Skip to main content

திருவள்ளுவரும் மீனும்.. - திருகலான கேள்விதான்!

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

“திருவள்ளுவருக்கு மீன் பிடிக்குமா?” என்று கேட்டான் பக்கத்து வீட்டுச் சிறுவன். அவனது கேள்வி மட்டுமல்ல, பார்வையும் ஒரு தினுசாகவே இருக்க, “எதற்காக இப்படி கேட்கிறாய்?” என்றோம்.  கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதைவிட்டு தேவையற்ற கேள்வியை நாம் கேட்பதுபோல் அவன், தனது உடல்மொழியை வெளிப்படுத்த, திருக்குறள் ஒன்றை எடுத்துவிட்டோம்.    

‘வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்  
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று’ 

இக்குறளை அவன் எதிர்பார்க்கவில்லை போலும். திருதிருவென்று விழித்தான். “வெற்றி பெறும் ஆற்றலே இருந்தாலும், சூதாடுவதை விரும்பக்கூடாது. அப்படியே சூதாட்டத்தில் வென்றாலும், அந்த வெற்றியானது தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை இரை என விழுங்கும் மீன், அதில் சிக்கிக்கொள்வது போன்றதே.” என்று விளக்கம் அளித்தோம்.   

 

why meat shops face shutdown on thiruvalluvar day

 

 

அவனோ, “அட,  போங்க அங்கிள்.. இன்னிக்கு என்ன நாள்? எதுக்காகக் கேட்டேன்னு தெரிஞ்சிக்காம, ஸ்கூல்ல பாடம் நடத்துற சார் மாதிரி, திருக்குறளெல்லாம் சொல்லி, போர் அடிக்கிறீங்களே?” என்று கலாய்த்தான்.  

“சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லுங்க தம்பி..” என்று அவனிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம். விஷயம் இதுதான் – இன்று கோழிக்கறி வாங்க தன் தந்தையுடன் கடைக்குச் சென்றிருக்கிறான், அவன். கோழிக்கறிக் கடை மட்டுமல்ல, மட்டன் கடைகளும் பூட்டியிருந்திருக்கிறது. இன்று திருவள்ளுவர் தினம் என்பதால்,  மட்டன் மற்றும் சிக்கன் கடைகளுக்கு விடுமுறை என்பது,  பக்கத்திலேயே திறந்திருந்த மீன் கடைக்காரர் சொல்லித்தான் தெரிந்திருக்கிறது. மீன் விற்கலாம்; இறைச்சியோ, கோழிக்கறியோ விற்கக்கூடாது. மீறி விற்றால், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று மீன் 
கடைக்காரர் கூறியிருக்கிறார். அப்போதே சிறுவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. திருவள்ளுவருக்கு மீன் பிடிக்குமோ என்று. அதனால்தான் நம்மிடம் கேட்டிருக்கிறான்.   

மகாவீர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய ஐந்து நாட்கள் இறைச்சி விற்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது என்ற விபரத்தை அவனிடம் கூறியபோது,  “மீன் அசைவம் இல்லியா?” என்று கேட்டான்.  “மீன் அசைவமும் இல்லை. சைவமும் இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. மீனுக்கு இறைச்சி வகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.” என்று ஏற்கனவே, சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் சொன்ன தகவலைச் சொன்னோம். அவன் சமாதானம் ஆகவில்லை.  

“கடைகளில் ஆடு வெட்ட, கோழியை அறுப்பதற்குத்தான் தடை, மற்றபடி உயிருடன் ஆடுகளையோ, கோழிகளையோ விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அவற்றை வாங்கி,  வீட்டில் கொண்டுபோய் வெட்டியோ, அறுத்தோ, குழம்பு வைத்தால், சட்டம் தலையிடாது.” என்றார், இறைச்சிக் கடைகள் கண்காணிப்பில் இன்று ஈடுபட்டு வரும் அந்தக் காவலர்.  

முட்டை சைவமா? அசைவமா? என்ற கேள்விக்கு, “சைவம்தான்..” என்று விளக்கம் அளித்துள்ளார்கள் டில்லியைச் சேர்ந்த விஞ்ஞானிகள். மீன் குறித்து எதிர்காலத்தில் என்ன பதில் கிடைக்கப்போகிறதோ?  

 

 

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.