Skip to main content

அமெரிக்காவின் மூத்தகுடியின் இதயம் பெரிதாக இருப்பது ஏன்?

Published on 10/11/2018 | Edited on 12/12/2018

அமெரிக்காவுக்குள் மனிதர்கள் எப்போது நுழைந்திருப்பார்கள் என்பதில் பல குழப்பமான முடிவுகள் இருந்தன. சைபீரியா மற்றும் கிழக்கு ஆசியாவில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் கடந்த பனிக்கட்டிக் காலத்தில் பெரிங் நீரிணை வழியாக வட அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.

 

aa

 

 

பெரிங் நீரிணை மட்டுமல்ல வட அமெரிக்காவின் பெரும்பகுதி பனியாய் உறைந்திருந்தது. அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் வட அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இன்னொரு பிரிவினர் தென்னமெரிக்காவுக்குள் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர்.

 

 

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் மோண்டி வெர்டே என்ற இடத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஆயுதம் கிடைத்தது. அது 14 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது.

 

 

இப்படி தென்னமெரிக்காவில் பயணித்த மூத்தகுடியினர் ஆண்டிஸ் மலையின் உச்சியில் குடியேறினர். வேட்டைக்காரர்களாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர்கள், பிறகு மலைப்பகுதியிலே ஓரிடத்தில் கூட்டமாக வாழத் தொடங்கினர் என்கிறார்கள்.

 

 

j

 

 

பெரு நாட்டின் ஆண்டிஸ் மலை உச்சியில் இப்போது வாழும் பூர்வ குடிகளின் இதயம் விரிவடைந்து பெரிதாகவும், சற்று கூடுதலான ரத்த அழுத்தத்துடனும் வாழ்கிறார்கள். அதாவது ஆண்டிஸ் மலையின் உச்சியில் வாழ்வதற்கு ஏற்றபடி அவர்களுடைய உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது பூர்வகுடிகள் மலை உச்சியிலும் சமவெளியிலுமாக மாறிமாறி வாழ்ந்ததை மாற்றி, உயரமான மலைகளில் தொடர்ச்சியாக வாழத் தொடங்கிய பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 

 

இவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் மலையுச்சியில் வாழத் தொடங்கியிருப்பார்கள். இவர்களுடைய மரபணுக்களை ஆய்வு செய்தால் அந்த காலகட்டத்தை முடிவுசெய்யலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர். அதாவது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூத்தகுடிகள் ஆண்டிஸ் மலையில் வேட்டையாடி, கூடி வாழும் கூட்டத்தினராய் இருந்திருக்கலாம். 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மலையிலேயே வசிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.

 

 

மூன்று வேறுபட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களுடைய புதைக்கும் இடத்திலிருந்து எலும்புகளில் இருந்து மரபணுக்களை சேகரித்தனர். 8 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சோரோ மிகயா பாட்ஜ்ஸா என்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் மரபணுவை சேகரித்தனர். பிறகு, 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விவசாயத் தொழில் செய்த கூட்டத்தைச் சேர்ந்த கைலாசுரோ என்ற கலாச்சார மக்களின் மரபணுவும், ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முந்தைய ரியோ அன்கல்லேன் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் மரபணும் கிடைத்தது.

 

 

அதைத்தொடர்ந்து, இந்த மூன்றுவகை மரபணுக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். சமவெளிகளில் வசிக்கும், பழங்கால, நவீனகால தென்னமெரிக்க மக்களின் டிஎன்ஏவையும், மலையுச்சியில் வசிக்கும்  பூர்வீக அமெரிக்கர்களின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டனர். முடிவில், மலையுச்சியில் நிரந்தரமாக மக்கள் குடியிருக்கத் தொடங்கிய காலம் 8 ஆயிரத்து 750 ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளனர். மலையுச்சியில் வாழ்ந்தவர்களின் உடல்கூறு மாற்றத்துடன் அவர்கள் அதிக அளவில் ஸ்டார்ச்சை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மலையுச்சியில் வாழ்ந்த பூர்வகுடிகள் சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிரிட்டு உணவாகக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், மலையடிவாரத்தில் வாழ்ந்தவர்கள் வேட்டையாடியே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

 

 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.