Skip to main content

எட்டு நாட்களாகியும் எடப்பாடி எட்டிப்பார்க்காத மர்மம் என்ன?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு கரையேறிய கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் சூறையாடிவிட்டு சென்றது. இந்தத் தாக்குதலில் பல கரையோர கிராமங்கள் காணாமல்போன நிலைக்கு துடைத்தெறியப்பட்டன.

 

cc

 

 

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட ஏழை நடுத்தர மக்களின் எளிய வீடுகள் நாசமாகின. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் அவலம் நேர்ந்தது.

 

 

ஆனால், புயல் ஓய்ந்த மறுநாளே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அருகில் ஓடி நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்ல வேண்டிய அரசு நிவாரண உதவிகளை தயார்படுத்தவே இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

 

 

புயல் வரப்போகிறது, புரட்டிப்போடப் போகிறது என்று இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்து வந்த நிலையில், மக்களுடைய உயிரைத்தான் பாதுகாக்க முடியும், வீடுகளையோ, விவசாயத்தையோ பாதுகாக்க முடியாது என்பதும் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

 

 

cc

 

 

மக்களுடைய அத்தியாவசிய தேவைக்கான, உடனடியாக தேவைப்படும் பொருட்களை மறுநாளே வினியோகிக்க முன்னேற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டாமா?

 

 

மாநிலத்தின் உணவுக்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஏற்படப்போகும் பேரழிவை உணர்ந்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாமனார் ஊருக்குப் போய் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அரசுவிழாவில் ஆடம்பர வரவேற்பை ஏற்கவும் நான்கு நாட்களை செலவு செய்கிறார் என்றால் அவருடைய மனநிலையை நாம் எப்படி புரிந்துகொள்வது?

 

 

ஐந்து நாட்கள் கழித்து மக்கள் ஆத்திரம் வெடித்தவுடன், எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் விமர்சனம் செய்தவுடன் ஹெலிகாப்டரில் பறந்து சேதத்தை பார்வையிடப் போவதாக அறிவிக்கிறார். மறுநாள் பறந்து பார்த்திருந்தாலும் பரவாயில்லை. ஐந்து நாட்களாக போக்குவரத்துக்கு வழியில்லாமல், நிவாரண உதவிகளே கிடைக்காமல் மக்கள் தவித்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் மக்களை சந்திக்கிற நிலையில் முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்தால், மக்களை என்ன நினைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கேட்கத்தானே செய்வார்கள்.

 

 

புதுக்கோட்டையில் செட்டப் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் வேறு பகுதிகளுக்கு செல்லக்கூட முடியவில்லை என்பது எவ்வளவுபெரிய அவமானம். இதை மறைத்துவிட்டு பிரதமரை போய் பார்க்கப் போகிறார்.

 

 

நியாயமாக முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? கோட்டையில் இருந்து நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் வினியோகிக்க உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு இடத்தில் முகாமிட்டு அங்கிருந்து அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை வழியே பயணம் செய்யப் போவதாக அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவித்திருந்தால் முதல்வர் பயணம் செய்யப்போகும் சாலைகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருக்கும். இதுதான் சுயமாய் சிந்தித்து செயல்படும் முதல்வர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

 

சென்னையில் வர்தா புயல் பாதிப்பில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டபோது எவ்வளவு விரைவாக போக்குவரத்து சீராக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கிராமப்புற சாலைகளை அனைத்தும் நிவாரண உதவிகள் செல்லக்கூட வழியில்லாமல் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், கிராம மக்கள்தானே, அவர்கள் எப்படியும் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்டி பாதைகளை சரிசெய்துவிடுவார்கள் என்று அரசு இருந்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

 

 

புயல் தாக்கியவுடன் மறுநாளே மத்திய அரசைத் தொடர்புகொண்டு ராணுவ ஹெலிகாப்டர்களை உதவிக்கு அழைத்திருக்கலாம். ராணுவத்தின் உதவியைக் கூட கேட்டிருக்கலாம். ஓபிஎஸ்சின் தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் கிடைக்கும்போது, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் கிடைக்காதா?

 

 

c

 

 

காமராஜரோ, கலைஞரோ, ஸ்டாலினோ எந்த தயக்கமும் இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நிற்க முடியும்போது, எடப்பாடியால் ஏன் அது முடியவில்லை. அவரும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்தானே. மக்களை மதிக்கிற மகாராஜாக்கள்தான் மக்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடியும் டீக்கடை வைத்திருந்த மோடியும் மகாராஜாக்களைப் போல மக்களை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

 

 

பொதுவாகவே டெல்டா மாவட்டங்களை மொத்தமாக பாலைவனமாக்கி அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், வேதாந்தாக்களுக்கும் தாரை வார்ப்பதில்தான் பாஜக அரசு மிகவும் குறியாக இருக்கிறது. அந்த நோக்கத்தில்தான் காவிரி விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையாக நடந்துகொண்டது. ஆனால், இயற்கை அன்னையின் கருணையில் காவிரி பொங்கிவடியும் அளவுக்கு மழை பெய்துவிட்டது. இப்போது, விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யுமளவுக்கு புயல் புரட்டிப் போட்டிருக்கிறது.

 

 

டெல்டா பகுதி நாசமாகி, மக்கள் பாதிக்கப்படுவதை கார்பரேட் முதலாளிகளின் அரசுகளாக தமிழக அரசும், மத்திய அரசும் எட்டாவது நாளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.