Skip to main content

இப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு...  ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

"இப்ப தெரியுதா மோடிஜி ஏன் தமிழர்களையும், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் என்று. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத சாயம் பூசத்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்'' -இப்படிக் கேட்பது கிராமத்து டீக் கடையில் இருந்து தினசரி பத்திரிகையை படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்த விவசாயி. அவர் சொல்வதிலும் முற்றிலும் உண்மைகள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. 
 

bjp



தாய்லாந்து மொழி'யில் திருக்குறளை வெளியிட்ட அடுத்தகணமே திருவள்ளுவருக்கு பா.ஜ.க. இணையதளத்தில் காவி பூசப்பட்டு பட்டையும், கொட்டையும் சார்த்தப்படுகிறது. அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் கிராம மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை சரிசெய்யப்பட்டது. சிலை அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தஞ்சை தமிழ்ப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சிலையை அவமதித்த நபரை விரைவில் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் வழக்கம்போல யாரையும் பிடிக்கவில்லை. (போராட்டங்கள் வலுப்பெற்றால் கடைசியில் ஒரு சைக்கோ செய்தான் என்று வழக்கு முடித்து வைக்கப்படும் என்பது வேறு)

 

dk



இந்த நிலையில்தான் 6-ந் தேதி தஞ்சை ராஜராஜன் சதய விழாவிற்கு தலைவர்கள் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அந்த வகையில்தான் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு தனது ஆதரவாளர்கள் சிலருடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்றார். திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, உத்திராட்ச மாலை அணிவித்து, திருநீறு பூசி, தீபாராதனை காட்டினார். அந்த நேரத்தில் கீழே நின்றவர்கள் "ஓம் காளி... ஜெய் காளி' என்று கோஷங்களை எழுப்பி திருவள்ளுவரை காவிகளின் தலைவராக்கினார்கள்.

 

bjp



திருவள்ளுவருக்கு காவி அணிவித்த பிறகு ராஜராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடமாக சொல்லப்படும் உடையாளூர் சென்று மாலை அணிவித்துவிட்டு, வெளியே வந்தபோது வல்லம் டி.எஸ்.பி. சீதாராமன் தலைமையிலான போலீசார் அர்ஜுன் சம்பத், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரை கைதுசெய்து தஞ்சை பல்கலைக்கழக காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அதற்குள் பல இடங்களில் இருந்தும் போலீசாருக்கு நெருக்கடி.


இந்த நிலையில்தான் பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி, கார்த்திக் ராவ் உள்ளிட்ட 3 பேர் மீதும் கலகம் செய்யத் தூண்டுதல், மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பான விரோத உணர்வுகளைத் தூண்ட முயற்சி செய்தல், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இத்தனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தாலும் பல நெருக்கடிகளால் சிறைக்கு அனுப்ப வேண்டியவரை அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்த போது... 20-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனச் சொல்லி அனுப்பினார்கள்.

 

Seshan


 

வெளியே வந்த அர்ஜுன் சம்பத், "காலங்காலமாக திருவள்ளுவரை இப்படித் தான் பார்த்தோம். அதன்படியே நாங்களும் வழிபட்டோம். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால்தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். இந்நிலையில்... பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை மீதான காவி அடை யாளம் அகற்றப்பட்டு சிலையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாட்டில் தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம் என்று அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் திருவள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால்தான் இதுவரை எந்த அமைப்பும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் பா.ஜ.க. மதச்சாயம் பூசி இந்துவாக்க நினைக்கிறது.


ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? என்ற நமது கேள்விக்கு, சாமானிய மக்கள் சொல்லும் பதில்... பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத நிலையில் அந்த இடங்களில் இப்படி "இந்து' என்கிற மதச் சாயத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் கால்ஊன்ற நினைப்பது வழக்கம். அதாவது கட்சிகள் மாறி இருந்தாலும் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கவர்ந்து தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் என்பதற்காகத்தான் இப்படிக் கிளப்பி விடுகிறது.

அதுபோலத்தான் இப்ப திருவள்ளுவரை கடவுள் ஆக்கிவிட்டால், அதை தமிழகத்தில் உள்ள திராவிட, தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்க்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் "இந்து கடவுளை எதிர்க்கிறார்கள்' என்று பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்று எதிர்க்கும் கட்சிகளில் உள்ள கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.

ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. தாமரையை மலர வைக்க வள்ளுவர் உதவமாட்டார் என்பதை அவர்கள் உணரவில்லை. இதற்கு அ.தி.மு.க. அரசும் துணைபோகிறது. அதனால்தான் அமைச்சர் பாண்டியராஜன், "திருவள்ளுவர் இந்து என அவர்கள் சொல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சிலுவை போட்டாலும், இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்தாலும் நாங்கள் ஏதும் சொல்வதற்கில்லை'' என்றார்.

பிள்ளையார்பட்டி வள்ளுவர் சிலைக்கு காவி கட்டி, உத்திராட்ச மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத் வகையறாக்கள், சிதம்பரம் நடராஜர் சிற்றம்பலத்தில் திருக்குறளையோ, தேவாரத்தையோ பாட முடியுமா? இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மமா? எனக் கேட்கிறார்கள் தமிழக பக்தர்கள்.

 

Ayodhya



 

 

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.