Skip to main content

ட்ரம்ப்பை மிரளவைத்த தபால்வாக்குகள்.. இத்தேர்தலில் முக்கியத்துவம் பெறுவது ஏன்..?

Published on 06/11/2020 | Edited on 06/11/2020
donald trump angry

 

 

பரபரப்பாக மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை. நெவாடா, பென்சில்வேனியா, ஜார்ஜியா, விஸ்கான்சின், மிச்சிகன் உள்ளிட்ட மாகாணங்களில் தற்போதுவரை வாக்கு எண்ணிக்கை இழுபறியாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் ஜோ பைடன் 264 எலோக்டரல் காலேஜ் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முற்றிலுமாக முடியும் தருவாயில் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், வெற்றி யாருடனும் கைகோர்த்து நிற்கலாம்.

 

இப்படியான இழுபறிக்கும், இழுத்துக்கொண்டே செல்லும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரே காரணம் என்றால் தபால் வாக்குகள்தான். கரோனா அச்சுறுத்தலால் உலகமே பீதியில் இருந்தபோது, அமெரிக்காவின் அதிபர் அதை அசால்ட்டாகவே கையாண்டார். அதற்கு பலனாக அமெரிக்கா கரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவுக்கு இது கண்டிப்பாக ஒரு சாதனை அல்ல, சோதனையே. இந்தமாதிரியான சூழ்நிலையில் அமெரிக்க தேர்தலும் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் தபால் வாக்குகள் பதிவிடுவது அக்டோபர் முதல் வாரமே பெரும்பாலான இடங்களில் தொடங்கப்பட்டது. இதன் முடிவாக சுமார் 10 கோடிக்கும் மேலானோர் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தினார்கள். கடந்த 2016ஆம் தபால் வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கை வெறும் 4 கோடியே 7 லட்சம் பேர்தான். 

 

அமெரிக்க தேர்தலில் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்கு செலுத்துபவர்களின் வாக்குகளையே முதன்மையாக எண்ணுவார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையை இரண்டாம் கட்டமாகதான் எண்ணுவார்கள். இதனால்தான் அமெரிக்க தேர்தல் முடிவை தெரிந்துக்கொள்ள இவ்வளவு கால நேரம் எடுத்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தபால் வாக்குகளை எண்ணக்கூடாது என்று ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகிறார். அதற்கு காரணமும் அவரே, ரிபப்பிளிக்கன் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்பின் பிரச்சாரத்தில், தபால் வாக்கு என்பது சட்ட விரோதமானது, நீங்கள் அனைவரும் நேரில் சென்றுதான் வாக்கு செலுத்த வேண்டும் என்று மக்களுக்கு கரோனா அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் முட்டாள்தனமாக பிரச்சாரம் செய்தார். அவருடைய அறிவியல் திறன் தான் உலகமே அறியுமே!

 

மறுபுறம் டெமொக்ரெட்ஸ் சார்பாக போட்டியிட்ட ஜோ பைடனின் பிரச்சாரத்தில் ஒவ்வொரு முறையும், கரோனா பரவலை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம், தபால் வாக்கு மூலமாகவே முடிந்தவரை வாக்கு செலுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்தார். இதன் பலனாக அமெரிக்க தேர்தலில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 90 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் டெமொக்ரெட்ஸ் கட்சியினர் போட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைவர்க்க பெண்கள், பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக தேர்தல் மையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத கறுப்பின மக்கள் உள்ளிட்ட ட்ரம்ப் கட்சியினரால் கண்டுகொள்ளப்படாத பல்வேறு தரப்பினரின் வாக்குகள் தபால் வாயிலாக பைடனுக்கே சென்றிருக்கும் என்பது பைடன் மற்றும் ட்ரம்ப் இருவருக்குமேயான நம்பிக்கை.

 

தபால் வாக்குகளின் நற்பலன் என்பது பைடனின் வெற்றிக்கே உறுதுணையாக இருக்கும் என்பதே ட்ரம்பின் தற்போதைய அச்சத்திற்கும், அதனையடுத்து அவர் மேற்கொண்டுவரும் அரசியல் மாண்பற்ற சில செயல்களுக்கும் அடித்தளமாய் அமைந்துள்ளது. கரோனாவின் தாக்கத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிபர் தேர்தலில் தபால் வாக்குகள் பதியப்பட்டிருக்கும் சூழலில், இதுவே அதிபர் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய பங்காற்றும் என்பதே இத்தேர்தலில் தபால் வாக்குகளின் முக்கியத்துவத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

 

 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.