்ச ஒழிப்புத்துறை சொல்லும் தகவல்கள்! 

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

Will Thangamani go to jail? Corruption Eradication Information!

 

இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள்.

 

"லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்கள்தானே? அ.தி.மு.க. ஆட்சி வருமானால் உங்களின் சட்டையை கழட்டுவோம்'' என வெளிப்படையாகவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மிரட்டினார்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய போலீஸார், "சி.வி.சண்முகம் உட்பட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களுடைய பயத்தின் வெளிப்பாடுதான் இந்தப் பேச்சு'' என்கிறார்கள்.

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் கணக்கில்லாமல் வெளிப்படையாகவே நடந்தது. அதை எதிர்த்து தி.மு.க. போன்ற எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, அறப்போர் இயக்கம் போன்ற தன்னார்வ செயல்பாட்டாளர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய உத்தரவுகள் உயர்நீதிமன்றத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அப்போதைய அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையை அவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவிடாமல் முடக்கினார்கள். அந்தத் துறையின் தலைவரான இயக்குநர் பதவிக்கு ஆளே போடவில்லை.

 

Will Thangamani go to jail? Corruption Eradication Information!

 

துணை இயக்குநராக இருந்த ராதிகா என்கிற டி.எஸ்.பி., எஸ்.பி.க்களாக இருந்த பொன்னி மற்றும் ஷண்முகம், டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி ஆகிய நான்கு பேரும் அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த வேலுமணி, ராஜேந்திரபாலாஜி போன்றோர் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை' என சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சான்றிதழ் கொடுத்தார்கள்.

 

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கந்தசாமி என்கிற ஐ.ஜி. பொறுப்பேற்றார். ஆனால் ராதிகா, பொன்னி, ஷண்முகம் போன்ற அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அப்போது டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம், கந்தசாமி "அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு சாதகமாக செயல்படும் ராதிகாவை வைத்துக்கொண்டு என்னால் தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை. உடனே ராதிகாவை மாற்றுங்கள்'' என்றார். டி.ஜி.பி. திரிபாதி செய்யவில்லை. தொடர் மோதலுக்குப் பின், ராதிகாவை லஞ்ச ஒழிப்புத்துறை பதவியைவிட வெயிட்டான திருச்சி சரக சட்டம்-ஒழுங்கு டி.ஐ.ஜி.யாக திரிபாதி மாற்றினார். அங்கிருந்தும் தகவல்கள் போய்க்கொண்டிருந்ததால், வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியபோது சில லட்சங்களை மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்ற முடிந்தது. உடனே ராதிகாவை சென்னைக்கு மாற்ற வைத்து, பவானீஸ்வரி என்கிற நேர்மையான அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொண்டுவந்தார் கந்தசாமி.

 

Will Thangamani go to jail? Corruption Eradication Information!

 

பவானீஸ்வரி நேரடியாக ரெய்டுக்கு தலைமை தாங்கினார். தங்கமணியின் சொத்துக்களை ரெய்டு செய்தபோது, பவானீஸ்வரி சேலத்தில் வந்து தங்கினார். மொத்தம் 69 இடங்களில் ரெய்டு நடந்தது. "ரெய்டு எங்கே நடக்கிறது, எப்படி நடக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கே தெரியாது. எங்கே ரெய்டுக்குப் போக வேண்டும் என்கிற முகவரியை பவானீஸ்வரி ஒவ்வொரு டீமுக்கும் கொடுத்தார். யார் வீட்டுக்கு ரெய்டுக்குப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் போலீசார் சென்றார்கள்'' என லஞ்ச ஒழிப்புத்துறையில் நடந்த மாற்றத்தைச் சொல்கிறார்கள் போலீசார்.

 

தி.மு.க. ஆட்சி அமைந்த உடனே கந்தசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் விபரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரு ஹோட்டல் நடத்துகிறார். அந்த ஹோட்டலில் அவர் எவ்வளவு பணம் போட்டிருக்கிறார், அதற்கான பத்திரப் பதிவு எங்கு நடந்தது என அனைத்து விபரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிவிட்டது.

 

"முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரு கல் குவாரி நடத்துகிறார்' என வருமானவரித்துறைக்கு கூட தெரியாது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை மிகச் சரியாக அங்கு சென்றது. இது முன்னாள் அமைச்சர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த விஷயம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு வழக்கில், ஒரு ரூபாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்து, அதை முறையாக விளக்காமல் போனதால் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது போல 4 வருடம் நிச்சயம் தண்டனை கிடைக்கும். வேலுமணி தவிர இதுவரை ரெய்டுக்குள்ளான நான்கு முன்னாள் அமைச்சர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால், தி.மு.க. ஆட்சிக் காலத்திற்குள்ளேயே அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். சசிகலாவை போல 6 வருடம் தேர்தலில் நிற்க முடியாது. அந்த வரிசையில் ஓ.பி.எஸ்., எடப்பாடி ஆகியோரை கொண்டுவரவும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமி முனைப்புடன் இருக்கிறார் என்கிறார்கள் உயரதிகாரிகள்.

 

அதேநேரத்தில், "முன்னாள் அமைச்சர் மேல் பாய்கிறார்கள், அதிகாரிகளை விட்டுவிடுகிறார்கள். வேலுமணியுடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன், பிரகாஷ், ஜெகநாதன் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை? முன்னாள் அமைச்சர் காமராஜுடன் சேர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ஊழலில் சம்பந்தப்பட்ட சிவில் சப்ளையைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காப்பாற்றப்பட்டிருக்கிறார்'' என பரபரப்பாக குற்றம்சாட்டுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.

 

 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.