Skip to main content

நித்தியானந்தாவை தேடி நிறைய பேர் வர காரணமான முக்கியமான நபர்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்! 

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

நித்தியானந்தாவின் ஆன்மிக சாம்ராஜ்யத்தில் இன்னொரு மர்ம மரணம் நடந்திருக்கிறது. இந்த மரணம் நித்தியை நிச்சயம் சிக்க வைத்து விடும் என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

"மரணம் ஸ்மரித்து மரணம் வென்று, நடந்ததை அகற்றி, நடக்க வருவதை நீக்கி, பரமசிவன் அன்பை பெற்று பரமனாக இரு'' என தனது கடைசி முகநூல் பதிவாக எழுதிய ஒரு இளைஞர் இமயமலையில் மரணமடைந்திருக்கிறார். ஏதோ சாகப் போவதை முன்கூட்டியே கண்டவன் மாதிரி மரணமடைந்த இந்த இளைஞனின் பெயர், சதீஷ் செல்வகுமார் என்கிற ஈஷ்வர பிரியானந்தா. ஐ.ஐ.டி. என்கிற முதன்மையான கல்வி நிலையத்தின் கரக்பூர் கிளையில் அழகிய கட்டுமானங்களை கட்டுவது எப்படி என பட்டப்படிப்பும், தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் முடித்த இந்த இளைஞன் ஆன்மிகத்தில் உள்ளவர்கள் பெருமையாக நினைக்கும் கயிலாயத்திற்கு மிக அருகில் இந்திய நேபாள எல்லைப் பகுதியில் ஒரு காரில் இறந்து கிடந்தார்.

nithy



சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பெங்களூருவில் நித்தியிடம் ஆசிரமத்தில் இணைந்தார். இவர் மட்டும் இணையவில்லை. இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் தங்களது சொத்துக்களை நித்தியிடம் கொடுத்துவிட்டு நித்தியின் ஆன்மிக பயணத்தில் இணைந்தார்கள். நித்தி கடந்த பத்து வருடங்களாக கட்டுவதாக சொல்லி நிதி வசூலித்துக் கொண்டிருக்கும் தங்கக் கோயிலின் வடிவமைப்புகள் இணையதளத்தில் அடிக்கடி வெளிவரும். தேவலோகத்தை நினைவுபடுத்தும் அதன் வடிவழகை வடிவமைத்தவர் தான் இந்த சதீஷ். சதீஷின் கை வண்ணத்தில் உருவான வடிவங்கள் இந்து மதத்தில் பற்றுள்ள கோடீஸ்வரர்களை நித்தியின் பக்கம் கொண்டு வந்தது.

nithy



அந்த தங்க கோயிலை பற்றி நித்தியின் சத்சங்கத்தில் அருமையாக சதீஷ் பேசுவார். கோயில் மட்டும் கட்டப்படவேயில்லை. பலர் கோடிக்கணக்கில் நித்தியிடம் கொடுக்க, நித்தியின் சொத்து ஆறாயிரம் கோடியைத் தாண்டியது. தங்கக் கோயில் பற்றி அதிகம் பேசும் சதீஷிடம் பணம் கொடுத்த கோடீஸ்வரர்கள் விளக்கம் கேட்க, ஒரு கட்டத்தில் அவர் ஏடாகூடமாக பேசினார் என நித்தி அவரை பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் ஆசிரமத்திற்கு தூக்கி அடித்து விட்டார். குஜராத் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியை நிர்வகித்த பிரான் பிரியானந்தா, பிரிய தத்துவ ரித்திகரன் ஆகியோருக்கு உதவி செய்வதே இவருக்கு வேலை என நித்தி அனுப்பி வைத்தார். குஜராத்தில் இருந்துதான் ஜனார்த்தன சர்மாவின் மகள்களான லோப முத்ர ஷர்மா, நந்திதா ஷர்மா ஆகியோர் காணாமல் போனார்கள்.
 

nithy



ஜனார்த்தன சர்மாவின் புகாரை தொடர்ந்து குஜராத் மடத்தை ரெய்டு செய்த போலீசார் அங்கிருந்த குழந்தைகளை மீட்டார்கள். அந்த குழந்தைகளை அடைத்து வைத்திருக்கிறார்கள். பிச்சை எடுக்க வைத்தார்கள் என பிரியானந்தா ரித்திகரன் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்தார்கள். ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் காணாமல் போனதற்கும், சிறிய குழந்தைகளை அங்கீகாரமில்லாத பள்ளியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதற்கும் நித்தியை முதல் குற்றவாளியாக்கினார்கள்.

தப்பிப் போன ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் "நீதிமன்ற உத்தரவுப்படி ஜமைக்கா நாட்டில் இருக்கிறோம். நித்தியின் கைலாசா நாட்டில் இல்லை' என ஜமைக்காவின் இந்திய தூதரகம் மூலம் குஜராத் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்தார்கள். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் "ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் நித்தியுடன்தான் இருக்கிறார்களா? இந்த பெண்கள் எப்படி ஜமைக்காவுக்கு சென்றார்கள்? இந்தியாவில் எந்த விமான நிலையம் வழியே சென்றார்கள். நித்தி அவர்களுடன் சென்றாரா? இல்லை தனியாக சென்றார்களா?' என எண்ணற்ற கேள்விகளை எழுப்பியது. ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் நேபாளம் வழியாக தப்பிச் செல்ல உதவியவர் சதீஷ் செல்வகுமார் என குஜராத் மாநில போலீசார் விசாரித்து வந்தனர்.


"அது தொடர்பாக அவரை கைது செய்து விசாரிக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் சதீஷ் மர்மமான முறையில் இந்திய நேபாள எல்லையில் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மர்ம மரணத்தை பற்றி விசாரித்து வருகிறோம். கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய சதீஷின் மரணத்தில் சந்தேகம் உள்ளது'' என சொன்ன குஜராத் மாநில போலீசார் ""நித்தியுடன் இருக்கும் யாருடைய உயிருக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இப்பொழுது நித்தியுடன் இருக்கும் ஜனார்த்தன சர்மாவின் மகள்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை'' என கோர்ட்டில் தெரிவித்தனர். அதைக் கேட்ட நீதிபதிகள் "நித்தியை ஏன் கைது செய்யவில்லை' என கேள்வி எழுப்பினார்கள். ""நித்திக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோர்ட் ஒரு வாரண்ட் பிறப்பிக்குமானால் ப்ளூ கார்னர், ரெட் கார்னராகிவிடும். அதன்பிறகு நித்தியை கைது செய்வது எளிதாகிவிடும்'' என்ற போலீசாரிடம் ""இந்த வழக்கில் விரைவில் நீங்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் விசாரணைக்கு வராத நித்தியின் மீது நாங்கள் வாரண்ட் பிறப்பிக்கிறோம்'' என குஜராத் உயர்நீதிமன்றம் சொல்ல நித்தியின் தரப்பு அலறிவிட்டது.

இதற்கிடையே கர்நாடகாவில் நடந்து வரும் வழக்குகளும் இறுதிக் கட்டம், வாரண்ட், கைது என போனதில் நித்தி அதிர்ச்சி அடைந்தார். இதற்காகத்தான் சதீஷ் கொல்லப்பட்டார் என்கிறது நித்தி ஆசிரம வட்டாரம்.

சதீஷ் குஜராத்தில் இருந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்தபோது ஜனார்த்தன சர்மாவின் மகள்களுக்கு நித்தி ஆபாச மெசேஜ் அனுப்பினார். அந்த சமயம் குஜராத்தில் இருந்த மகள்களின் செல்போனில் அதைப் பார்த்த ஜனார்த்தன சர்மா நித்திக்கு எதிராக புகார் கொடுத்தார். அவரது புகாரை ஏற்று உடனடியாக குஜராத் ஆசிரமத்திற்குள் போலீஸ் புகுந்தது. அங்கு இருந்த லேப்டாப்புகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு சென்றது.

குருகுலப் பள்ளி என்ற பெயரில், சிறு பெண்களிடம் ஒரு வாட்ஸ் அப் குரூப் மூலம் ஆபாச மெசேஜ்களை நித்தி பரிமாறிக் கொண்டிருந்தார். அவற்றை அறிந்த போலீசார் அங்கிருந்த சதீஷிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். சதீஷ் தனது காரில் செல்ஃப் டிரைவிங் செய்து ஜனார்த்தன சர்மாவின் மகள் களை நேபாளம் வரை கொண்டு சென்றது எப்படி? அவர்கள் அங்கிருந்து எந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றார்கள். நித்தி எப்படி வெளிநாடு சென்றார். நித்தி இல்லாதபோது அவர் கையெ ழுத்து போட்ட செக்குகள் எப்படி வருகின்றன. தங்க கோயில் கட்ட யார் பணம் தந்தார்கள். அவர்கள் ஏன் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு போட்டார்கள் என பல விவரங்களை சதீஷிடம் கேள்வியாக்கினார்கள். சதீஷிடம் விசாரணை கடுமையானதை தொடர்ந்து சதீஷ் பிணமானார் என்கிறார்கள் நித்தி ஆசிரமவாசிகள்.


"சதீஷின் மரணம் மர்ம மரணம் அல்ல' என அவரது உறவினர்களையே பேச வைத்துள்ளார் நித்தி.

இன்னமும் நித்தியின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், சதீஷின் உடலை எந்த போஸ்ட் மார்ட்டமும் செய்யாமல் வாரணாசியில் வைத்து எரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்கிறார்கள் நித்தி ஆசிரம வாசிகள்.

"சதீஷ் போனாலென்ன அவரது லேப்டாப் எங்கள் கையில் உள்ளது. அதில் நித்திக்கு எதிராக ஏராளமான சாட்சிகள் உள்ளன'' என்கிறது குஜராத் போலீஸ். இப்படி நிலைமை தனக்கு எதிராக வருவதை கண்ட நித்தி, எச்.ராஜா மூலம் பா.ஜ.க.விற்கு தூது விட்டுள்ளார். குருமூர்த்தி, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் நித்திக்கு எதிராக எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் எச்.ராஜா வின் முயற்சி வேலை செய்கிறது'' என்கிறார்கள் நித்தியின் தீவிர எதிர்ப்பாளர்கள்.

ஏற்கனவே பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் நடந்த சங்கீதாவின் கொலையை விசாரிக்க மத்திய அரசின் உள்துறை பிறப்பித்த உத்தரவு, கர்நாடக உயர்நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் போன்றவை நித்தியின் வழக்கை தள்ளிப் போடுவதற்கு எச்.ராஜாவின் முயற்சிகள் காரணமாக இருக்கும் என சந்தேகப்படுகிறார்கள் நித்தியின் எதிர்ப்பாளர்கள்.

ஆனால் தொடர்ந்து கொலை, ஆள்கடத்தல், செக்ஸ் புகார்கள் என நித்தியின் கிரைம் ரேட் அதிகமாவது, நித்தியை ஆதரித்து பேசுபவர் களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்