Skip to main content

ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்?

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாகக் கூறித்தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 

indirani mukherjee

 

 

இந்திய தொலைக்காட்சிகளில் புகழ்பெற்றவரான பீட்டர் முகர்ஜியும் அவருடைய இரண்டாவது மனைவியான இந்திராணி முகர்ஜியும் இணைந்து உருவாக்கியதே ஐஎன்எக்ஸ் மீடியா.
 

இந்த மீடியா தனது பங்குகளை விற்பதற்கும், சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியை பெறுவதற்கும் ப.சிதம்பரம் உதவியதாகத்தான் சிபிஐ மூலம் பாஜக அரசு குற்றம்சாட்டுகிறது.
 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 2018 ஜூன் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்கிறார். அந்த மனு மீதான விசாரணை 2019 ஜனவரி 25 ஆம் தேதி முடிகிறது. ஆனால், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கவுர் அறிவிக்கிறார்.
 

இதற்கிடையே பாஜக பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 2019 ஜூலை மாதம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவராக அதாவது அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புதல் அளிக்கிறார். அவர் இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா? மகளை கொலை செய்த வழக்கில் கணவர் பீட்டர் முகர்ஜியுடன் சிறையில் இருக்கிறார் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
 

இப்படிப்பட்ட ஒருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புக்கொண்டவுடன், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறார் கவுர். அதாவது, ஒரு முன் ஜாமீன் வழக்கில் சுமார் ஒரு ஆண்டு கழித்து தீர்ப்பு வெளிவருகிறது.
 

சரி, இப்போ இந்திராணி முகர்ஜி விவகாரத்துக்கு வருவோம். அவருடைய கதையைக் கேட்டால் மூக்கைப் பொத்திக்கிற மாதிரி இருக்கு.
 

1972 ஆம் ஆண்டு அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் உபேந்திரகுமார் போராவுக்கும் துர்கா ராணிக்கும் பிறந்தவர் இந்திராணி. இவருக்கு பொறி போரா என்றுதான் பெயர் வைத்தார்கள். பிறகுதான் பெயரை மாற்றியிருக்கிறார்.
 

indrani peter


10 ஆம் வகுப்பு படிக்கும்போது கவுகாத்தியில் உள்ளூர் பூசாரி ஒருவருடன் சில காலம் காணாமல் போனாராம். பிறகு தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தார்கள். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது, 1987 ஆம் ஆண்டு விண்ணுப் பிராசத் சவுதரி என்பவரை காதலித்தாராம். சுமார் நான்கு மாதங்கள் இந்திராணியுடன் உறவில் இருந்ததாக விண்ணுப் பிரசாத்தே கூறியிருக்கிறார்.
 

12 ஆம் வகுப்பு முடித்து ஷில்லாங்கில் உள்ள லேடி கேண் காலேஜில் சேர்ந்தார் இந்திராணி. காலேஜில் படிக்கும்போதே 1988ல் சித்தார்த்தா தாஸ் என்பவருடன் லிவிங் டுகெதெர் என்ற அடிப்படையில் திருமணம் செய்யாமலே குடித்தனம் செய்திருக்கிறார். இருவருக்கும் 1989 பிப்ரவரி 11ல்  சீனா போரா என்ற மகளும், 1990ல் மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்திருக்கிறார்கள். மகன் பிறந்த ஆண்டே காதலனைப் பிரிந்து, கவுகாத்திக்கு வந்த இந்திராணி, தனது பிள்ளைகள் இருவரையும் பெற்றோருக்கே தத்துக்கொடுத்தார். 
 

அடுத்து கொல்கத்தாவில் தங்கி கணிணி வகுப்புகளுக்கு சென்றார். அங்கு சஞ்சீவ் கண்ணா என்ற தொழில் அதிபரை வளைத்துப் போட்டிருக்கிறார். இருவரும் 1993 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 1997ல் விதி கண்ணா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பத்தோடு மும்பைக்கு மாறினார்கள்.
 

2002 ஆம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை சந்தித்தார் இந்திராணி. அவரைச் சந்தித்த வேகத்தில் சஞ்சீவ் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு பீட்டரை திருமணம் செய்தார். அதைத்தொடர்ந்து மகள் விதி கண்ணாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பீட்டரும் விதி கண்ணாவை சட்டப்படி தனது மகளாக தத்தெடுத்தார்.
 

இந்நிலையில்தான் பெரியவர்களா வளர்ந்துவிட்ட தனது முதல் பிள்ளைகளான சீனா போரா, மைக்கேல் போரா ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் இந்திராணி. தனது பிள்ளைகளையே சகோதரி என்றும் சகோதரன் என்றும் பீட்டரிடம் அறிமுகப்படுத்தினார். சீனா போராவை 2006 ஆம் ஆண்டு மும்பைக்கு அழைத்து வந்த இந்திராணி, கல்லூரி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்தார். பீட்டருடன் இணைந்து 2007 ஆம் ஆண்டுதான் ஐஎன்எக்ஸ் மீடியாவை தொடங்கினார். அதன்பிறகு பீட்டரும், இந்திராணியும் மும்பை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல், ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா ஆகிய நகரங்களில் மாறிமாறி வாழ்க்கையை நடத்தினர். இந்நிலையில்தான் 2012 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு சீனா போரா காணாமல் போனார்.
 

இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மும்பை போலீஸார் இந்திராணி முகர்ஜியை கைது செய்தனர். தனது மகளான சீனா போராவையே தங்கை என்று கூறியதும், அவளை கொலை செய்திருப்பது நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பீட்டரும் சிறையில் இருக்கிறார்.
 

sheena bora

 

 

இப்பேர்பட்ட நேர்மையான பெண்மணியான இந்திராணி முகர்ஜிதான் இப்போது ப.சிதம்பரத்துக்கு எதிராக அரசுச் சாட்சியாக மாற ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 


 

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.