Skip to main content

அரசியலில் தோல்வியையே சந்திக்காத கார்கே; தோல்வியில் சிக்கித் தவிக்கும் காங்கிரசை மீட்டெடுப்பாரா? - காங்கிரஸும் கார்கேவும் ஒரு பார்வை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

ிப

 

காங்கிரஸ் கட்சியின் 20வது தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே. ஏறக்குறைய 80 வயதைக் கடந்த அவர் கிட்டதட்ட 137 ஆண்டுகள் பழைமையான காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வாகியுள்ளார். இந்த தேர்வு காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்குமா? இன்னும் இரண்டாண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற வாதப் பிரதிவாதங்கள் அகில இந்திய அரசியலில் கடந்த சில வாரங்களாக விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்க, பெரிய ஆரவாரமின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கார்கே. 

 

அரசியலில் இருப்பவர்கள் கட்சி தாவுவது என்பது அரிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கர்நாடகாவில் மட்டும் தினசரியைப் பார்த்தே பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த உறுப்பினர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியும். அந்த அளவிற்குப் பதவிக்காக, சீட்டுக்காக கட்சி மாறுவது என்பது அம்மாநிலத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகச் சாதரணமான ஒன்று. ஆனால் இன்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்கே இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கிட்டத்தட்ட 10 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர். 40 ஆண்டுகாலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 10 ஆண்டுகாலம் மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட வகையில் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவர். நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நேரு குடும்பத்தின் தளகர்த்தாக்களில் மிக முக்கியமானவர் என்ற நம்பிக்கையைப் பெற்றவர். 

 

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என்ற அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றிய கார்கே, இன்று காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைக்கும் கூட சில தேசியக் கட்சிகளில் தொழிலதிபர்களையும், மிட்டா மிராசுகளையும் ஒப்புக்கு தலைவராக வைத்துக்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அரசியல்  மூவ் பிரதான தேசிய கட்சிக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவே அரசியல் அறிந்தவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினருக்கும், அனைத்து பிரிவினருக்குமான கட்சி என்பதைக் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அதன் மூத்தத் தலைவர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால்  கார்கேவை காங்கிரஸ் கட்சி சுயமாக இயங்கவிடாது என்ற குற்றச்சாட்டும் ஆளும் கட்சி சார்பில் எதிர்க் கருத்தாக முன்வைக்கப்படுகிறது. 

 

ஆனால் தேர்தல் முடிவு வந்த சிலமணி நேரங்களிலேயே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரின் வழிகாட்டுதலின் படியே காங்கிரஸ் கட்சி இயங்கும் என அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தைத் தாண்டி சுயமாக காங்கிரஸ் கட்சியில் யாராவது இயங்க முடியுமா? 98ல் சீதாராம் கேசரிக்கு நடந்தது மறந்துவிட்டதா? என்ற ஆளும் தரப்பின் கேள்வியை எதிர்கொள்ளும் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் "நாங்கள் நேருவைப் பின்பற்றுபவர்கள், நாக்பூரை அல்ல" என்று கூறி ஆளும் தரப்பின் விமர்சனத்தைப் புறந்தள்ளி வருகிறார்கள்.

 

இரண்டு தரப்புக்கும் இடையே வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க, கார்கே காங்கிரஸ் கட்சியை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியைக் கடந்து அரசியலை கவனித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 92ல் நரசிம்மராவுக்குப் பிறகு தென்னிந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கார்கே. குறிப்பாக வட இந்திய காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும், மாநிலங்களில் மிகப்பெரிய சவாலாக உள்ள கோஷ்டி பூசலை குறைக்க வேண்டும், உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து கூட்டணி அமைப்பது வரை மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

 

இத்தனை ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியை வழிநடத்த எந்த விதத்திலும் கார்கே குறைவானவர் இல்லை என்பது அவர் கடந்து வந்த அரசியலை கவனித்தாலே அனைவருக்கும் புரியும். ஆனாலும் அரசியலில் தோல்வியையே சந்திக்காத அவர், தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வைத்தியம் பார்த்து புத்துயிர் அளிப்பாரா? மோடி மஸ்தான் வேலைக்கு முடிவு கட்டுவாரா? என்பதே காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

 

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.