Skip to main content

சமஸ்கிருதத்திற்கு அக்கறை! மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

simbu

 

 

கடந்த 2014ஆம் ஆண்டில் எப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றாரோ, அப்போதிலிருந்து இந்தியாவில் மொழி திணிப்பு என்கிற தலைப்பு தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. பிரசார்பாரதி நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கோப்பு எண் 8/38/2020 பி1 என்ற எண் கொண்ட 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில்,  

 

“1) டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும்.

 

2) சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும்” என்று ஆணையிடப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே சமஸ்கிருதத்தில் ஒளிபரப்பப்படும் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இல்லை என்று பலர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இந்த நேரத்தில் மற்ற மாநில மொழியில் ஒளிபரப்பப்படும் துர்தர்ஷன் சேனல்களிலும், சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது என்ன மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களான ஸ்டாலின், ராமதாஸ், சு.வெங்கடேசன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த சுற்றறிகைக்கு உடனடியாக தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

 

கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து சமஸ்கிருதத்திற்கான புரோமோஷன் என்பது பலமடங்காக உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முன்னதாக 1996ல் வாஜ்பாய் பிரதமரானபோது சமஸ்கிருதம் அதிகப்படியாக பரப்பப்பட்டது. பாஜக ஆட்சியமைக்கும்போது இரு மொழிகள் மிக தீவிரமாக பரப்பப்படுகிறது. ஒன்று இந்தி மற்றொன்று சமஸ்கிருதம். வலதுசாரி கொள்கையை கொண்டு செயல்படும் பாஜகவின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருப்பது ‘ஒரே நாடு ஒரே மொழி’. இது ஒன்றுதான் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று பல வருடங்களாக கூக்குரலிட்டு வருகிறது. எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை திணித்தும் வருகிறது.

 

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை 14,000 பேர்தான். குடும்பமாக சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை மிக, மிக சொற்பமாக இருக்கிறது. காரணம், சமஸ்கிருத மொழி தேவ பாஷை என்று முதலில் நம்பப்பட்டு, மக்களின் மத்தியில் புழக்கமில்லாமல், ஒருசிலர் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தனர். இதனால் அது லத்தீன் மொழி போல தற்போது அழிவை நோக்கிய பாதையில் இருக்கிறது.

 

இந்நேரத்தில்தான் பாஜக அதை மீட்டெடுக்க, பல நூறு கோடிகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவு செய்கிறது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 643.84 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு செய்யப்பட்ட மொத்த செலவு ரூ. 29 கோடி மட்டுமே. மற்ற மொழிகளைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு செலவு செய்திருப்பது 22 மடங்கு அதிகம். 

 

இதுமட்டுமல்லாமல், பாஜகவை சேர்ந்த சில முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் சமஸ்கிருதம் குறித்து பல ஜோடிக்கப்பட்ட கருத்துகளை பேசுகின்றனர். இந்தியாவின் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த், 2018ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கணினி மென்பொருள் மொழி மற்றும் அல்காரிதம்ஸ் போன்றவை சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியிருக்கிறது என்றார். இதுபோல பல அறிவியல் பூர்வமான விஷயங்களில் நாசாவை சம்மந்தப்படுத்தி இறுதியில் சமஸ்கிருதத்தில் முடித்து வருகின்றனர். “சமஸ்கிருதத்தில் பேசுவதனால் சர்க்கரை அளவு மற்றும் இரத்தக் கொதிப்பு சீரான அளவில் இருக்கும்” என்று பாஜக எம்.பி. ஒருவர் பேசியிருக்கிறார். 

 

இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் சென்னை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. பின் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிட செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மணி நேர இந்தி நிகழ்ச்சி திணிக்கப்பட்டது. தற்போது பொதிகை உள்ளிட்ட மற்ற மாநில தூர்தர்ஷன் சேனல்களில் 15 நிமிட சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.

 

திருக்குறள், பாரம்பரிய உடை என வெளிப்புறத்தில் பன்முகத்தவராக வெளிப்படும் பிரதமர் மோடியும், அரசும் நிறைவேற்றும் திட்டங்களில் மட்டும் ஒருதலைபட்சம் இருப்பது ஏன்? சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் இந்த அக்கறை? இந்தி, சமஸ்கிருதம் அல்லாத மற்ற இந்திய மொழிகளுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

 

 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.