Skip to main content

"கஸ்தூரி செய்த நூலிழை தவறு ; யாரு எது செஞ்சாலும் கட்சி பொறுப்பேற்க வேண்டுமா...? ” - திருப்பதி நாராயணன் கேள்வி

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

jk

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார்.

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக ட்விட் செய்திருந்த நடிகை கஸ்தூரி பாஜகவில் யாராவது அக்கா தம்பி என்றால் நம்பி விடாதீர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்தக் கருத்து தொடர்பாக பாஜக துணைத்தலைவர் திருப்பதி நாராயணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " கஸ்தூரியின் அனைத்து ட்விட்டர் கருத்துக்களை எப்போதும் பார்ப்பேன். அது எப்போது நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இருந்துள்ளது. இந்தக் கருத்து மட்டும் அல்ல, இதற்கு முன்பு அவர் தெரிவித்த அனைத்து கருத்துக்களின் அடிப்படையிலும் இதைச் சொல்கிறேன். அவருடைய இந்தக் கருத்தில் மட்டும் கஸ்தூரி ஒரு நூலிழை தவறு செய்துவிட்டதாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு தனிமனிதர்கள் செய்கின்ற தவற்றுக்கெல்லாம் கட்சி பொறுப்பேற்க முடியாது. இது எங்கள் கட்சிக்கு மட்டும் இல்லை, அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். 

 

ஒரு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். இதற்கு திமுக பொறுப்பேற்றுக்கொள்ள முடியுமா? இது தனிப்பட்ட மனிதர்கள் செய்கின்ற தவறாகத்தான் பார்க்க வேண்டும். நான் இதில் திமுகவை மட்டும் குற்றம் சொல்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுகவை எடுத்துக்கொள்ளுங்கள், காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள், சில இடங்களில் கொலை வரை சென்ற சம்பவங்களை எல்லாம் நாம் பார்த்து வருகிறோம். இது இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் நடக்கிறது. தனி மனிதன் பேசினாலே அதற்குக் கட்சி பொறுப்பு என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

 

திமுகவில் சைதை சாதிக் என்ற ஒரு நபர் மிகப்பெரிய அளவில் ஆபாசமாகப் பேசினார். அவர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது. நீங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளார்களே என்று கேட்கிறீர்கள், இது ஒரு போதுமான நடவடிக்கையா? உங்களுக்கு இது முதலில் திருப்தி ஏற்படுத்துகிறதா? இந்த விவகாரமாவது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற தொலைப்பேசி உரையாடல். ஆனால் சைதை சாதிக் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். இதை திமுக ஆதரிக்கிறது என்று சொல்வீர்களா? தனிப்பட்ட பேச்சுகளுக்கு இவ்வளவு கேள்விகளை பாஜகவை பார்த்துக் கேட்கும் நபர்கள் திமுகவைச் சேர்ந்த இவரின் நடவடிக்கைக்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.