Skip to main content

“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..!” “நான் என்ன ஏமாளியா?” ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
admk

 

 

எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமை கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.

 

admk

 

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடியும் பன்னீரும் தனித்தனியாக அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்தபோது, நிரந்தர முதல்வரே வருக என எடப்பாடி ஆதரவாளர்களும், வருங்கால முதல்வரே என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டு கோஷ்டி பூசலை அம்பலப்படுத்தினர். அதற்கேற்ப உள்ளேயும் நாகரீகமான முறையில் பூசல் வெடித்தது. 28-ந் தேதி கூடும் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்ட இரு தரப்பும் முஷ்டியை உயர்த்துவதால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு திடீர் மவுசு கூடியுள்ளது.

 

admk

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடக்கும் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஓப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்குவது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமிதான், இம்முறையும் அவரேதான்.

 

‘எனக்கு பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. இருக்கும் என அம்மா(ஜெ.) சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், கட்சியில் சமீபகாலமாக எதிரொலிக்கும் பிரச்சனைகள் ரசிக்கும்படியாக இல்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நீங்கள் ரெண்டு பேருமே (இபிஎஸ், ஓபிஎஸ்.) அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் தி.மு.கவையும் துரோகிகளையும்(தினகரன்) வீழ்த்துவதற்கு பயன்தரும்’’ என்றிருக்கிறார்.

 

admk

 

இதனையடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், "முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்வடைந்திருக்கிறார்கள். தொண்டர்கள் சோர்வடைந்தால் அது கட்சியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி நல்லா இருந்தாதான் ஆட்சியை நாம் மீண்டும் பிடிக்க முடியும். ஆட்சியில் நாம் இருக்கிறோம். ஆனா, இதன் நன்மைகள் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லைங்கிற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் சரி பண்ணுங்கள்'' என்றார்.

 

admk

 

ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகரன், "அம்மாவின் ஆன்மா உண்மையில் ஓ.பி.எஸ்.ஸிடம்தான் இருக்கிறது. அவரது மனதை காயப்படுத்துபோல பல நிகழ்வுகள் நடக்கிறது. அவர் மனம் வருந்தினால் கட்சிக்கு நல்லதில்லை'' என்று முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் எடப்பாடியும் அவருக்கு ஆதரவு அமைச்சர்களும் நடந்து கொள்வதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் பேசிக் கொண்டேயிருக்க, அமைச்சர் உதயக்குமார் சட்டென்று குறுக்கிட்டு, பேச்சின் திசையை மாற்றினார்.

 

 

admk

 

"தேர்தலை எதிர்கொள்ள எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தலைமை அவசியம். அந்த தலைமை உருவானால்தான் ஆட்சியை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்கு முன்பு சின்னம்மா (சசிகலா) விடுதலையாகும்போது அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தால் நமக்கு வெற்றி நிச்சயம்'' என்று உதயக்குமார் சொல்ல, அதனை அமைச்சர் செல்லூர் ராஜு வழிமொழிய, கூட்டத்தில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

 

admk

 

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா எதிர்ப்பு நிலையை துவக்கத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறோம். இப்போ திடீர்னு அவரை மையப்படுத்திப் பேசினால் எப்படி? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை விலக்கி வைத்துவிட்டு, கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற கட்டமைப்புக்குள் நாம் இயங்கிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அவரை உள்ளே நுழைப்பது வீண் பேச்சு. கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்மந்த மில்லைன்னு எல்லோரும் சேர்ந்துதானே முடிவு செய்தோம். இப்போ, அதற்கு மாறாக பேசினால் என்னன்னு நினைக்கிறது? சசிகலா விஷயத்தில் கட்சியில் எடுத்த முடிவுப்படி இத்தனை நாள் பேசிய நான் என்ன ஏமாளியா?''’என்று கோபம் காட்டியிருக்கிறார்.

 

admk

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசிய அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும், "தேவையற்ற பேச்சுகள் இங்கு தேவையில்லை. இந்த தேர்தல் நமக்கு சவாலான தேர்தல். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தலில் நமக்கான வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற அந்தச் சூழலில், சில முடிவுகளை தீர்மானித்திருந்தோம். ஆனால், இன்றைய சூழல்களுக்கு அது தேவையில்லை. அதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லிவிட்டு தேர்தலை சந்திக்கலாம். ஒற்றுமையாக, ஒரு மனதாக விவாதிப்போம்’ என்று சொல்ல, முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கு சரிப்பட்டு வராது. தேர்தலுக்கு பிறகுதான் அதனை முடிவு செய்ய வேண்டும்'' என்று வைத்தியலிங்கம் சொல்லவும் சலசலப்புகள் உருவானது.

 

admk

 

சட்டென்று எழுந்த அமைச்சர் சி.வி. சண்முகம், "முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவான கட்சியாக அ.தி.மு.க.வை விமர்சிப்பார்கள். ஏற்கனவே, இப்படி ஒரு முத்திரை நம் கட்சிக்கு இருந்துச்சு. மீண்டும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வரக்கூடாது. இப்போதுகூட, ஆட்சியில் கிடைக்கும் எல்லா நல்லவைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கே கிடைக்கிற நிலை இருக்கிறது‘’ என்று எடப்பாடியின் சமூகத்தை மனதில் வைத்துப் பேச, எதிர்ப்பு கிளம்பியது. ஆதாரத்துடன் பேசுவதாகவும், கோபத்தை கிளறி, உண்மையைப் போட்டு உடைக்க வைத்துவிடாதீர்கள்'' எனக் காட்டம் காட்டியிருக்கிறார் சண்முகம்.

 

சலசலப்புகள் அடங்கியது. மீண்டும் பேசிய அவர், குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சிங்கிற விமர்சனம் நமக்கு நல்லதல்ல. முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டுத்தான் தேர்தலை சந்திக்கணும்னு மக்களோ தொண்டர்களோ கேட்கலை. அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும்ங்கிறது நம் கட்சியின் பலம். இதில் குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்துவது தேவையில்லாதது'' என்றார் ஆவேசமாக.

 

எல்லாவற்றையும் எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வந்த நேரத்தில், எழுந்த ஓபிஎஸ், "அதிகாரத்துக்கு அடித்து கொள்வது நம் கட்சியில் யாருக்கும் இல்லாத பழக்கம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையாக இருந்து நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் சகோதரர் பழனிசாமியிடம் சொல்லி வருகிறேன். அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆட்சியும் கட்சியும் வலிமையாக இருக்க எந்த தியாகம் செய்யவும் நான் தயார். என்னை சந்திப்பவர்களிடமும் இதைத்தான் சொல்லி வருகிறேன்.

 

admk

 

நாம் தீர்மானித்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைப்பதுதான் ரொம்ப முக்கியம். இதனை அமைப்பதில் நாம் ஏன் சுணக்கம் காட்ட வேண்டும்? கட்சிக்குள் முரண்பாடுகள் வந்தால் அதனை சரி செய்ய வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்ங்கிற யோசனை சொன்னவர் நீங்கள்தான். இப்போ, அதற்கு எதிராக இருக்கிறீர்கள். வழிகாட்டும் குழுவை அமைத்து அதன் வழியாக தேர்தலை சந்திப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார் ஒரே போடாக.

 

இதனை ஏற்க மறுத்த எடப்பாடி, "கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம். இதுதவிர, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளோடு விவாதித்துத்தான் எடுக்கிறோம். அப்படியிருக்க புதிதாக ஒரு குழு எதற்கு? தேவையற்ற மனக்கசப்புகளும் குழப்பங்களும்தான் வரும். 11 பேர் எனில் அனைத்து சமூகத்தினரையும் இதில் திருப்திப்படுத்திட முடியுமா? வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா? அதனால் வழி காட்டும் குழுங்கிறது தேவையில்லாதது” என்று சொல்ல, கொங்கு அமைச்சர்களும், எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்கும் மற்ற அமைச்சர்கள் சிலரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

 

இதனையடுத்து, செயற்குழு-பொதுக்குழுவினை கூட்டி இறுதி முடிவை எடுக்கலாம் என கே.பி.முனுசாமி சொல்ல, அதனையடுத்து வருகிற 28-ந்தேதி செயற்குழுவை கூட்டுவது என முடி வெடுத்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அறிவிப்பு செய்தனர். கூட்டமும் முடிவுக்கு வந்தது.

 

கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவு அமைச்சர்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, "அனைத்து அமைச்சர்களையும் சுதந்திரமாக இயங்க அனுமதித்தும் என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? என்னை விட்டு விடுங்கள். யார் தலைமையில் வேண்டுமானாலும் தேர்தலை சந்தியுங்கள். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வது நான். ஆனா, எனக்கு எதிராகத்தான் இருப்பார்களெனில், நானும் தடலாடி அரசியல் செய்துதான் ஆக வேண்டுமா?'' என்று வெடித்திருக்கிறார் எடப்பாடி. அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் சமூக அமைச்சர்களை தவிர்த்து மற்ற சமூகத்தின் அமைச்சர்கள், மா.செக்கள் அனைவரையும் தன் தலைமையில் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஏற்கனவே, இது குறித்து ஒரு ரவுண்ட் பேசி முடித்துள்ள ஓபிஎஸ், தற்போதைய ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் அவர்களிடம் விவாதித்துள்ளார். 28-ந்தேதிகூடும் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியும், அதனை தடுக்கும் வியூகத்தில் ஓபிஎஸ்சும் தத்தம் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். செயற்குழுவில் தனக்கான ஆதரவு குரல்களே அதிகம் எதிரொலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் எடப்பாடி, அதற்காக என்ன விலை கொடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறார்.

 

admk

 

அதனை முறியடிக்க, ஜூனியர் அமைச்சர்கள், மா.செ.க்கள், ஒ.செ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு, "எடப்பாடியின் ஹிட் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள்; உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை; அவரையா நீங்கள் ஆதரிக்க போகிறீர்கள்?'' என எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் பேசி வருகின்றனர். செயற்குழுவில் வலிமைகாட்ட ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வியூகம் அமைப்பதால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்தபடி இருப்பதால் வெல்லப்போவது யார்? என்கிற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது.

 

 

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.