ADVERTISEMENT

அமைதிக்கான நோபல் பரிசு; யார் இந்த நர்கீஸ் முகமதி ?

10:28 AM Oct 07, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஈரானில் மகளிர் உரிமைக்காக மட்டுமின்றி மனித உரிமைகளுக்காகவும் போராடிவரும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்கீஸ் முகமதி ஈரானில் உள்ள சாஞ்சான் நகரில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். கராஜ் மற்றும் ஓஷ்னவியே ஆகிய பகுதிகளில் வளர்ந்த இவர் இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றார். அவர் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் எழுத்தின் மேல் ஆர்வத்தால் பல கட்டுரைகளை எழுதினார். பட்டம் பயின்ற பின், தன் வாழ்க்கையை தொழில்முறை பொறியாளராக தொடங்கி பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து அவர், பிரபலமான மாணவர் செய்தித்தாள் நிறுவனத்தில் இணைந்து பெண்களின் உரிமைகளை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதினார். அதில் ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததற்காக கடந்த 1998ஆம் ஆண்டு முதன் முதலாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தார்.

அதன் பிறகு, கடந்த 1999ஆம் ஆண்டில் சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள் நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றிய தாகி ரஹ்மானியை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திற்கு பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இந்த சூழலில், தாகி ரஹ்மானி வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். ஆனாலும், நர்கீஸ் முகமதி தனது மக்களுடைய உரிமைக்கான குரலை நிறுத்தவில்லை. இதையடுத்து இவர், ஒரு அரசியல் மாணவர் குழுவில் இணைந்து பெண்களின் விடுதலைக்காகவும், எளிய மக்களுக்காகவும் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார். இதன் காரணமாக, அவர் இரண்டு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

12 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த முகமதியின் கணவர் தாகி ரஹ்மானி பிரான்ஸுக்கு குடிபெயர்ந்துவிட்டார். ஆனாலும், முகமதி ஈரானில் இருந்து கொண்டே தனது மனித உரிமை பணிகளை தொடங்கினார். அதில் பெண்களின் உரிமைகள் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை என எளிய மக்களின் விடுதலைக்காக பல பிரச்சாரங்களை செய்து வந்தார்.

இதன் பின்பு, நர்கீஸ் முகமதி பல சீர்திருத்த செய்தித்தாளில் பத்திரிக்கையாளராக பணியாற்றி பல போராட்டங்களை நடத்தினார். அதனை தொடர்ந்து, கடந்த 2003ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரானிய பிரபல எழுத்தாளரான எபாடி தலைமையிலான மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராக சேர்ந்தார் நர்கீஸ். அங்கு, 'The Reforms', 'The Strategy and the Tactics' போன்ற மக்களின் விடுதலைக்காக பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார். அதில் குறிப்பாக, அவர் எழுதிய 'White Torture: Interviews with Iraninan Women Prisoners புத்தகம் சர்வதேச திரைப்பட விழாவிலும், மனித உரிமை மன்றத்திலும் சிறந்த புத்தகம் என்ற விருதையும் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2009ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் லாங்கர் விருது, UNESCO/ Guillerno Cano World Press Freedom விருதையும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு, கடந்த 2011 ஆம் ஆண்டில் அவர், மக்களின் விடுதலைக்காக போராடி சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவியதன் காரணமாக போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதில் அவருக்கு சில ஆண்டுகள் சிறையில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை ஆகி வெளியே வந்தார். அதன் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டில், புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முகமதி மீண்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிறையில் இருந்த முகமதி உட்பட பல பெண்கள் சிறையில் பல பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். அதுமட்டுமல்லாமல், முகமதிக்கு 75க்கும் மேற்பட்ட கசையடிகளும் வழங்கப்பட்டது.

அவரது துணிச்சலான போராட்டம் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை அவர் 13 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த முகமதி இதுவரை 154 கசையடிகள் வாங்கியுள்ளார். 2003ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு பிறகு, அமைதிக்கான நோபல் பரிசை நர்கீஸ் முகமதி வென்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை 19வது பெண்ணாகவும், இரண்டாவது ஈரானியப் பெண்ணாகவும் பெற்றுள்ள முகமதி, பெண்கள் உரிமைக்காக போராடி இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதே கள எதார்த்தம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT