Skip to main content

சிறை செல்வாரா தங்கமணி? லஞ்ச ஒழிப்புத்துறை சொல்லும் தகவல்கள்! 

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

Will Thangamani go to jail? Corruption Eradication Information!

 

இதுவரை ஐந்து முன்னாள் அமைச்சர் களை குறிவைத்த லஞ்ச ஒழிப்புத் துறை, "அடுத்து சில அமைச்சர்கள், இறுதியாக எடப்பாடிதான் எங்கள் குறி' என்கிறார்கள்.

 

"லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே உங்களை எச்சரிக்கிறோம். நீங்கள் என்ன சுத்தமானவர்களா? சட்டம்-ஒழுங்கிலும், போக்குவரத்துத் துறையிலும் வாங்கித் தின்றவர்கள்தானே? அ.தி.மு.க. ஆட்சி வருமானால் உங்களின் சட்டையை கழட்டுவோம்'' என வெளிப்படையாகவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மிரட்டினார்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய போலீஸார், "சி.வி.சண்முகம் உட்பட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களுடைய பயத்தின் வெளிப்பாடுதான் இந்தப் பேச்சு'' என்கிறார்கள்.

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் கணக்கில்லாமல் வெளிப்படையாகவே நடந்தது. அதை எதிர்த்து தி.மு.க. போன்ற எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, அறப்போர் இயக்கம் போன்ற தன்னார்வ செயல்பாட்டாளர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டிய உத்தரவுகள் உயர்நீதிமன்றத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அப்போதைய அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையை அவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவிடாமல் முடக்கினார்கள். அந்தத் துறையின் தலைவரான இயக்குநர் பதவிக்கு ஆளே போடவில்லை.

 

Will Thangamani go to jail? Corruption Eradication Information!

 

துணை இயக்குநராக இருந்த ராதிகா என்கிற டி.எஸ்.பி., எஸ்.பி.க்களாக இருந்த பொன்னி மற்றும் ஷண்முகம், டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி ஆகிய நான்கு பேரும் அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த வேலுமணி, ராஜேந்திரபாலாஜி போன்றோர் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை' என சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சான்றிதழ் கொடுத்தார்கள்.

 

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கந்தசாமி என்கிற ஐ.ஜி. பொறுப்பேற்றார். ஆனால் ராதிகா, பொன்னி, ஷண்முகம் போன்ற அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அப்போது டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம், கந்தசாமி "அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு சாதகமாக செயல்படும் ராதிகாவை வைத்துக்கொண்டு என்னால் தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை. உடனே ராதிகாவை மாற்றுங்கள்'' என்றார். டி.ஜி.பி. திரிபாதி செய்யவில்லை. தொடர் மோதலுக்குப் பின், ராதிகாவை லஞ்ச ஒழிப்புத்துறை பதவியைவிட வெயிட்டான திருச்சி சரக சட்டம்-ஒழுங்கு டி.ஐ.ஜி.யாக திரிபாதி மாற்றினார். அங்கிருந்தும் தகவல்கள் போய்க்கொண்டிருந்ததால், வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியபோது சில லட்சங்களை மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்ற முடிந்தது. உடனே ராதிகாவை சென்னைக்கு மாற்ற வைத்து, பவானீஸ்வரி என்கிற நேர்மையான அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொண்டுவந்தார் கந்தசாமி.

 

Will Thangamani go to jail? Corruption Eradication Information!

 

பவானீஸ்வரி நேரடியாக ரெய்டுக்கு தலைமை தாங்கினார். தங்கமணியின் சொத்துக்களை ரெய்டு செய்தபோது, பவானீஸ்வரி சேலத்தில் வந்து தங்கினார். மொத்தம் 69 இடங்களில் ரெய்டு நடந்தது. "ரெய்டு எங்கே நடக்கிறது, எப்படி நடக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கே தெரியாது. எங்கே ரெய்டுக்குப் போக வேண்டும் என்கிற முகவரியை பவானீஸ்வரி ஒவ்வொரு டீமுக்கும் கொடுத்தார். யார் வீட்டுக்கு ரெய்டுக்குப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் போலீசார் சென்றார்கள்'' என லஞ்ச ஒழிப்புத்துறையில் நடந்த மாற்றத்தைச் சொல்கிறார்கள் போலீசார்.

 

தி.மு.க. ஆட்சி அமைந்த உடனே கந்தசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் விபரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரு ஹோட்டல் நடத்துகிறார். அந்த ஹோட்டலில் அவர் எவ்வளவு பணம் போட்டிருக்கிறார், அதற்கான பத்திரப் பதிவு எங்கு நடந்தது என அனைத்து விபரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிவிட்டது.

 

"முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒரு கல் குவாரி நடத்துகிறார்' என வருமானவரித்துறைக்கு கூட தெரியாது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை மிகச் சரியாக அங்கு சென்றது. இது முன்னாள் அமைச்சர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த விஷயம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு வழக்கில், ஒரு ரூபாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்து, அதை முறையாக விளக்காமல் போனதால் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது போல 4 வருடம் நிச்சயம் தண்டனை கிடைக்கும். வேலுமணி தவிர இதுவரை ரெய்டுக்குள்ளான நான்கு முன்னாள் அமைச்சர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால், தி.மு.க. ஆட்சிக் காலத்திற்குள்ளேயே அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். சசிகலாவை போல 6 வருடம் தேர்தலில் நிற்க முடியாது. அந்த வரிசையில் ஓ.பி.எஸ்., எடப்பாடி ஆகியோரை கொண்டுவரவும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமி முனைப்புடன் இருக்கிறார் என்கிறார்கள் உயரதிகாரிகள்.

 

அதேநேரத்தில், "முன்னாள் அமைச்சர் மேல் பாய்கிறார்கள், அதிகாரிகளை விட்டுவிடுகிறார்கள். வேலுமணியுடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன், பிரகாஷ், ஜெகநாதன் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை? முன்னாள் அமைச்சர் காமராஜுடன் சேர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ஊழலில் சம்பந்தப்பட்ட சிவில் சப்ளையைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காப்பாற்றப்பட்டிருக்கிறார்'' என பரபரப்பாக குற்றம்சாட்டுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.